Friday 21 December 2012

மிகயீல் ஷோலகவ்

மிகயீல் ஷோலகவ்
இருபதாம் நூற்றாண்டு மனித குலத்தைப் பொறுத்தவரையில் மகத்தான வெற்றிகளையும் மாபெரும் தோல்விகளையும் பெற்ற நூற்றாண்டு என்று கூறலாம்.
அறிவியல், தொழில் முன்னேற்றம் இவற்றில் மனிதன் பல கொடுமுடிச் சிகரங்களைத் தொட்டு விட்டான். ஆனால் மன அமைதி, கலைகளின் ஆழ்ந்து தோய்ந்து ஈடுபடும் ஓய்வு, இவற்றில் அவன் பெரிய தோல்விகளையே சந்திக்கிறான்.
மனிதன் முடுக்கிவிட்ட யந்திரம், அவனை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. எதிலும் ஆழ்ந்து தோய்ந்து ஈடுபட முடியாமல், அவன் யந்திர வேகத்துக்கு ஈடு கொடுக்கச் சிறுகச் சிறுக யந்திர மயமாகி வருகிறான்.
இந்த யந்திர மயமாதல் எல்லாத் துறைகளையும் போலக் கலைத் துளையிலும் நுழைந்துவிட்டது.
நல்ல சங்கீதம், நல்ல ஓவியம், நல்ல திரைப்படம், நல்ல சிற்பம், நல்ல நாவல் என்பது தேடித் தேடி அலைந்து கண்டுபிடிக்கப்பட வேண்டிய அரிய பொருளாகி விட்டது.
இந்த அருமை, நம் உள்ளத்தில் நாளுக்கு நாள் அதிருப்தியையும், நம்பிக்கை இன்மையையும் வளர்த்துச் செல்கிறது. நல்லனவற்றிற்குப் பதில் போலிகளைக் கொண்டே திருப்தியடைய வேண்டிய நிர்ப்பந்தம், நம்மை எல்லா வெளியீட்டு சாதனங்களின் மூலமும் நெருக்கிக் கொண்டு வருகிறது.
சோவியத் நாவல்கள் இந்த நெருக்கடியிலிருந்து சற்றேனும் விடுபட்டவை என்ற நம்பிக்கையை வழங்கின. எண்பதுகளில் காலமான மிகயீல் ஷோலகவ் டால்ஸ்டாய்க்கு இணையான எழுத்துலக ஜாம்பவான்களில் கடைசிக் கொழுந்தாக இருந்தவர்.
டான் நதி அமைதியாகப் பாய்கிறது. பண்படுத்தப்பட்ட கன்னி நிலம் அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள் என்ற மூன்று மகத்தான நாவல்கள் மூலம், உலக நாவல் இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர் மிகயீல் ஷோலகவ். ஷோலகவ் டால்ஸ்டாயைப் போலவே தம் கலை விஷயத்தில் அப்பழுக்கற்ற நேர்மைக்கு முதலிடம் கொடுத்தவர்.
ஒரு கதாபாத்திரத்தை அவர் உருவாக்கும்பொழுது வாழ்க்கையிலிருந்தே அதை எடுத்தார். அதன் புற வெளியீடுகளையும், உள்ளுணர்வுகளையும் டால்ஸ்டாயின் மரபுக்கேற்ற நேர்மையுடன் படைத்தார்.
இந்த ஒரு மகத்தான எழுத்தாளர்களுக்கும் இடையில் இருந்த பொதுவான கடமை ஒன்றுதான்.
சம காலத்திய மனித ஆன்மாவைச் சித்தரிப்பது.
ஆனால் இதில் இருவரும் கடைப்பிடித்த முறைகள் வெவ்வேறானவை.
டால்ஸ்டாய், மனிதனை பண்பாட்டு இயல் பார்வையோடு தீர்ப்பிட்டார். தன் சொந்தப் பார்வையில் கண்டிக்கத்தக்கது எது, அங்கீகரிக்கத் தக்கது எது என்று தோன்றியதோ, அதை வைத்து அவர் தீர்மானித்தார்.
ஆனால் ஷோலகவ், வரலாற்று பூர்வமான மாற்றத்தில் மனிதன் எந்த நிலையை எட்டியிருக்கிறானோ அதைக் கொண்டு அவனைத் தீர்ப்பிட்டார்.
ஷோலகவ், அடிப்படையில் டால்ஸ்டாயிடமிருந்து மாறுபட்டவர். அவருக்குத் தணியாத வாழ்க்கைத் தாகம் இருந்தது. அவரது விதவிதமான கதாபாத்திரங்களில் பல, வாழ வேண்டுமென்ற தணியாத தாகம் கொண்டவை.
காதல், துயரம், மகிழ்ச்சி, துன்புறுதல் என்ற அழுத்தமான மனோ உணர்வுகளை, தனிச் சிறப்பான வடிவம் கொடுத்துத் தெட்டத் தெளிவாக, அவர் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.
டால்ஸ்டாயின் பாத்திரங்கள் வாழ்க்கையை ஒரு நீதிபதி ஒதுங்கி நின்று வாழ்க்கையை ஒரு வழக்காகக் கூர்ந்து கவனிக்கின்றவை. நிலைத்த சத்தியம் எதுவென்று, இருளிலிருந்து ஒளியை நோக்கி நடக்கும் இடைவிடாத பயணம் போன்று, அவரது கதைப் போக்கும் பாத்திரங்களும் நம்மை அழைத்துச் செல்லும்.
பாத்திரப் படைப்பு என்பது ஷோலகவ்வின் நாவல்களில், ஒரு பிரித்துச் சொல்லக் கூடிய அம்சமாக இராது. ஒட்டு மொத்தமான ஓர் ஒருங்கிணைந்த சித்தரிப்பின் ஊடே ஆங்காங்கே அது வெளிப்படும்.
அவர் நிலப்பிரபுவையோ அல்லது ஒரு விவசாயியையோ, ஒரு வியாபாரியையோ சித்தரிக்கிறார் என்றால் அந்தந்த வர்க்கத்தின் மேன்மையும் தாழ்வும் கலந்தாகவே அவர் பாத்திரங்கள், உள்ளத உள்ளவாறே வெளிப்படும்.
குடும்ப உறவுகள், காதல், வெறுப்பு, நட்பு முதலியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்கள் தமது வர்க்க குணங்களிலிருந்து மாறுபடாத அச்சு அசல் மனிதர்களாகப் படைக்கப்பட்டார்கள்.
ஷோலகவ்வின் எழுத்துத் திறனில், மிகவும் பெரிய சாதனை ஒன்று உண்டு. ஒரு கால கட்டத்தின் வாழ்க்கையை அதன் கதாபாத்திரங்கள் யாவும் உண்மையான ஆனந்தத்தை அடைய இடைவிடாது போராடுகின்றவை.
உண்மையான ஓர் மாபெரும் எழுத்தாளர் ஒரு கால கட்டத்தின் மனிதன் எப்படி இருந்தான் என்று காட்டுவதோடு நின்று விடுவதில்லை.
ஒரு லட்சியத்தை நோக்கி, அவன் எவ்வாறு வீறு நடை போட்டான். என்பதையும் காட்டியாக வேண்டும் அப்படிக் காட்டினால் ஒழிய, அவனது எழுத்து எந்த மகத்துவத்தையும் பெறுவதற்கில்லை.
இந்த விஷயத்தில், ஷோலகவ்வின் மூன்று நாவல்களிலும் வருகிற கதாநாயகர்களாகட்டும், கதாநாயகிகளாகட்டும், தம் பணியை செவ்வனே நிறைவேற்றி இருக்கின்றனர்.
இதன் தொடர்பாக ரஷ்ய இலக்கிய மேதைகள் இருவரது கருத்தை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.
[ஒரு நாவலை ஓர் எழுத்தாளன் எழுதும்போது தன்னைப் பொறுத்த அளவில் வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என்ற விஷயத்தில் ஒரு தெளிவான உறுதியான கருத்து வைத்திருக்க வேண்டும். இதைப் பற்றி அவனுக்கு ஒரு நிச்சயம் இல்லை என்றால் அவனால் நல்ல தன்மையுள்ள ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளியிடுவது இயலாது.- டால்ஸ்டாய்

