Friday 21 December 2012

பாவம் பள்ளி ஆசிரியர்

பாவம் பள்ளி ஆசிரியர்

நம் நாட்டுக் கல்வித் திட்டம் என்பதை போன்ற ஒட்டுப் போட்ட கம்பளிக்கு இணையாக வேறு ஒரு பொருளை நம்மால் சொல்ல முடியாது. நம் நாட்டில் சமூக அளவில் செய்யப்படும் பரிசோதனைகளில் பெரும்பகுதி கல்வியில்தான் செய்யப்படுகிறது.
அரசியல்வாதிகள் அடிக்கடி கை வைக்கத் துடிக்கும் சமுதாய விஷயம் கல்வியாகவே இருந்து வருகிறது.
இந்தக் கல்வித் திட்டத்தை ஏன் வைத்திருக்கிறோம்?
விளங்கவில்லை.
வேறு எதுவும் மாற்று இல்லை என்பதால் வைத்திருக்கிறோம். இதுவே உண்மை.
இதனால் ஏதாவது உருப்படியாக நடந்திருக்கிறதா? பட்டப் படிப்பும் முதுகலைப் பட்டப் படிப்புகள் பெருகியிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி இருக்கின்றது . அவ்வளவுதான்.
மாணவர் ஒழுக்கத்திற்கும் சமூகக் கட்டுக்கோப்பிற்கும் இந்த கல்வித் திட்டம் உதவுகிறதா? நிச்சயமாக இல்லை. இந்தச் சூழலில் அதைக் கற்பிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர் என்ன செய்வார்? தான் நம்பாத கல்வியை, தன்னை மதிக்காத மாணவர்களுக்கு, உண்மை நிலவரங்களோடு நேரடித் தொடர்பில்லாதவர்களால் தயாரிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் அவர் போதிக்க வேண்டும்.
அவரது ஊதியம் ஆசிரியர் செய்த கடுமையான போராட்டத்தால் சமுதாயம் மதிக்கிற விதத்தில் உயர்ந்ததென்னமோ உண்மை!
அதனோடு சேர்ந்து, ஏதோ நாற்காலியில் உட்கார்ந்து பொழுதை ஒட்டிக் கொண்டு, மானவரை மேய்துக் கொண்டு தண்டச்சம்பளம் வாங்குகிறார் என்ற எதிர்மறைக் கண்ணோட்டம் சமுதாயத்தில் நிலவவும் அதுவே காரணமாயிற்று.
மனப்பாடம் செய்து வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதில் எழுதி, மதிப்பெண் வாங்கினால் போதும். ஒருவனுக்கு வாழ்க்கைத் தகுதி வந்துவிடும் என்பது சமுதாய நிலை இந்தக் கல்வித் திட்டத்தின் கீழ், வரையறுக்கப்பட்ட இந்த பாடப் பகுதியுள்ள பாடப் புத்தகத்தை முடி, அதுவே உன் கடமை என்று நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது.
அந்த மதிப்பெண்ணை, சலிப்பூட்டும் பாடங்களைப் படிக்காமலேயே பெற, வெவ்வேறு வழிகளை சமுதாயமே நோட்ஸ் வடிவிலும், காப்பி அடிக்கும் வடிவிலும் வளர்த்து விட்டிருக்கிறது.
இரண்டு கைகளிலும் விலங்கு மாட்டி, கால் விலங்குமிட்டு சொன்னதை, ஒப்பிக்க வேண்டிய கிளிப்பிளை மாதிரி மாற்றப்பட்டிருக்கும் ஆசிரியர் எந்த சமுதாயத்தை உருவாக்குவார்?
நாளைத் தள்ளி, பொழுதை ஒட்டி மாதச் சம்பளம் வாங்குவதைத் தவிர வேறு  விதியில்லை என்று அவர் கீழே இறங்குகிறார்.
நாட்டின் எதிர்காலம் வகுப்பறையிலே உருவாக்கப்படுகிறது என்பது அலங்கார வாக்கியம். நாட்டின் எதிர்காலம் வகுப்பறையிலே சீரழிகிறது என்பது அவரது அனுபவம்.
[மேலும் இதுபற்றிய விவரமான குறிப்புகளை 'எழுததோசை' என்ற எனது மற்றொரு ப்ளாகில் காணலாம்]

No comments:

Post a Comment