Sunday 23 December 2012

பிம்பங்களை நம்பிக் கொண்டு

பிம்பங்களை நம்பிக் கொண்டு
தத்துவச் சுரைக்காய்கள் ஏராளமாக விளைந்து படர்ந்திருக்கிற அந்தக் குடிசை வீட்டுக் கூரைப் பந்தலின் கீழே ஒரு குழந்தை, நாலு வயசு, விளையாடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு திருப்பித் திருப்பி தன் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தது. 
பெண் குழந்தை அல்லவா? பின்னே எப்படி இருக்கும்?
அது பார்க்கிற ஒவ்வொரு கோணத்திலும் ஒரு பிம்பம். மாறி மாறித் தெரிகிறது. அதைத் திருப்பித் திருப்பிப் பார்ப்பதில் ஒரு லயிப்பு. பார்த்துக் கொண்டே இருக்கிற கவனக் குறைவில் கை தவறிவிட்டது. மூலையில் இருந்த அம்மிக் கல்லில் விழுந்து கண்ணாடி நொறுங்கிச் சிதறிவிட்டது.
தரையில் பல நொறுங்கல்கள். விழுந்துவிட்ட கண்ணாடித் துண்டுகள். அவற்றில் அவள் முகம் பல முகங்களாகப் பிரதிபலித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் ஒவ்வொரு தினுசில்.
பொங்கப் பொங்க சிதறல்களை ஒன்று சேர்த்து அது தேடியது. பழைய முகத்தை! இல்லை. அது தென்படவில்லை. அது உடைந்து போனதற்காக அதிகம் கோபித்துக் கொள்ளாத அப்பாவையும் அம்மாவையும் கூப்பிட்டுக் காட்டிக் கேட்டது.
எல்லாமே உன் முகம் போல் தான் இருக்கிறது என்றனர் இருவருமே.
அதற்கு நம்பிக்கை வரவில்லை. எந்த முகமும் தன் முகம் மாதிரி இல்லை என்று அது ஓவென்று அழத் தொடங்கியது. ஒரு சிறிய துண்டை அதன் முகத்திற்கு மிக அருகே கொண்டுவந்து காட்டிவிட்டு அவர்கள் இதோ பார் நீ உன் மாதிரியே தெரிகிறாய். என்று பலமுறை சொல்லிய பின்னும் நம்பாத அந்தக் குழந்தைக்கு சுற்றுப் பக்கத்திலிருந்த பலரைக் கூப்பிட்டு சமிக்ஞை செய்து அவ்வாறே கூற வைத்தார்கள்.
அப்புறம் தான் அது நம்பியது.
பிம்பங்களை நம்பி வாழ்கிற வாழ்க்கைக்கு இப்படி நாலுபேர் சொல்லும் அபிப்பிராயங்கள் தான் முக்கியம்.

No comments:

Post a Comment