Sunday 23 December 2012

மனம் என்ற மகாசமுத்திரம்

மனம் என்ற மகாசமுத்திரம்

அது ஒரு மாலை நேரம். சூரிய கோளம் செம்பரிதியாகி மேற்குத் திசையில் சிறுகச் சிறுக அமிழ்கிறது. விடை பெறுவது மாதிரி, அவள் எருமைகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தெரியும். ஒரு சமீபத்திய மணமகள். அவள் சிரிக்கும்போது தான் அவள் எவ்வளவு கறுப்பு என்று தெரியும். எப்போது சிரித்தாலும் அவள் கண்கள் இணைந்து சிரிக்கும். அதுதானே நிஜமான சிரிப்பு கூட ஒரு சோகமும் உண்டு. பளீரென்று எரியும் தீபத்தின் கீழே, அதைத் தாங்கும் பீடத்தின் பக்கத்தில் அதன் நிழல் படிவது மாதிரி.
அவள் வரும் பாதையில் நிழல்கள் மறைந்துவிட்டன. அந்தி வேளை. கருவேலங்காடு மாதிரி, ஏரியில் நட்ட மரங்கள். அங்கங்கே குட்டையில் நீர் தேங்கி, நீலமான வானவெளியை, நீர்க்கோலப் பூச்சி போடும் வட்டங்களில் நெளியும் திரையாகப் பிரதிபலிக்கிறது. சிள்வண்டுகள் தங்கள் ராக்காலப் பாராயணத்தைத் தொடங்கி இருந்தன. எப்போதோ பறக்கும் காகத்தின் குரல் கேட்டு அவை திடுக்குற்று ஒரு கணம் மௌனமாயின. மீண்டும் தொடர்ந்தன.
நான் சாயந்திர உபாதை நீக்க வந்தவன், அவள் முன் எதிர்ப்பட்டேன். என்னை அவள் கவனிக்கவில்லை. காட்டோரமாக எருமை மேய்த்துத் திரும்புகிறாள். உச்சிக்குப் பின் போயிருப்பாள். காலையெல்லாம் வீட்டு வேலை. பிறகு காட்டோரம் இந்த வேலை.
அவள் கணவன் ஒரு விறகு வெட்டி செருக்கான இளமை திடகாத்திரமான உடம்பு. அவன் கைகள் காய்ப்புக் காய்த்திருக்கும். வீட்டிற்கு விறகு வாங்கிச் சில்லறை தரும்போது அந்தக் கையைப் ஸ்பரிசித்திருக்கிறேன்.
நிலா உதைக்கப்பட்ட பந்து போல் கிழக்கே தோன்றுவதை அவள் கவனித்தேன். அவள் உதடுகள் நெகிழ்ந்து ஒரு தினத்தின் உழைப்பால், களைத்திருந்த முகத்தின் இருள் போனது போல் புன்னகை செய்தாள். அவள் எதை நினைக்கிறாள்? வந்திருக்கும் இரவையா... சென்றுபோன இரவையோ... அவள் சமீபத்திய மணமகள். ஓ! இந்நேரம் அவள் கணவன் வீடு திரும்பி இருப்பான். ஒரு தினத்தின் உழைப்பை மற்றொரு தினத்திற்குப் பிரஷ்டம் செய்துவிட்டு அவளது விறகு வெட்டியின் கரடு முரடான கரங்களில் ஒரு நிலவெரியும் இரவில், கண்துயில அவள் போய்க் கொண்டிருக்கிறாள்.
கவலைகள்...உழைப்பு... களைப்பு... இவற்றின் அர்த்தம் சொற்ப நேரமாவது அவளுக்கு மறந்துபோகும். அதற்காக நான் மனப்பூர்வமாக மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியில் நான் ஒரு ஆங்கிலக் கவிதை எழுதினேன். “A Recent bridehood” என்று பெயரிட்டேன்.
Reflections of a recent bride- hood
It’s a mirror of rare
reflections, the lake brimming.
and the lantern’s wick flame
from  a recent bride's hand,
dancing down below
the furling sheets
wipes off a
a little corner
of darkness in water.

     She homes her buffaloes
     back from the freedom
     of the mountain
     and adjoining woods

It’s little late;
just enough to
swell the impatience
of her woodcutter.

      A smile succulent
      reviewed by her
      own profile’s reflection,
     how she has been
      trapped!

Lost something
to attain something,
to respond, to revolt
to yield, to possess,
 how many new cares!.

      A wedlock is a lock
      of  lost keys
      chased on forever.

