Sunday 23 December 2012

வழிபாடுகள்

வழிபாடுகள்
நமது தேசீய குணங்களில் ஒன்று எதையும் வழிபாடு செய்தல் அது ஒரு தலைவராயினும் சரி; ஒரு சிந்தனையாளராயினும் சரி; எந்தத் துறையிலோ, எப்படியோ புகழ்பெற்ற நடிகரோ விளையாட்டு வீரரோ வேறு ஒருவராயினும் சரி. அவரை வழிபாட்டிற்குரிய மகானாக்கி விடுவது நம் நடைமுறை. மகான் மட்டுமல்ல மாமேதை; யுகத்திற்கு இப்பாலும் அப்பாலும் பிறக்கவோ  பிறந்திருக்கவோ முடியாத உன்னத புருஷராக்கி ஒருவரை வழிபடுவதில் நமக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
மனிதர்களை விட்டு விடுவோம். மொழி, தேசம், கல்வி, கலை ஆகிய அமைப்புகளையும் கருவிகளையும் கூட, பூஜித்து உணர்ச்சி வசத்திற்குரிய புனித விஷயங்களாக்கி  மதிப்பவர்கள் நாம் .
இவற்றைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தெய்வ சன்னதம் கொண்ட சாமியாடிகள் மாதிரி தான் நாம் சிந்திக்கிறோம்.
இந்த வழிபாட்டு உணர்வு, கேள்வி கேட்க முடியாத அந்தஸ்திற்கு ஒன்றை அல்லது ஒருவரை உயர்த்தி விடுகிறது. நிறை குறைகளை ஆராய்ந்து உண்மையை உணர்ந்து கொள்வதிலிருந்து இந்தப் போக்கு நம்மைத் தொலை தூரத்திற்கு அப்புறப்படுத்துகிறது.
நம்மை உணர்ச்சி வசப்படுத்துவதற்கு ஒரு பம்ப் மாதிரி, ஏதோ ஒன்றின் மீதான வழிபாடு மாறுகிறது. உண்மை நிலைகளை விட்டு ஒதுங்கிப் போன நாம் பலஹீனர்களாகிறோம். யாரையாவது எதையாவது வழிபட்டுக் கொண்டிருப்பதே நம் தன்மையான பிறகு, நாம் தன்னம்பிக்கை அற்றவர்களாகிறோம்.
வழிபாடுகளில் புதிய வெளிச்சம் கிடைக்கும் என்று வீணாய் நாம் நம்பத் தொடங்குகிறோம்.
உதாரணமாக, இந்த தேசத்தில் அரசியல் தனி மனித வழிவாட்டினாலேயே நடைபெறும். மதம், கலாசாரம் எதுவாயினும் அதற்கு ஒரு தலைவனும் (ஹீரோ) அதன்மீது ஒரு வழிபாடும் இங்கே அவசியம்.
இந்த வழிபாட்டுக் குணம், ஏன் நம் தேசத்தில் மட்டும் இவ்வளவு விசேஷமாக வேரூன்றியிருக்கிறது?
நாம் மானுடத்தின் பெருமையை மரணத்தின் முன்னே ஒப்பிட்டு, மனிதனை அற்ப மானிடப் பூச்சியாக்கினோம். நமது சித்தாந்தங்களும் தத்துவங்களும் தலைமுறை தலைமுறையாக நமக்கு நீ எளியவன்; நீ அண்ட கோளங்களின் முன்னே அற்பமானவன் என்ற கருத்தை நமக்குப் போதித்திருக்கின்றன. நமது வம்சத்தின் ரத்தத்தில் அது ஊறி நிற்கிறது.
இந்தியாவிற்கு வெளியே மனிதன், தான் சாதாரணமானவன்; பிரம்மாண்டத்தின் முன்னே அற்பத்துளி என்ற சித்தாந்தச் சிறைகளின் சிக்கிக் கொள்ளவில்லை. இயற்கையை ஆராய்வதும் வெல்வதும் அவன் இயல்பாயிற்று. அவன் தங்கு தடையற்ற ஆத்ம விசாலத்தோடு தனது மானுடப் பெருமையை நிரூபித்தவாறே வளர்ந்தான்.
