Monday, 28 January 2013

விதிகளின் தொடர்ச்சி


விதிகளின் தொடர்ச்சி 
விதி : 25
1) இதில் ஒவ்வொருவருக்கும் தம்முடைய மற்றும் தம் குடும்பத்தின் சுகாதாரத்துக்கும் நலவாழ்விற்கும் தேவையான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொள்ளும் உரிமை உண்டு.
இதில் உணவு, உடை, வீட்டுவசதி, மருத்துவ வசதி மற்றும் தேவையான சமூக வேலைகள் இவை அடங்கும்.
மேலும் வேலை இல்லாமல் போகும் காலத்திற்கு வேண்டிய பாதுகாப்பு, நோய், உடல் ஊனம், வைத்தியம் முதிர் வயது அல்லது இவை போன்ற தம் கட்டுப்பாட்டை மீற வேரிடும் சூழல்களால் வாழ வழி அற்றுப்போகும் நிலை ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு பெற உரிமையும் உண்டு.
2) தாய்மைப் பருவமும், குழந்தைப் பருவமும் விசேஷ கவனத்திற்கு உரியனவாகும். திருமண பந்தத்தினாலோ அல்லது அதை மீறியோ பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் ஒரே விதமான சமூகப் பாதுகாப்பைப் பெறவேண்டும்.
விதி : 26
1) ஒவ்வொருவருக்கும் கல்விபெறும் உரிமை உண்டு. கல்வி, குறைந்தபட்சம் தொடக்க நிலைகளிலோ அடிப்படைக் கட்டங்களிலோ இலவசமாக்கப்படவேண்டும்.
தொழில் நுட்பம் மற்றும் தொழில் துறைக் கல்வி பொதுவாக அனைவருக்கும் கிட்டுவதாக அமையவேண்டும். உயர் மட்டக் கல்வித்தகுதி அடிப்படையில் சமமான முறையில் அனைவருக்கும் கிட்டவேண்டும்.
2) மனித ஆளுமையை வளர்க்கவும், மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதிக்கும்படியான முறையில் கல்விநெறிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து நாடுகள், இனங்கள் அல்லது மதக் குழுக்களிடையே புரிந்துகொள்ளுதல், பொறுமை, நட்பு ஆகிய பண்புகளைக் கல்வி வளர்க்கவேண்டும். சமாதானத்தை நிலைநிறுத்த ஐ.நா. சபை மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கல்வி உறுதுணையாக இருக்கவேண்டும்.
3) தங்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியைத் தரவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் முன்னுரிமை பெற்றோர்களுக்கு உண்டு.
விதி : 27
1) சமுதாயத்தில் கலாச்சார வாழ்வில் பங்குபெறவும், கலைகளை அனுபவிக்கவும் அறிவியல் முன்னேற்றங்களில் பங்கேற்கவும் அதன் பலன்களை அனுபவிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
2) ஏதேனும் ஓர் அறிவியல், இலக்கியம் அல்லது கலைப் படைப்பிற்கு ஒருவர் உரியவராகும் பட்சத்தில் அவருக்கு அதிலிருந்து கிடைக்கும் தார்மீக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு.
விதி : 28
இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரங்களையும் சமுதாய அளவிலும் சர்வதேச அளவிலும் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
விதி : 29
1) ஒவ்வொருவருக்கும் சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் உண்டு. அவரது சுதந்திரமான ஆளுமை வளர்ச்சி அவற்றை நிறைவேற்றவதன் மூலமே சாத்தியமாகும்.
2) தம் உரிமைகளையும், சுதந்திரங்களையும் நுகர முனையும் ஒவ்வொருவருக்கும் சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்ட சில எல்லைகள் உண்டு. அவை ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பொது நலத்திற்கும், நீதிநெறி, பொது ஒழுங்கு ஆகியவற்றின் நியாயமான தேவைகளை ஏற்கவும் அமைந்தவை.
3) இந்த உரிமைகளையும், சுதந்திரங்களையும் எக்காரணத்தை முன்னிட்டும் ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறானவற்றுக்குப் பயன்படுத்தக்கூடாது.
விதி : 30
இந்தப் பிரகடனம் வெளியிட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் ஏதாவது ஒன்றினை அழிக்கும் நோக்கமுள்ள செயலைப் புரியவோ, அல்லது ஒரு நாடு, குழு அல்லது தனி நபர் அத்தகைய அழிவு நடவடிக்கையில் ஈடுபடத் தமக்கு உரிமை இருப்பதாகவோ இதைத் தமக்குச் சாதகமான முறையில் திரித்து உரைக்கக்கூடாது.
மேற்கண்ட இந்தப் பிரகடனம் `மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்டம்' ஒன்றை இயற்றுவதற்கான முதல்படியாகவே காணப்பட்டது.
1976இல் இந்தச் சட்டம் மூன்று குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை ஏற்று அமலுக்கு வந்தது. அவை வருமாறு :
1) பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்.
2) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்.
3) இரண்டாவதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கும் சுயவிருப்பமுள்ள அரசியல் அறிக்கை.
முதலாவது ஒப்பந்தத்தை ஏற்கும் எந்த நாடும் தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறது.
அது வேலை செய்யும் உரிமை, நியாயமான கூலி, சமூகப் பாதுகாப்பு, உகந்த வாழ்க்கைத் தரம், பசி பட்டினியிலிருந்து விடுதலை, சுகாதார வசதி, கல்வி ஆகியவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்கிறது.
மேலும், தொழிற் சங்கங்களில் சேரவோ அல்லது அவற்றை அமைக்கவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதையும் அந்த நாடு அங்கீகரிக்கிறது.
இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்கும் எந்த நாடும் தன் மக்களை எந்த ஒரு குரூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவாக்கும் செயல்களிலிருந்தும் சட்டத்தின்மூலம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்.
மேலும், அந்த நாடு ஒவ்வொரு தனி நபருக்கும் உயிர் வாழ்க்கை, சுதந்திரம் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் ஆகியவற்றுக்கு உரிமை உண்டு என்பதையும் தெரிவிக்கிறது.
அடிமைத்தனத்தைச் சட்டவிரோதமாக்கல்; நியாயமான நீதி விசாரணைக்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்தல், தன்னிச்சையாக ஒருவரைக் கைதுசெய்தல், காவலில் வைத்தல் ஆகியவை நடந்தால் அவரைப் பாதுகாத்தல் போன்ற அம்சங்களையும் அது ஏற்கிறது.
மூன்றாவதாக சுய விருப்பத்தோடு கூடிய அரசியல் அறிக்கை. ஐ.நா. சபை வெளியிட்ட உரிமைப் பட்டியலிற்கு எதிரான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால், அதற்கு எதிராகக் குற்றம் சாட்டும் உரிமை தனி நபர்களுக்கும் நாடுகளுக்கும் உண்டு என்பதை நிச்சயிக்கிறது.
மேற்கண்ட ஒப்பந்தங்களை மிகச் சிறந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் பல சங்கடங்கள் உள்ளன.
முதலில் இதை அமலாக்க ஐ.நா.வால் முடியுமா? தார்மீக ரீதியாக வற்புறத்துவதைத் தவிர வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஐ.நா.வுக்கு அதிகாரம் இல்லை.
ஒரு நாட்டின் தலைவர் முரட்டுத்தனமாகவும் விடாப்பிடியாகவும் மனித உரிமைகளைச் சிதைத்து வரலாம். ஆனால், அதற்கு எதிராகச் சர்வதேச சமுதாயம் எதையும் செய்ய இயலாது.
ஏனெனில், ஐ.நா. சாசனத்தின் முக்கிய அம்சமே அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள அரசுகளை மதிக்கவேண்டும் என்பதே. உரிமை கோரும் எந்த ஒரு செயலையும் `அது உள்நாட்டு விஷயத்தில் தலையீடு' என்று எளிதில் திரித்துக் கூறி விடலாம்.
எனவே எது தேவையெனில், சூழ்நிலைக்கு ஏற்ப விரைந்து, ஆற்றலோடு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐ.நா. சபையை மாற்றி அமைத்தலே!
மேலும் தேவையாவது ஒன்று, அதிக ஜனநாயகப் பண்புள்ள ஐ.நா. சபை. அது சிறியது, பெரியது, வலியமையானது, பலவீனமானது, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி, அடிப்படை மனித உரிமைகளுக்கான முழு ஈடுபாட்டை அனைத்து நாடுகளிடையிலும் ஏற்படுத்த அந்த ஐ.நா. பணியாற்ற வேண்டும்.
ஆக, இவை தேவையெனில் ஐ.நா. சபையையே அடிப்படையில் மாற்றியாக வேண்டும். மாறிவரும் இன்றைய உலகச் சூழலில் இதை ஓர் அவசரப் பணியாகக் கொள்ளவேண்டும்.