நல்ல எழுத்தாளர் அல்லது சர்வதேசத் தன்மை கொண்ட எழுத்தாளர் என்று நாம் மதிக்கும் எந்த எழுத்தாளரிடமும் ஒரு பொதுப் படையான தனிப்பண்பு உள்ளது. அவர்கள் ஏதோ ஒரு மையத்தை நோக்கி நகர்கின்றனர். தம்மைப் பின்பற்றி வரச்சொல்லி விரல் அசைக்கின்றனர். அவர்கள் காட்டும் வாழ்க்கை உள்ளது உள்ளபடியே இருப்பது மட்டுமல்ல. அது எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. இதுதான் நம்மைக் கவரும் அம்சம் - ஆண்டன் செகாவ்.
இந்தப் பெரிய பணியில் அவர் பெற்ற வெற்றி டான் நதி அமைதியாகப் பாய்கிறது. நாவலில் “கிரகரி மெலெகோவ்” என்ற மையப் பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவிலும் தெளிவாகப் புலனாகும்.
ஓர் உண்மை மனிதன் யார் என்ற விஷயத்தில் ஷோலகவ்வுக்கு அசைக்க முடியாத உறுதி உண்டு, அவன் சுறுசுறுப்பானவன். வெல்ல முடியாத தனித்தன்மை கொண்டவன், நன்மை, சத்தியம், அழகு முதலிய உயர்ந்த லட்சியங்களுக்காக அவன் இடைவிடாது போராடுபவன்.
ஷோலகவ்வின் கதாநாயகர்கள் இந்த உன்னதப் பண்புகளைப் பெற்றவர்கள் அல்லது அதைப் பெற பாடுபட்டவர்கள்.
பிரபல ரஷ்ய எழுத்தாளர் கொரொலெங்கோ ஒருமுறை “மனிதன் ஆனந்தமாயிருக்கவே பிறப்பிக்கப்பட்டவன்; ஒரு பறவை எப்படி பறப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்டதோ அதைப் போன்று” என்று குறிப்பிட்டார்.
உலக நாவல் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்த மூன்று நாவல்களை எழுதிய ஷோலகவ், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார்.
மனித உழைப்பின் பெருமை, தீமைக்கு எதிராக மனித ஆன்மா இடைவிடாது நடத்தி வரும் போராட்டம் இவற்றை அவரது நாவல்கள் ஒலிம்பிக் தீப்பந்தம் போல் உயர்த்திப் பிடித்தன.
அவர் காலமானபோது, சர்வதேச நாவல் வாசகர்கள் ஒரு மாபெரும் தனிப்பட்ட இழப்பை அனுபவித்து வருந்தினார்கள். ஷோலகவ் முகமறியாத பலரால் அவ்வளவு நேசிக்கப்பட்டவராயிருந்தார். அவர் மனித குலத்தின் சொத்து.

No comments:

Post a Comment