உயர்ந்தவை எத்தனையோ என்ற கற்பனையில் நாம் அடிமைகளாய் வழிபாட்டில் இறங்கினோம். நூற்றுக் கணக்கான அந்நியர்கள், உருவிய வாளோடு நம் தலை மீது குதிரைகளை ஓட்டிச் சென்றார்கள். நாம் அனைவரையும் வழிபட்டோம். எல்லோரிடமும் சமரசம் செய்து கொண்டோம். அது நம் பெருமை என்று வெட்கமின்றிக் கொண்டாடிக் கொண்டுமிருக்கிறோம்.
தன்னை அடிமையாக்கிக் கொண்டவர்களுக்கு, வழிபடுவதற்கு அனுபவங்களை ஞானமாக்கியோ, வேதாந்தமாக்கியோ, கவிதையாக்கியோ, கதையாக்கியோ அதில் ஓர் இன்பம் காண்கிறான்.
இருக்கட்டுமே! எல்லாம் இருக்கட்டும். எதுவும் பிரயாணத்தின் போக்கைத் தடுக்காமல் காலை இடறாமல் இருந்தால் சரி. அணை விழுந்து தேங்காமல் இருந்தால் சரி.
எங்கள் ஊரில் காய்கறிகள், குறிப்பாகத் தக்காளி அதிகம் பயிராகிறது. இங்கே பாறைகள் அதிகம். கரும்பு நிறைய விளைகிறது. இது பெரிய கிராமம். ஜீவனம் விவசாயம். மனிதனது ஆதித் தொழில்களில் ஒன்று.
ராக்கெட்டுகளும் விண்வெளிப் பயணமும் புளிக்கிற அளவு பழைய கதையாய் விட்டன. இந்தியாவே ராக்கெட் விட்டு ஏவுகணை அனுப்பிவிட்டது.
என் கிராம மக்கள், எதற்கும் அசையாமல் பழைய ஜீவனத்தில், பழகிய சௌகரியமான பாதையில் பஞ்சம் வந்தாலும் இடைவிடாமல் பிறந்து வாழ்ந்து மாண்டு கொண்டிருக்கிறார்கள்.தொழிற் புரட்சியாம்.. யந்திர நாகரீகமாம். என்னென்னவோ சொல்கிறார்களே.. என் கிராமம் அசையவில்லை.
காரணம் தொழில்கள்... விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும் தொழில்கள் செய்ய கிராமம் பயிற்றுவிக்கப்படவில்லை நான் நினைப்பதுண்டு தக்காளியை வைத்து தக்காளி ஜூஸ் கெட்ச் அப்.. பாறைகளை உடைத்து ஜல்லிக் கற்கள்.. கரும்பைப் பிழிந்து அச்சு வெல்லங்கள்.. இவ்வாறு கிடைக்கும் பொருளை உருமாற்றித் தொழில்களை ஏற்படுத்தினால் கிராமம் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலைமாறுமே என்று.
மக்கள் அரசாங்கத்தையும், அரசாங்கம் மக்களையும் திருப்பித் திருப்பி ஒருவரையொருவர் சுட்டிக் காட்டுவதே எந்த முன்னேற்றத்திற்கும் இடைஞ்சல் தருகிறது.
கிராமத்தில் பட்டதாரிகள், வேலை தேடுவோர் கூட்டம் பெருகுகிறது. வெள்ளைச் சட்டையணிந்து மேஜை எதிரில் பைல்களைக் கட்டியழும் பாடாவதி அனுபவத்தை மட்டுமே வேலை என்று நம்பிக் கொண்டு கிராமத்தின் கல்வியறிவு பெற்ற ஜனத்தொகை குறைந்து செல்கிறது.
தன்னம்பிக்கையோடு சொந்தத் தொழில் செய்வதற்கு எவரும் முன்வரத் தயாராய் இல்லை.
கல்வி முறையைக் குற்றம் சாட்டுகிறார்கள். சமூகச் சூழ்நிலையைக் குறை சொல்கிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறித்துச் சீறுகிறார்கள். எதன் மீதாவது பழிபோட்டு, எதையாவது விமரிசித்து எந்த நிழலோடாவது போராடுவதை விடக் காரியம் செய்வது மேல்.
எந்த முன்னேற்றமும் தன்னிடமிருந்து, தான் இருக்கும் இடத்திலிருந்துதான் மலர முடியும். அது சுலபமானது. இயற்கையானது. காரியம் செய்ய வேண்டியவன்தானே, என்பதை மறப்பவன் அல்லது தான் உழைக்கத் தயாராய் இல்லாதவன்தான் தேசத்தைக் குறை சொல்கிறான்.
