Sunday 23 December 2012

கடலும் கிழவனும்

கடலும் கிழவனும்
எர்னெஸ்ட் ஹெமிங்வேவுக்கு, நோபல் பரிசையும், புலிட்ஸர் பரிசையும் வாங்கித் தந்த இந்தச் சிறிய நாவலில் கதை அம்சம் குறைவு. எழுபது வயதுச் செம்படவன் சாந்தியாகோ, 84 தினங்கள் மீன்கள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசமும் மதிப்பும் உடைய சிறுவன் ஒருவனால் பராமரிக்கப்படுகிறான். எண்பத்தைந்தாம் நாள், தன் சிறிய படகில் தனியாக மீன் பிடிக்கச் சென்று, 18 அடி நீளமும் 1500 பவுண்ட் எடையுமுள்ள மீனைப் பிடிக்கிறான். அது லேசில் அவன் வசப்படுவதில்லை. மூன்று தினங்கள் அன்ன ஆகாரமின்றி நடுக்கடலில் கிழவனுடன் மல்லுக்கு நின்றுதான் அது தோற்கிறது. கடலில் அலைகின்ற, பசித்த சுறாக்கள் அதைக் கவ்வித் தின்கின்றன. தனது லட்சிய சித்தியைப் பறிகொடாவண்ணம், அக்கிழவன் வீராவேசத்துடன் போராடுகிறான். ஆனாலும், வென்றவனுக்கு ஒன்றும் மிஞ்சவில்லை. மீனின் எலும்புக் கூடும் படகுமாய்க் கரை சேருகிறான்.
இதுதான் கதை.
கலைக்கு ஒரு உள் நோக்கம் உண்டு என்னதான் அது பிரசாரத்துக்கு அப்பாற்பட்டது என்று தந்தகோபுரத்தில் ஏறித் தனி நர்த்தனமாடத் துடித்தாலும் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய ஏதோ ஒரு இலட்சியத்தை மறைமுகமாக நாடித்தான் உயிர்த்திருக்கிறது.மனிதனின் அறிவையும் இதயத்தையும் உயர்த்துவதில், கிணற்றின் அடியில் சுரக்கும் ரகசியமான ஊற்றைப் போல்தான் அதன் பங்கு. ஒவ்வொரு உணர்ச்சி அல்லது கொள்கையின் பிரசாரம்தான். அந்தப் பிரசாரம் பளிச்சென்று (எச்தஞீதூ) தெரியாத வரையில் தான் அதன் வெற்றி. இது ஒரு மனிதனைப் பற்றிய பிரசாரம். குறைந்த பாத்திரங்கள், குறைந்த கதை, குறைவான பக்கங்கள். இவற்றில் ஒரு லட்சிய மனிதனையே சித்தரிக்கும் கஷ்டத்தைக் கலையழகுடன் அபாரமாகச் சாதித்திருக்கிறார் ஹெமிங்வே.
கதை நெடுக மனத்தில் பிரமிக்கத் தக்க நம்பிக்கை ஒளியும், தோல்வியை இறுதி வரை ஒப்புக் கொள்ளாத வீர உணர்ச்சியும், சகல ஜீவராசிகள் மீதும் எல்லையில்லா அன்பும் கொண்ட ஒரு மனிதனின் சித்திரத்தைக் கவனமாக அநாயாசமான மேதையோடு தீட்டியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக சாதனை, லட்சிய சித்தி இவற்றை எய்துவதில் இறுதிக் கோடு வரை நிமிர்ந்தே நிற்கும் மனிதனின் ஆத்ம காம்பீர்யம்தான் இந்தக் கதையின் சங்கதி (Mஞுண்ண்ச்ஞ்ஞு).
மீனுடன் அக்கிழவன் நடுக்கடலில் மாட்டிக் கொள்கிறான். படகு மீனை இழுக்கிறதா மீன்தான் படகை இழுக்கிறதா என்ற சந்தேகமான நிலை. மூன்று தினங்கள் சரியான உறக்கமில்லை, உண்ண உணவுமில்லை. பச்சை மீன்களைப் பிடித்துக் கூறு போட்டுத் தின்கிறான். வலது கையில் மீன் துள்ளும்போது பலத்த காயம் ஏற்படுகிறது. அந்த மீன், அவனை விட, அவன் படகை விடப் பெரியது. அபாயகரமான எதிரி. அவன் அஞ்சவில்லை, ஒருமுறை கூட அவன் நடுங்கவில்லை.
எஃகு போன்ற உள்ளம் அவனுடையது. இருந்தாலும் கடலில் வழியறியாது சுற்றிப் பாய்மரத்தில் தங்கும் சிறிய கரிக்குருவியின் மீதும் அவன் அன்பு தாவுகிறது.
“சின்னஞ் சிறிய பறவைச் சிறுமியே, இளைப்பாறு! பிறகு வாழ்க்கை உனக்குத் தரும் சந்தர்ப்பத்தை, மனிதனைப் போலும், பறவையைப் போலும், மீன்களைப் போலும் தைரியமாய் ஏற்றுக் கொள்.”
மீன்கள், பருந்துகள், ஆமைகள், மனிதர்கள், பறவைகள், அவன் இதயம் எல்லாவற்றையும் அள்ளித் தழுவுகிறது. அவன் ஒரு கவிஞனைப் போல், காதலனைப் போல் வாழ்க்கையை நேசிக்கிறான்.