Her anklets jingle
as her paces
grow faster,
throwing  echoes,
on the route
to silence.
எழுதி முடித்தபின் தோன்றிற்று. இதுவே இந்த மெத்தப் பழைய உலகம் சுழலும் வகைப்பாடு என்று.
எனக்குள் ஒருவேதாந்தி இருக்கிறான். அனேகமாக நம் எல்லோருள்ளும் அவன் இருப்பானே! சற்று நிதானமாகக் கவனித்தால், அவன் குரல் கேட்கும் எந்த அனுபவங்களையும் அவன் உற்றுக் கவனித்து ஒரு மூதறிஞன் போல் சமயங்களில் ஒரு முத்தாய்ப்பு வைப்பான். இப்போது அவன் அப்படி வைத்தான்.
அட போடா வேதாந்தம் என்ற அவனை அதட்டி விட்டு நான் சித்தவெளியில் மேலே நடந்தேன். துயரமும் சோகமும்தான், வேதாந்திக்கு விருந்தாகின்றன. காரணம் என்னவென்று யோசிக்கலானேன்.
நான் திரும்புகையில் ஏரிக்கரை ஓரத்துப் பாதை தெரியாதவாறு ஓர் இருட்டு. சந்திரனுக்கு இன்னும் பிரகாசம் அதிகமாகவில்லை. பாதையோரத்து காரைச் செடிகளில் மின்மினிப் பூச்சிகள் மின்னலாயின. காற்று ஒரு சல்லாத்துணி மாதிரி என் உடம்பை வருடியது. மனம் தெளிந்த குளம் போல்அமைதியாய் இருந்தது. பலர் நடந்து பாதை மண் நடைச் சுகத்திற்கு ஏற்றபடி மிருதுப்பட்டிருந்தது. நடை ஒரு சுகம். காற்று ஓர் ஆனந்தம். கருவேல மரங்களின் கிளைகளினூடே சிறைப்பட்டிருந்த நிலா ஓர் அழகு. மின்மினி சௌந்தர்யம்.
உலகம் கலப்பற்ற ஆனந்தமாக இருக்கிறதே என்று வியந்தேன். வேதாந்தி பேசினான். ‘யாவும் மாயை. பஞ்ச பூதச் சேர்க்கையின் விளைவாய் மனம் வெளியிடும் நினைவுச் சலாகை’ என்றான், நல்லது என்றேன்.
அப்போது தோன்றிற்று. மனிதனுக்கு இன்பம் போதாததால் அவன் துன்பத்தைத் தேடுகிறான் என்று வாழ்க்கை, நிறைந்த கடலாக இருக்கையில் கைகளால் முகந்து அள்ளியோர், தங்கள் கையின் அளவு குறைந்திருப்பது கண்டு, ஐயோ குறைந்திருக்கிறதே என்று ஏங்குகின்றனர்.
ஞானி கையளவு நீரிலும் கடலைக் காண்கிறான். ஒரு துளி நீரிலும் கடலைக் காண்கிறான். குறை, கையினால் அள்ளுவதில் இல்லை. கையையும் கடலையும் ஒப்பிடுவதால் வருகிறது. அள்ளினால் வருத்தம் பெறுவோர் அள்ள வேண்டாம். ஆனந்தமாக வாழ்க்கையில் இறங்கி மூழ்கட்டும்.
விவேகானந்தர் சொன்னார். “இன்பத்தை வரவேற்போர் அது துன்பமாகிய மகுடத்தை அணிந்து வருவதையும் ஏற்க வேண்டும்” என்று.
தேட வேண்டும். ‘அலைய வேண்டாம். ஒன்று தேடியலைவோர், கிடைப்பதில், இருப்பதில் தாம் தேடுவதைக் கூர்ந்து கண்டால் அது இரப்பதைக் காண்பார். எருமை மேய்த்த புது மணப்பெண் பகலின் துன்பங்களை இரவில் இன்பத்தில் மறந்து போகிறாளே அதுபோல்.
எதுவும் நீடிப்பதில்லை. நீடிக்கின்ற எதுவும் துன்பமாகிறது. இன்பம் நீடித்தால் துன்பம் ஆகிறது. துன்பம் நீடித்தாலோ அது பழகிப் போய் மறந்து போகிறது.
எனது சித்தக் கடலில் ஞானி ஒருவனும் உண்டு. அவனும் இப்படி ஏதாவது முணுமுணுப்பான். நனைசுவர்க் கூரையின் கனை குரல் பல்லி அவன். “ஞானியே உன் உபதேசங்களுக்கு வணக்கம்” என்று அவன் வாயை அடைத்தேன்.
மனிதனுக்கு எதுவும் போதுவதில்லை, இன்பம் போதாமல் துன்பம் தேடுகிறான். துன்புறுவதில், துன்புறுத்துவதில் ஓர் இன்பம் தேடுகிறான். அனுபவங்களை ஞானமாக்கியோ, வேதாந்தமாக்கியோ, கவிதையாக்கியோ, கதையாக்கியோ, அதில் ஓர்இன்பம் காண்கிறான்.