ஒவ்வொருவனின் தேசமும் முதலில் அவனிடமிருந்து தான் ஆரம்பமாகிறது. தன்னை நிறைவு செய்து கொள்வோன் தேசத்தின் 120 கோடி குறைகளில் குறைந்தபட்சம் ஒன்றை நிவர்த்திக்கிறான் அதற்குப் போராட வேண்டுமே; ஆயிரம் இன்னல்களையும் துன்பங்களையும் சுமக்க வேண்டுமே! ஆமாம்.. அதுதான் வாழ்க்கை. அவற்றை வெல்ல நமக்குள் உள்ள மானுடம் எவ்வளவு வெளிப்படுகிறதோ, அந்த அளவே நாம் மனிதர்கள். யாவற்றிலும் முக்கியமானது ஆழ்ந்த விருப்பம். அவா அல்ல விருப்பம்.
அவா வேறு, விருப்பம் வேறு. அவாவில் நம்பிக்கை குறைவு விருப்பத்தில் நம்பிக்கை சேர்கிறது.
தொழுது கும்பிடுவதற்கு, எஜமானர்கள் தேவையாயினர். எஜமானத்துவத்தின் பிம்பங்களாக எண்ணி வாழ்வில் சௌகரியங்களுக்காக ஏற்பட்ட அமைப்புகளை நாம் தொழுது கொண்டாடி வழிபடத் தொடங்கினோம்.
வழிபாடு, அறிவிற்கும் சிந்தனைக்கும் என்றுமே பகையாக இருந்து வந்திருக்கிறது. நம் அடிமைத்தனம் நமது உயர்ந்த குணங்களை அழித்தது. நாம் பொறாமைக்காரர்களானோம். குருட்டு நம்பிக்கைகளைக் கொலுவேற்றி ஆளுக்கு ஒரு ஹீரோவைப் பிடித்துக் கொண்டு நமக்குள்ளே உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டோம். சச்சரவு செய்து நமது ஐக்கியத்தைச் சிதைத்துக் கொண்டோம்.
எதை அல்லது யாரை, எதற்காக நாம் வழிபாட்டுப் பொருள் ஆக்கினோமோ அதற்கும் நம் வழிபாட்டிற்கும் சம்பந்தமில்லாமல் போயிற்று ஒன்றை வழிபடுவதன் மூலம் அதன் உயர்ந்த நிலைகளை நாம் அடைவோம் என்று நமது சித்தாந்தங்கள் பிரசாரம் செய்தன. ஆனால் நடந்தது என்ன?
அதற்கும் நமக்குமிடையே எந்த கருத்துப் பரிமாற்றமும்  ஏற்படாது சடங்கும் சச்சரவும் மிச்சமாயிற்று.
வழிபாடுகளை எதிர்த்துக் கலகம் செய்கிறவர்கள் வந்தார்கள். அவர்கள் சமூக சீர்திருத்தக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அந்தக் கலகங்களின் அற்ப வெற்றி கூட, அவர்களும் வழிபாட்டிற்குரிய தனி நபரானதாலேயே சாத்தியமாயிற்று.
இந்த வழிபாட்டு உணர்வு, நம்மை எளிய  விஷயங்களிலும் நிரட்சரகுட்சியாக்கி வைத்திருக்கிறது. ‘ஜிம் கார்பெட்’ என்ற புகழ்பெற்ற வேட்டைக்கார எழுத்தாளர்  ‘Jungle Lore’ என்ற புத்தகத்தில் பாம்புகள் நிறைந்த இந்தியாவில் எவை விஷம் நிறைந்தவை. எவை விஷமில்லாதவை என்று கூட இந்தியர்கள் தெரிந்து கொள்ளாதது ஆச்சரியம் என்று நாம் வெட்கும்படியாக வியந்து கொள்கிறார். நாம் பாம்புகளை வழிபடுகிறவர்கள். ஆகவே அதற்கு அஞ்சுவோர்.
எனவே அதைப் போய் ஆராய்வோமோ?
இங்கே அதிகமாக விஞ்ஞானிகள் தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர்கள் தோன்றவில்லை. செயல்வீரர்கள் தோன்றவில்லை. மனித குலம் என்னென்ன அற்புதங்களைச் சாதித்திருக்கிறதோ அவற்றை ஈன்றெடுத்தவர் தோன்றவில்லை. இங்கே வேதாந்திகளும் மகான்களும் தோன்றினார்கள். அவர்கள் மரணத்திற்கு அப்புறம், பிறவிக்கு முன்பு என்று யோசிக்கப் பழகினார்கள். நம்மை பழக்கினார்கள்.
