Friday 21 December 2012

ஒரு விற்பனையாளனின் மரணம்

ஒரு விற்பனையாளனின் மரணம்

அமெரிக்கா, அதிநவீனமானவற்றின் தாயகம். எல்லையற்ற சுதந்திரத்தின் இருப்பிடம், ஓய்வு ஒழிவின்றித் தோன்றும் புதுப்புதுப் பரிசோதனைகள் பலவற்றின் பிறப்பிடம்.
அங்கே போட்டியும் தர நிர்ணயமும் எப்போதும் உச்சகட்டத்தில் தான் இருக்கும் பழமையின் பெருமைக்கோ, கலாசாரத்தைக் கட்டிக் காத்த அதன் நெடிய உழைப்பிற்கோஅங்கே பெரிய மதிப்புக்கள் ஏதுமில்லை. ஒன்று பழம் பெருமை வாய்ந்தது என்பதற்காக அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு சிரமப்பட அமெரிக்க மனோபாவம் இடம் தராது.
போட்டியும் மனிதாபிமானமும் மோதும் யுத்த களத்தில், என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் நாவல்களும் நாடகங்களும் அமெரிக்க இலக்கியத்தில் ஏராளம்.
டென்னஸ்ஸி வில்லியம்ஸ் எழுதிய “ஆசை என்னும் தெருவண்டி” A Streetcar named desire" ஆர்தர் மில்லர் எழுதிய “ஒரு விற்பனையாளரின் மரணம்” Death of a salesman  ஆகிய இரண்டுநாடகங்களும் காலத்தால் அழிக்க முடியாத அமர சிருஷ்டிகள்.
இவ்விரண்டு நாடகங்களில் ஆர்தர்மில்லரின் “ஒரு விற்பனையாளரின் மரணம்” தான், மாறி வருகின்ற நவீன யுகத்திற்கு என்றென்றும் பொருந்தும் நாடகம்.
ஒரு பிரபலமான வணிக நிறுவனத்தின் வெற்றிகரமான விற்பனையாளராக இருந்த வில்லிலோமன் தனக்கு வயது அதிகமாய் விட்ட காரணத்தால், தான் பணியாற்றும் நிறுவனம் தன்னை வேலையிலிருந்து நீக்க  முனையும் அதிர்ச்சியில் தான் நாடகம் தொடங்குகிறது. அந்த வீழ்ச்சியை அவர் மனம் லேசில் ஏற்க மறுக்கிறது.
அவர் அளவற்ற அன்பு வைத்திருக்கும் மகன் பிஃப், கற்பனையில் மிதக்கும் உதவாக்கரை என்பதை அறியாது அவனை வெற்றிகரமாக உருவாக்கித்தான் தன் வீழ்ச்சியை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்று அவர் முயற்சிக்கிறார்.
அவனோ புஸ்வாணமாகி, அவர் கனவுகளைச் சிதைக்கிறான். இறுதியில் தற்கொலை என்று பிறர் எளிதில் சொல்லி விடாத முறையில், வில்லியம் லோமன் தற்கொலை செய்து கொள்கிறார்.
இரண்டு அங்கங்களில், இதயத்தை உலுக்கும் முறையில் ஆர்தர் மில்லர் இந்த நாடகத்தை எழுதியிருக்கிறார்.
கத்தி வீச்சு போல் பாயும் சொற்செட்டுள்ள கூர்மையான வசனம், ஆங்காங்கே ஷேக்ஸ்பியரின் கவித்வப் பண்புக்கு இணையாகச் சால்லத்தக்க மொழிநயம்.
தன் தோல்வியை ஏற்க முடியாத, அதே சமயம் ஏற்பதை தவிர வேறு விதியறியாத கதாநாயகனாக வில்லியம் லோமனை உருவாக்கி பழைய கிரேக்க நாடகங்களின் துன்பியல் (Tragedy hero) தலைவனை நினைவூட்டுகிறார்.
வில்லியம் லோமன், ஒரு நல்ல மனிதர். மதிப்பு வாய்ந்த மனிதர் ஆனால் அடிப்படையில் அவர் ஒரு விற்பனையாளன். அந்த விற்பனையாளனின் தத்துவத்திலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
அண்டை வீட்டுக்காரர் சார்லி ஏறக்குறைய வில்லியம் லோமன் அவரது நிறுவனத்தால், விரட்டப்பட்ட சூழ்நிலையை அறிந்து அவருக்கு தான் தொடங்கிய ஒரு சுமாரான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி கூறுகிறார்.
ஆனால் வில்லி லோமனால் அதை ஏற்பது தாழ்ந்துவிட்ட மாதிரி இருக்கிறது. தன்னைப் போலவே ஒரு விற்பனையாளனாக வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது ஒரு நிறுவன அதிபராகிவிட்ட அடுத்த வீட்டுக்காரனிடம் வேலை செய்வதோ? அதுவும் வெறும் ஒருசுமாரான நிறுவனத்தில்?