கிழவனுக்குக் கர்வம் இல்லை; தலைக்குனிவும் இல்லை. நடுக்கடலில், தன்னந் தனியாக அவனை விடப் பத்து மடங்கு பெரிய மீனுடன், அவன் போரில் ஈடுபட்டிருக்கும் போது அவன் உள்ளம் ‘பேஸ் பால்’ சாம்பியன் டிமேக்கியோ தன் காலில் குதிமுள் தரித்து ஆடும் ஆட்டத்திற்குச் சமானம் ஆகாது இது என்று கருதுகிறான்.
மீனும் பெரியது; அவனும் பெரியவன். இருவரும் கனவான்கள்தாம். இவர்களிடையில் ஓடும் உறவு அல்லது பகையின் நிகாச்சிகள் இரண்டு ‘கேரக்டர்’களின் மோதல்தான்.
“மீனே! உன் மேல் எனக்குப் பிரியமே; உன்னை நான் கௌரவிக்கிறேன். ஆனால், அஸ்தமனத்திற்குள் உன்னைக் கொன்றே தீருவேன்” என்கிறான் கிழவன். இதன் பெருந்தன்மையையும் கம்பீரத்தையும் பார்க்கும்போது, இதைத் தின்ப போகிறவர்களுக்கு தின்னும் தகுதி இல்லை என்று உருகுகிறான்.
மூன்று நாள் தன்னோடு அந்த மீனும் பட்டினி கிடப்பதற்காக அவன் வேதனையே படுகிறான். மீன் போராடத் தொடங்குகிறது.
“உன்னைவிடப் பெரிய, அழகிய, அற்புதமான, சாந்தமான, உயர்வான, பெருந்தன்மை மிகுந்த மீனை நான் கண்டதேயில்லை. வா, என்னைக் கொல், நமக்குள் யார் யாரைக் கொன்றாலும் எனக்கு அக்கறையில்லை” என்று அழைக்கிறான். போர் முடிகிறது. இறுதிவரை வீரனாகவே, அதைவிடப் பெரிய வீரன் கையில் அடிபட்டு அந்த மீன் மாள்கிறது.
கடலில் கொஞ்ச நேரம் பொழுது செல்கிறது. எறிந்த தூண்டிலையும் எடுக்காமல், படகைவிடப் பெரிய மீனை அப்படியே கடலில் இழுத்துச் செல்கிறான் சாந்தயகோ, பசித்த சுறாக்கள் மாண்ட மீனைக் கவ்வித் தின்கின்றன. அடக்க முடியாத வெறியுடன், வேதனை ததும்ப சுறாக்களை அவன் தன்னால் முடிந்த அளவு கொல்கிறான். அந்தச் சுறாக்களின் மீதும் அவனுடைய அன்பு தாவுகிறது.
“சுறாவைக் கொல்வதில் உனக்கென்ன ஆனந்தம்? அதுவும் மற்ற மீன்களைச் சாப்பிடுகிறது. அது பயமற்றது. அழகானது” என்ற கருதுகிறான்.
ஒன்று ஒன்றுக்கு மேல் ஒன்று; எத்தனையோ சுறாக்கள், அவனது வெற்றியை, நடுக்கடலில் சூறையாடுகின்றன.
“சாகும் வரை சண்டையிடத் தயார்” என்கிறான். கடைசியில் அவனுக்குச் சொல்ல முடியாத வருத்தம் உண்டாகிறது.
கடற்கரையில் அந்த மாபெரும் மீனின் எலும்புக் கூடு அவனது வெற்றியாய், அல்லது வெற்றியின் தோல்வியாய், நிற்கிறது. கிழவனுக்கு அதைக் கண்டும் நம்பிக்கை பிறக்கிறது. புதிய பெரிய மீன்களுக்காக, அவன் மீண்டும் செல்லத் தயார்! எந்தத் தோல்வியும், எவனை வீழ்ச்சியடையச் செய்யவில்லையோ, அவனே மனிதன். வென்றவனுக்கு ஒன்றுமில்லாமல் போகலாம். ஆனால் அவன் பெறும் வெற்றி இருக்கிறதே, அதுதான் வாழ்க்கை. கதை முடியும்போது, குருக்ஷேத்திரமும் கீதையும் ஞாபகம் வருகிறது. ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!’
மீண்டும் ஒரு தரம் சொல்கிறேன். 
இது வெறும் கதையல்ல. 
தலைவணங்காத, அன்புமிக்க, லட்சிய வீறுள்ள ஒரு மனிதனின் சித்திரம். எர்னெஸ்ட் மில்லர் ஹெமிங்வேயின் ஜல்லிக் கட்டுக் காளை போன்ற கருத்தும் வாக்கும் திமிறியடித்து ஓடும் நடையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 
கிழவன் சாகலாம், மீன்கள் சாகலாம். 
மனிதனும் பிரபஞ்சமும், மனிதனும் இயற்கையும், மனிதனும் சமூகமும் - இந்த ஓயாத போராட்டம் என்றைக்கும் இருக்கும். இந்த யுத்தத்தில் பங்கேற்க விரும்புவோர் எல்லாம், சாந்தியாகோவின் இதயத் துடிப்பை, அதன் அடிநாதத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.



No comments:

Post a Comment