Friday 21 December 2012

இரண்டு விசித்திரக் கலவைகள்


இரண்டு விசித்திரக் கலவைகள்

நமது இந்தியப் பண்பாட்டிலும், வாழ்க்கை முறையிலும் இரண்டு விசித்திரக் கலவைகள் இன்று தென்படுகின்றன.
ஒரு பக்கம் பழமை, மரபு இவற்றில் ஊறிவிட்ட மனோபாவம். அதிவேகமாக மாறிவரும் உலகிற்கு ஏற்ப இசைந்து செல்ல முடியாத தன்மை, முதியோர், மத்திய வயதினர் இதன் பிரதிநிதிகள்.
மறுபக்கம், காட்டுத்தீ பரவுவது போன்ற வேகத்துடன் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது கொள்ளும் மோகம். இளைய தலைமுறை இதன் பிரதிநிதி.
உடை, உணவு, கற்கும் மொழி கடைப்பிடிக்கும் அன்றாட நடைமுறை எல்லாம் இன்று அறிவியல் கருவிகளின் வேகத்தால் அச்சு அசல் அப்படியே மேற்கத்திய பாணிக்கு மாறிக் கொண்டு வருகின்றன.
இது நல்லதா கெட்டதா என்று ஆராய்ந்து ஒரு பலனுமில்லை எந்த மாற்றத்தையும் ஓர் ஆராய்ச்சி தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஆனால் நாம் ஏன் மாற வேண்டும்? நாம் எதற்கு ஒன்றைப் பார்த்து காப்பி அடிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள், ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி ஒரு தனிநபர் வளர்ச்சிக்கும் முக்கியமானவை.
பெரும்பாலும் விரும்பி ஏற்கும் மாற்றங்களின் காரணம் அடுத்தவர் நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதே.
அமெரிக்க அறிஞர் மெர்ஸன் எழுதினார் “என்னுடைய வாழ்க்கைக்கு நோக்கம், வாழ்க்கையே ஒழிய ஊரார் பார்த்து மெச்ச வேண்டும் என்பது அல்ல. வாழ்க்கை பார்வைக்குப் பளபளப்பாயிருந்து திடத்தன்மை இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் சாதாரணமாய் இருப்பது மேல்.”
நமது செய்தி வெளியீட்டுச் சாதனங்களும் அறிவியல் கருவிகளும் இடைவிடாது பளபளப்பானவை பற்றியே வலியுறுத்துகின்றன.
இன்னின்ன சௌகரியங்களை அடைவது, இன்னின்ன கருவிகள், வசதிகள் இவற்றை அடைவது இதுதான் வாழ்வின் பொற்காலக் கனவுகள் என்று எல்லா முனையிலும் நமக்கு வலியுறுத்தப்படுகிறது.
இளைய தலைமுறை பாப் மியூஸிக், மேற்கத்திய பண்பாடு இவற்றில் ஒரு கவர்ச்சி காரணமாக வேகமாய் ஈடுபடுகிறது.
நமது பழம் பெருமைகளைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை என்று எதிர் வீட்டுப் பெருமைக்குக் கொடி பிடிக்க வேண்டிய மோகம் அவசியமில்லை.
‘எல்லாம் வயசுக் காலத்தில் இப்படித்தான்’ என்று ஒரு கல்யாணம் நடந்து, ஒரு குழந்தை பிறக்கிற வரையில் ஒரு கலாச்சாரப் பிரமையில் இருந்து, வாழ்க்கையின் கனம் புரிந்தும் பலர், பழமையில் போய் கண்ணை மூடிச் சரணடைவது கண்கூடு.
இரண்டுமே தன்மதிப்புள்ள செயல்களாக முடியாது.
மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
அதிவேகமாகப் பழமை அழிந்து வருகிறது. அதிவேகமாக தர நிர்ணயம் செய்யப்படாத புதுமை வளர்ந்து வருகிறது.
இந்த இரு பார்வைகளுக்கும் இடைப்பட்ட ஒரு பாலம் போன்ற ஒரு புதிய பார்வை நமக்குத் தேவை.
“மகான்களின் சாதியான் யார் என்றால் அவர்களுடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அனுசரிக்காமல் தனக்குத்தானே குருவாக இருந்து ஒரு சமயத்தை ஸ்தாபிக்கிறவன் தான்” என்று எமர்ஸன் சொன்ன மாதிரி நமது பெருமைகளையும் சிறுமைகளையும் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளும் பார்வை நமக்கு வேண்டும்.
நமக்கு நாமே குருவாக இருந்து எதையும் பார்த்து நகல் செய்யாத கம்பீரத்துடன் நாம் நம் வழியைத் தேட வேண்டும்.
வேற்று நாகரிகங்களிடமிருந்தோ வேற்று மனிதர்களிடமிருந்தோ எதையும் எதிர்பார்க்காத மனோபலம் வந்துவிட்டால் இந்தப் பார்வை நமக்கு வந்துவிடும்.
பல நூறு ஆண்டுக்காலம் சார்ந்து சார்ந்து வாழ்ந்தே, பழக்கப்பட்டு விட்ட நமது நாடு, சுய சார்பை நோக்கிப் படிப்படியாக முன்னேறி வரும் இந்தக் கால கட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், இந்தப் பார்வையை ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டியவர்களாகிறோம். எதைச் சொன்னாலும் எந்தச் சிந்தனையை அமுல்செய்ய முயன்றாலும் (அதுக்கெல்லாம் இது காலமில்லே; இதெல்லாம் உதவாது) என்றுதான் நாம் தைரியமூட்டப்படுகிறோம்.
உண்மையில், காலம் என்பது எதிர்த்து நிற்கும் வலிமையுள்ள மனிதர்களால் தான் உருவாக்கப்படுகிறது.
இரண்டு உலக மகா யுத்தங்களுக்கு இடையே உருண்ட உலகில்தான் அஹிம்சை என்ற தத்துவம் நடைமுறைக்கு வந்து ஒரு நாட்டின் விடுதலைக்கு வழிகாட்டிற்று.
அப்போதும் கூட அதற்குக் காலமில்லை.
பார்வையைக் காலம் உருவாக்குவதில்லை, பார்வை தான் காலத்தை உருவாக்குகிறது.அஞ்சாத, அகம்பாவமில்லாத, பணிவுள்ள, புரிந்து கொள்கிற, சுயமான பார்வை நமது இளைய தலைமுறைக்குத் தேவை.
அவை ஒன்றுக்கொன்று வேறுபடலாம்; ஆனால் ஒன்றையொன்று அழித்து விட வேண்டும் என்ற வேகம் பெறக் கூடாது. தேசம் தான் நமது பிரதான லட்சியம் நாடு இருந்தால், வளர்ந்தால் நாம் வளர்கிறோம். நமது பண்பாடு, நமது வளர்ச்சி இவை நமது முயற்சிகளின்பால், நமது கருத்தோட்டங்களின் துணையுடன் கட்டப்படுவது தான் நிலைத்திருக்க முடியும். அப்போது தான் அது ஒரு புதிய பார்வை ஆகும்.

No comments:

Post a Comment