Tuesday 25 December 2012

மனக்கடலில் சிறு படகு

மனக்கடலில் சிறு படகு
மனசை வானம் என்பதா?
குகை என்பதா?
கடல் என்பதா?
எண்ணங்களை பெரும்பாலோர்  அலைகளுக்கே ஒப்பிடுகிறார்கள். நினைவலைகள் என்கிறார்கள். எண்ண அலைகள் என்கிறார்கள். வானத்தின் மேகங்களுக்கோ சிந்தும் தூறல்களுக்கோ ஒப்பிடுவதில்லை. சிலர் தான் குகைக்கு ஒப்பிடுகிறார்கள். புதுமைப் பித்தனின் மனக்குகை ஓவியங்கள் நினைவுக்கு வருகின்றன. குகைக்குள்ளும் ஓவியங்களை அழிக்கிற அலைகள் வந்து நிரம்புகின்றன.
மனம் எல்லையற்ற மகாசமுத்திரம் போன்றது என்று தோன்றுகிறது. அதன் வீச்சுக்கும் விசாலத்திற்கும் எல்லைகளே இல்லை. அதுவே படைக்கிறது. அதுவே காக்கிறது. அதுவே அழிக்கிறது.
இந்தச் சிறிய புத்தகத்தில் அதன் விசாலத்தையும் வீச்சையும் என் சக்திக்கேற்றவாறு காட்ட முயற்சித்திருக்கிறேன்.மனித மனத்தின் சக்தியை ஒப்பிடும்போது அவனது உடலின் சக்தி சிறு படகு தான். அதைக் கொண்டு தான் அந்த மனமெனும் மாகடலைக் கடந்து கடந்து அவன் லட்சிய எல்லைகளைத் தொட முயல்கிறான்
 மனம் ... பொதுவான மனித மனம் ஒரு மகாசமுத்திரம். என் சக்தி சிறியது. சிறு படகு போல.என் படகை வைத்து நான் எட்டித் தொட்ட துறைமுகங்களை சிறுசிறு எழுத்துச் சித்திரங்களாக்கித் தொகுத்திருக்கும் முயற்சி இது. நேர்மையான பணிவான முயற்சி. வாசிக்க நேரம் கிடைக்கும்போது அன்பு கூர்ந்து வாசிதது என் படகு லக்கு லகான் இல்லாமல் பயணம் போன வழியைச் சற்று பாருங்கள்.பிடிக்கும். பிடிக்காமல் போனாலும் உங்கள் மனப்படகு தன் பயணத்தில் உங்களை இழுத்துச் செல்லும்.

No comments:

Post a Comment