Sunday 23 December 2012

புதுமையின் சிற்பி.

 [தொடர்ச்சி ]
புதுமையின் சிற்பி.
இவ்வாறு பாரதியின் கவிதை, தமிழ் இலக்கியத்திற்கு உலகளந்த பெருபிரிவு, நுட்பம், ஓசை இன்பம், உயிரில் சுடும உவமைச் சுகம் எனப் பல பரிசோதனைகளைச் செய்து உருவம் உள்ளடக்கம் என இரண்டிலும் மகத்தான சாதனை புரிந்துள்ளது.
தமிழில் சக்திமிக்க ரசமான சிந்தனையைக் கிளர்கின்ற சூடும் சுவையுமுள்ள வேகமும் விறுவிறுப்புமுள்ள வசனம் பாரதியிடம் தான் ஆரம்பித்தது. 18, 19 ஆகிய இரு நூற்றாண்டுகளிலும் பைபிள் மொழிபெயர்ப்பு இராமலிங்க சுவாமிகள் வசனம், ராஜமையரின் உரைநடை வேத நாயகம் பிள்ளையின் நடை, விநோத ரச மஞ்சரியின் வசனம் எனப் பல நீரோட்டங்கள் இருந்தன.
எனினும் பாரதி தான் தமிழ் நடைக்கு அராபியக் குதிரைகளின் வேகத்தைக் கொடுத்தார். சிறு சிறு வாக்கியங்கள் வலிமை வாய்ந்த வினை முற்றுக்கள், கருத்தையும் காட்சியையும் குணச்ணீ குடணிt வடிவமாக்கும் முயற்சிகள் என இவற்றுக்கும் பாரதியே தலைமகன்.
பாரதியின் வசனம் கங்கு கரையற்ற காட்டாற்று வெள்ளம் போல் புதிய பூமிகளில் பாய்ந்திருக்கிறது. சிறுகதைகளை எழுதியிருக்கிறது. புதிய நாவல் முயற்சிகளைச் செய்திருக்கிறது.
பொருளாதாரம், உலக சரித்திரம், தார்மீக நெறி, பெண் விடுதலை சமூக சீர்திருத்தம், தமிழ் நாடகம் அன்றாட உலக நடப்பு இப்படி எந்த விஷயங்களையும் தமிழ் வசனத்தில் சுவைபட, நெஞ்சில் உயிரோவியச் சித்திரம் போல் பதியுமாறு எழுத முடியும் என்று முதன் முதலில் எழுதிக் காட்டி நிரூபித்தவர் பாரதியார்.
யூடோபியா எனப்படும் கனவுலக நிலையை பாரதியின் ஞான ரதம் சித்தரித்தது போல் அதற்கு முன்னும் பின்னும் தமிழ் இலக்கியம் சாதித்ததில்லை.
கவிதை பாரதியின் உணர்வுக்கு வடிகால், வசனம் பாரதியின் சிந்தனைப் போக்குக்கு வடிகால்.
பாரதியின் வசனம் தமிழிலக்கியத்திற்குப் புதிய திசைகளைக் காட்டிற்று. இன்று கதை, கட்டுரை நாவல் என எந்த உரைநடை முயற்சியையும் மேற்கொள்வோர் தம்மை அறியாமலேயே பாரதி போட்ட உரைநடைப் பாதையில் தான் பயணம் செய்கிறார்கள்.இதை யாரும் மறுப்பதற்கில்லை.
பாரதி தான் தமிழ் மொழியின் எல்லா நவீன சிந்தனைக்கும் தந்தை வசன கவிதை மட்டும் அவர் பார்வையில் படாதிருக்குமா? வசன கவிதையில் புதுக்கவிதையின் வித்து தூவப்பட்டது கவிதையின் கட்டுக்கோப்பிலிருந்தும் வசனத்தின் ஆயாசத்திலிருந்தும் நீங்கி ஒரு நிர்ப்பளுவான நிம்மதியோடு அவரது வசன கவிதை, சிட்டுக் குருவியை நிகர்த்துச் சிறகடிக்கிறது.
‘இளமை இனிது; முதுமை நன்று
உயிர் நன்று: சாதல் இனிது.
மூடன், புலவன்
இரும்பு, வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்.
மழை பெய்கிறது;
ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.
“தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்.”
இப்படி வசனத்தில் புதிய ரஸம் சேர்த்த கவித்வத்தைப் பாரதி சிறைப்பிடிக்கிறார். இதிலும் பாரதியின் காம்பீர்யம் எள்ளளவும் குறையக் காணோம்.
பாரதி, பத்திரிகைகளில் உதவியாசிரியராய் இருந்தவர். தாமே சில சொந்தப் பத்திரிகைகளும் நடத்தியவர். சிறு பிரசுரங்கள் வெளியீடு என்ற துறைக்கும் தலைமை வகித்து அதைத் தொடங்கியவர் அவர் ஒரு கை தேர்ந்த ஜர்னலிஸ்ட் கார்ட்டூன்களைத் தமிழில் முதன் முதல் கையாண்டவரும் கவிதைகளுக்கும் கதைகளுக்கும் சித்திரம் வரைய வேண்டும் என்று உத்தேசித்தவரும் அவர்தான்.
தமிழின் 20ம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு என்பதே தமிழ் ஜர்னலிஸத்தின் வரலாறு தான். எவ்வளவு பெரிய எழுத்தாளரும் ஏதேனும் ஒரு பத்திரிகையில் எழுதியவர்களே. பாரதியே கூட ஒரு பத்திரிகை எழுத்தாளர் தான்.
இத்துறையில் ரஸத்திரட்டு, குறிப்புக்கள், ஹாஸ்யம், மணித்திரன், உலக விநோதங்கள், விநோதக் கொத்து, விநோத விஷயங்கள் என்று அவர் இன்றைய ஜர்னலிஸ மாதிரிகளை அன்றே உயர்வான முறையில் கடைப்பிடித்தார். துணுக்குச் செய்திகள் எழுதுவதிலும் அவரே முன்னணியில் நின்றார். குடிப்பாங்கு எளிதாய் சமஸ்கிருதம் படிக்கும் வழி, குணமது கைவிடேல் என அறிவுக் கட்டுரைகள் எழுதும் கலையை அவரே ஆரம்பித்தார். ஆக இன்றைய பத்திரிகைக் கலைக்கும் பாதை போட்டவருள் பாரதி முதல்வர்.
முடிவாக பாரதி தமிழ் இலக்கியத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் வாரி வழங்கியதை எடை போடுவது எந்தத் தராசிற்கும் இயலாது. சுருக்கமாகச் சில வார்த்தைகளைச் சொல்லலாம்.
அவர் நவீன சிந்தனையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். கடுமையின் சிறையிலிருந்து தமிழை விடுவித்தார். அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தமிழைக் குடிசையின் கதவருகே கொண்டு போனார். உலகு தழுவிய மனித சமுதாயம் நடத்தி வரும் ஆத்மபரிசோதனைக்கான சகல இலக்கிய சோதனைகளிலும் தமிழை ஈடுபடுத்தினார். புதுமைக்கு அஸ்திவாரமிட்டார். எது புதுமை என்று செதுக்கிநிலை  நிறுத்திக் காட்டினார்.
அவரே புதுமையின் சிற்பி.

No comments:

Post a Comment