வாழ்க்கையை நாம் மறுத்தோம் ஒருபுறம் சந்நியாசிகளைப் பற்றிய வழிபாடு இன்னொருபுறம் கண்டதையெல்லாம் கைதூக்கி வானளாவ உயர்த்தும் வழிபாடு இந்த கற்பனைகளில் தான் நமது மூதாதையர் ரத்தம் சிந்தினர். இதற்குள் கண்ட வேறுபாடுகளில் கழுவேறினர்; சிரமறுத்தனர். காது மூக்குகளை அறுத்து ஜெயஸ்தம்பம் நாட்டிக் கொண்டனர்.
பிரிட்டிஷ்காரர்கள் தனது சாம்ராஜ்யத்தின் காரியாலயங்களுக்கு குமாஸ்தாப் பட்டாளம் தேவை என்பதற்காக நமக்கு ஒரு அடிமைக் கல்வி முறையை அமைத்துக் கொடுத்தார்கள். அதை உதறிவிட்டு நமக்கு உகந்த கல்வி முறையை தேர்ந்தெடுக்கக் கூட அறுபத்தைந்து வருஷங்களாக நாம் யோசிக்கிறோம். அந்தக் கல்வி முறையை வழிபட்டு வழிபட்டு அது பழகிவிட்டதே; அதை எப்படி அவ்வளவு சலபத்தில் தூக்கி எறிவோம்?
நமக்கு வயிறார உணவில்லை. மானம் மறையப் போதுமான துணி கிடையாது. நவீன சிந்தனை மனிதனுக்கு என்னென்ன வசதிகளை வழங்கியிருக்கிறதோ அவற்றில் பல நமக்கு கிடையாது. மலஜலம் கழிக்கத்தக்க சுகாதார வசதிகள் கூடக் கிடையாது என்று மனம் கொதித்துப் போன ஒரு விஞ்ஞானப் பேராசிரியர் எழுதியிருக்கிறார்.
ஏன்? ஏன்? இந்தத் தேசம் வறுமை நிறைந்தது என்பதாலா? அல்லவே அல்ல. நம்மைவிட வசதிக் குறைவான தேசங்கள்;
இயற்கைத் தொல்லைகளுக்கும் துயர்களுக்கும் அடிக்கடி இரையாகும் ஜப்பான்; ஆகிய இவை புரிந்துள்ள மகத்தான சாதனைகள் எப்படி சாத்தியமாயின?
தன்னை அற்பமானவனாகச் சபித்துக் கொண்டவன். பல்வேறு வழிபாடுகளுக்கு அடிமையாக தன்னை நிலை தாழ்த்திக் கொண்டவன். இயற்கையோடு நடக்கும் வாழ்க்கை என்ற ஈவிரக்கமற்ற போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவது எப்படி சாத்தியம்? தேசத்தின் வறுமை என்பது அந்தத் தேச மனிதனின் மனசில் இருக்கும் தரித்திரம் தானே!
அது மொழியானால் என்ன தேசமானால் என்ன? கலையானால் என்ன கலாசாரமானால் என்ன? மகானானால் என்ன மேதையானால் என்ன? ஒன்றை ஏன் மனிதன் வழிபட வேண்டும்?
எதை வளர்த்துச் செழிக்க வைக்க வேண்டுமோ அதன் பேரில் எதற்கு வழிபாடு? இது நம் அடையாளம் என்ற பற்றும் பிரியமும் வழிபாட்டின் பேரால் சாமியாடுவதால் சாதிக்கப் போவதென்ன?
கல்வியறிவற்றவர்கள் தான் இங்கே வழிபாட்டின் பலிபீடத்தில் வீழ்ந்தவர்களோ? இல்லையில்லை. மெத்தப்படித்த மேதைகளும் பட்டங்கள் பெற்ற பெரியோர்களும் இதற்கு இரையானோம்.
இந்த தேசீய பலவீனத்தைப் புரிந்து கொண்டு சில சாமர்த்தியசாலிகள் வழிபாட்டிற்குப் புதிய ஹீரோக்களை சிருஷ்டிக்கிறார்கள். புதிய ஸ்லோகங்களை இயற்றுகிறார்கள. புதிய லட்சியங்களை ஆலய பீடத்தில் ஏற்றுகிறார்கள். நமக்குள் குரோதங்களையும் பிளவுகளையும் விசிறி விட்டு நடுவில் நுழைந்து சுய லாபங்கள் தேடிக் கொள்கிறார்கள்.