இல்லை, முடியாது. வில்லி லோமனுக்கு எல்லாம் பெரிதாய் இருக்க வேண்டும். மிகப்பெரியது, மிக மிகப் பெரியது, மிகச்சிறந்தது. அடுத்த ஆளை, அடித்து நொறுக்கக்கூடிய அளவு வலிமை வாய்ந்த நிறுவனம். அதுதான் அவர் பணி செய்ய உகந்தது.
பாவம் வில்லியம் லோமன்! அவர்ஓர் அற்புதமான, மென்மையான, தகுதியுள்ள இன்னும் ஆற்றலும் உபயோகமும் உள்ள மனிதர்தான். ஆனால் சமுதாயம் அவரை வேறுவிதமான மாற்றியமைத்து விட்டது. அவரது விற்பனையாளர் தொழில் அவரது அரும் பாண்புகளைச் சீர்குலைத்து  விட்டது.
உள்ளபடியே வில்லியம் லோமனால் எவரையும் உண்மையாக நேசிக்கவும் முடியவில்லை; வெறுக்கவும் முடியவில்லை. அவர் மகத்தானவர் என்று அவர்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் நேசிக்கத் தக்கவர்கள், அப்படி இல்லையென்றால் அவர்கள் அவருடைய எதிரிகள்.
ஒரு போட்டி போடும் சமுதாயத்தில், மனித மதிப்பீடுகளை அப்பால் தள்ளி வைத்து, மாய பிம்பங்களில் சிக்குண்டு அவஸ்தைப்படுகின்ற மனித ஆன்மாவின் துயர வீழ்ச்சிதான் வில்லியம் லோமனின் வீழ்ச்சி. வில்லியம் லோமன் அற்புதமான மனிதர்தான் ஆனால் சாதாரண சோட்டா பேர் வழியாக இருக்க மனம் ஒப்பாதவர்.
அவர் லட்சியம் இந்த உலகத்திற்கு ஏதாவது சாமான்களை விற்றுக் கொண்டே, அதி உன்னதமானவனாக இந்த உலகை ஆட்சி புரிவது. வேறு வழியே இல்லை என்ற கட்டம் வரும்போது தற்கொலை ஒன்றுதான் அவரது இறுதி உச்சக்கட்டமாகிறது.
தன் சுயமதிப்பைக் கோரிய தன் முதலாளியின் மகன், சார்லி எல்லாரையும் பழி தீர்க்க அவருக்குக் கிட்டிய ஒரே ஆயுதம் தற்கொலை.
அவரது மகத்தான பிழை ஒன்றே ஒன்றுதான். எல்லா கிரேக்க, துன்பியல் நாடகங்களிலும் காணப்படுவதைப் போன்று ஒரே ஒரு தவறான மதிப்பீடுதான் இந் கதாநாயகனின் பிழைக்கும் காரணமாகிறது.
அவர் அடுத்த நபர் மெச்ச வேண்டும் என்பதையே தன் வாழ்வின் குறிக்கோளாக வைத்துக் கொண்டவர்.
இது நமது சமுதாயம் முழுவதின் பிழை. நமது சுயமதிப்பை நாம் நம்மை வைத்து அளப்பதில்லை அடுத்தவரை வீழ்த்தி, அதே சமயம் இடைவிடாமல் அவர்களது பரிபூரண ஒப்புதலை வாங்கிக் கொண்டு நம் மதிப்பை நிலைநாட்ட விரும்புகிறோம்.
தன் மகன் பிஃப் விஷயத்தில் கூட அவன் அப்படி இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார். அவன் எல்லோரையும் தகர்த்து வீழ்த்த வேண்டும்; அதே சமயம் எல்லோராலும் விரும்பப்படவும் வேண்டும். நடக்கிற கதையா இது?
இதன் விளைவாக வில்லியம் லோமன், சார்லி போன்ற அண்டை வீட்டு மனிதர் போன்றவர்களையே விரும்புவது விரும்புகிறார்; வெறுக்கவும் வெறுக்கிறார்.
நவீன மனிதன் எப்பொழுதும் கவலை பொருந்தியவனாக இருக்கிறான். இரண்டு ஈர்ப்பு சக்திகள் அவனை இழுத்த வண்ணம் இருக்கின்றன.
தன் பக்கத்து வீட்டுக்காரனை, தன் சகோதரனை அடித்து வீழ்த்த வேண்டும்; அவனை எப்படியாவது மிஞ்சி விட வேண்டும். அதே சமயம் அவனால் நேசிக்கப்படவும் வேண்டும்.
இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று, எதிரான முரண்பாடுகள். வேறு வழியின்றி அவை வீழ்ச்சியில்தான் முடிவுற வேண்டும். தன் மனப்போக்கிற்கு ஏற்ப மகன் பிஃப்பை மாற்றியமைத்தாவது அவனை போக அனுமதித்திருக்கலாம் அதிலும் தோல்வி.
அன்பும் போட்டியும் என்ற எதிரெதிர் சக்திகளுக்கு இடையே நடந்த இந்த யுத்தத்தில், தீமையும், நன்மையும் மோதிக் கொண்ட களத்தில் வில்லியம் லோமனின் ஆத்மா இருகூறாகப் பிளந்தது போன்று, தற்கொலையே முடிவாகிறது.
அமெரிக்க நாடக இலக்கியத்தில் அழியாது நிலை நின்று , மணிச்சுடர் வீசும் நாடகம் இது

No comments:

Post a Comment