இருக்கட்டுமே! எல்லாம் இருக்கட்டும். எதுவும் பிரயாணத்தின் போக்கைத் தடுக்காமல் ,காலை இடறாமல் இருந்தால் சரி. அணை விழுந்து தேங்காமல்இருந்தால் சரி.
எங்கள் ஊரில் காய்கறிகள், குறிப்பாகத் தக்காளி அதிகம் பயிராகிறது. இங்கே பாறைகள் அதிகம். கரும்பு நிறைய விளைகிறது. இது பெரிய கிராமம். ஜீவனம் விவசாயம். மனிதனது ஆதித் தொழில்களில் ஒன்று.
ராக்கெட்டுகளும் விண்வெளிப் பயணமும் புளிக்கிற அளவு பழைய கதையாய் விட்டன. இந்தியாவே ராக்கெட் விட்டு, ஏவுகணை அனுப்பிவிட்டது.
என் கிராம மக்கள், எதற்கும் அசையாமல் பழைய ஜீவனத்தில், பழகிய சௌகரியமான பாதையில் பஞ்சம் வந்தாலும் இடைவிடாமல் பிறந்து வாழ்ந்து மாண்டு கொண்டிருக்கிறார்கள். தொழிற் புரட்சியாம்.. யந்திர நாகரீகமாம்.. என்னென்னவோ சொல்கிறார்களே.. என் கிராமம் அசையவில்லை.
காரணம் தொழில்கள்... விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும் தொழில்கள் செய்ய கிராமம் பயிற்றுவிக்கப்படவில்லை நான் நினைப்பதுண்டு தக்காளியை வைத்து தக்காளி ஜூஸ் கெட்ச் அப்.. பாறைகளை உடைத்து ஜல்லிக் கற்கள்.. கரும்பைப் பிழிந்து அச்சு வெல்லங்கள்.. இவ்வாறு கிடைக்கும் பொருளை உருமாற்றித் தொழில்களை ஏற்படுத்தினால் கிராமம் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலைமாறுமே என்று.
மக்கள் அரசாங்கத்தையும் அரசாங்கம் மக்களையும் திருப்பித் திருப்பி ஒருவரையொருவர் சுட்டிக் காட்டுவதே எந்த முன்னேற்றத்திற்கும் இடைஞ்சல் தருகிறது.
கிராமத்தில் பட்டதாரிகள், வேலை தேடுவோர் கூட்டம் பெருகுகிறது. வெள்ளைச் சட்டையணிந்து மேஜை எதிரில் பைல்களைக் கட்டியழும் பாடாவதி அனுபவத்தை மட்டுமே வேலை என்று நம்பிக் கொண்டு கிராமத்தின் கல்வியறிவு பெற்ற ஜனத்தொகை குறைந்து செல்கிறது.
தன்னம்பிக்கையோடு சொந்தத் தொழில் செய்வதற்கு எவரும் முன்வரத் தயாராய் இல்லை.
கல்வி முறையைக் குற்றம் சாட்டுகிறார்கள். சமூகச் சூழ்நிலையைக் குறை சொல்கிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறித்துச் சீறுகிறார்கள். எதன் மீதாவது பழிபோட்டு, எதையாவது விமரிசித்து எந்த நிழலோடாவது போராடுவதை விடக் காரியம் செய்வது மேல்.
எந்த முன்னேற்றமும் தன்னிடமிருந்து, தான் இருக்கும் இடத்திலிருந்துதான் மலர முடியும். அது சுலபமானது. இயற்கையானது. காரியம் செய்ய வேண்டியவன் தானே, என்பதை மறப்பவன் அல்லது தான் உழைக்கத் தயாராய் இல்லாதவன்தான் தேசத்தைக் குறை சொல்கிறான்.
ஒவ்வொருவனின் தேசமும் முதலில் அவனிடமிருந்து தான் ஆரம்பமாகிறது. தன்னை நிறைவு செய்து கொள்வோன் தேசத்தின் 120 கோடி குறைகளில் குறைந்தபட்சம் ஒன்றை நிவர்த்திக்கிறான். அதற்குப் போராட வேண்டுமே; ஆயிரம் இன்னல்களையும் துன்பங்களையும் சுமக்க வேண்டுமே! ஆமாம்.. அதுதான் வாழ்க்கை.. அவற்றை வெல்ல நமக்குள் உள்ள மானுடம் எவ்வளவு வெளிப்படுகிறதோ, அந்த அளவே நாம் மனிதர்கள். யாவற்றிலும் முக்கியமானது ஆழ்ந்த விருப்பம். அவா அல்ல விருப்பம்.
அவா வேறு, விருப்பம் வேறு. அவாவில் நம்பிக்கை குறைவு. விருப்பத்தில் நம்பிக்கை சேர்கிறது.
ஆழ்ந்த விருப்பம் விதை போல் நிலம் பிளந்து இறங்கி வேரூன்றுகிறது. ஆழ்ந்த விருப்பமும் எல்லாப் பயிற்சியும் போல ஒரு பயிற்சியே. ஆழ்ந்து விரும்பினால் விருப்பம் நிறைவேறும்.





No comments:

Post a Comment