நமது வாழ்க்கை இந்த வெற்று ஆரவாரத்தின் பின்னே ஓடி வியர்த்தத்தை அறுவடை செய்து வழக்கமான துயர்களில் முடிகிறது.
வழிபாடு என்பதே ஓர் ஆதிமனித பலவீனம். அது பயத்திலே ஜனித்தது. பழக்கத்திலே வளர்ந்தது. மன்னர்களின் கொலைவாளும் நிலப் பிரபுவின் சவுக்கும் மதத்தின் மிரட்டலும் இணைந்த எதிர்மறை அணுகலால் (Nஞுஞ்ச்tடிதிஞு அணீணீணூணிச்ஞிட) நமது ரத்தத்தில் திரடு கட்டி நிற்பது.
உலகில் மனிதன் வழிபடுவதற்கு எதுவும் இல்லை. அவனது கம்பீரமும் பிரகாசமும் நிறைந்த ஆத்மா கண்டு நடுங்கும் ஆற்றல் பெற்ற எதுவும் இந்தப் பூமியின் மேலே இல்லை. மனித குலத்தின் வரலாறு இடைவிடாது நடத்திவரும் போராட்டத்தில் இன்றளவு அது பெற்றிருக்கும் வெற்றியும், வழிபாட்டின் பேரால் வந்ததில்லை. வழிபாடுகளை உதறிவிட்டு ஒவ்வொன்றோடும் முரண்பட்டு முரண்பட்டு உண்மையைத் தேடி ஆராய்ந்து போரிட்டு வென்றால்தான் சாத்தியமாகி இருக்கிறது.
மனிதர்கள் பேணிக்காக்க வேண்டிய நெறிகளை வழிபடுவதனால் கைக்கொள்ள முடியாது. தனது பொறுப்பையும் கடமையையும் எதிரிட்டுதான் சுமக்கப் பயந்தவனே, தனது சுதர்மத்தை வகித்து செயலாற்றுச் சோம்புவோனே எதையாவது வழிபட்டு தன்னை உணர்ச்சிவயம் (குஞுணண்ச்tடிணிணச்டூ) ஆக்கிக் கொண்டு அதில் ஒரு சுகம் கண்டு தான் அதற்காக வாழ்ந்தவன் என்று குருட்டு பிரமைக்கு ஆளாவான்.
மாறுதல்களில் கொந்தளித்து உருவாகி வரும் புதிய இந்தியா, புதிய தமிழகம் நீண்ட அனுபவங்களில் ஒன்றைப் பெறப் போகிறது. எவற்றை நேசிக்கிறதோ அதை வழிபடுவதை அது நிறுத்திக் கொள்ளும். அது கேள்விகள் கேட்கும். ஆராயும், சித்திக்கும், தனது குறைகளை வழிபாட்டு வேள்வியின் ஆரவாரத்தில் மறைத்துக் கொள்ளாது. தனது குறைகளை குறையென்று அங்கீகரித்து நிறைவுகளை நோக்கித் தன் சலியாத பயணத்தைத் தொடரும்.
நமது பங்காக, நாமும் நம்மை முறுக்கேற்றிக் கொள்ளும் வழிபாடுகளிலிருந்து விடுபடுவோம். எதை நேசிக்கிறோமோ அதற்காக நாம் செய்யும் மெய்யான பணியின் மூலம் திருப்தியுறுவோம். நாம் எவ்வளவு உயர்ந்த மனிதர்களாயினும் நாம் சார்ந்து நிற்கும் துறை எவ்வளவு விழுமியதாயினும் வழிபாடுகளின் சுமை நம் மீது விழாதவாறு ஒதுங்கி நிற்போம்.
வழிபாடுகளை எவன் வெட்கமில்லாமல் பெற்றுக் கொள்கிறானோ, அவன் தனக்கு உரிய நியாயமான மரியாதைக்கும் அருகதை இழந்தவன். சுயமரியாதை இல்லாதவன். அவனே வழிபாடு என்ற விஷச் சக்கரத்தை சுதந்திர மனித சிந்தனைக்குக் குறுக்கே உருட்டுகிறவன். நம்மை  எவரும் வழிபட அனுமதியோம். நாமும் எந்த வழிபாடுகளாக்கும் இரையாக மாட்டோம்.நவீன மனிதன் உருவாக இதுவே நாம் செலுத்தும் முதல் பங்கு.

No comments:

Post a Comment