மனித உரிமைப் பிரகடனம்


மனித உரிமைப் பிரகடனம்
மனிதனுக்கு அடிப்படியில் உள்ள உரிமைகளை வரையறுத்து விளக்கமாக ஐ.நா.சபை இந்தப் பிரகடனத்தை வெளியிட்டது. அவற்றின் விதிகள் வருமாறு.
விதி : 1
எல்லா மனித ஜீவன்களும் பிறப்பால் சுதந்திரமானவர்களே. கௌரவத்திலும் உரிமைகளிலும் சமமானவர்களே. பகுத்தறிவு, மனச்சாட்சி ஆகிய இரண்டும் வாய்ந்த அவர்கள், ஒருவரோடு ஒருவர் சகோதர உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.
விதி : 2
இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட எல்லா உரிமைகளையும், சுதந்திரங்களையும் ஒவ்வொருவரும் பெறத் தகுதியானவர்களே.
அதில் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் பேன்ற பிற கருத்துக்கள், தேசிய மற்றும் சமூகத் தோற்ற மூலங்கள், சொத்துரிமை, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து ஆகிய இவற்றின் காரணமாக எழும் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது.
ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அதன் அரசியல், பிராந்திய மற்றும் சர்வதேச மதிப்பை வைத்து எந்தப் பாகுபாடும் வழங்கப்பட மாட்டாது.
அந்த நாடு சுதந்திரம் பெற்றதா, கூட்டாட்சி உள்ளதா, சுயாட்சி இல்லாததா அல்லது இதுபோன்ற ஆட்சியுரிமை பற்றிய பிற எந்த வரம்புகளும் இந்த மதிப்பீட்டில் அடங்காது.
விதி : 3
ஒவ்வோரு தனி நபருக்கும் உயிர் வாழ்வு, சுதந்திரம் பாதுகாப்பிற்கான உரிமை உண்டு.
விதி : 4
எவரையும் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ நடத்தக்கூடாது. அடிமை முறையும், அடிமை வியாபாரமும் அவற்றின் எல்லா வடிவங்களிலும் தடைசெய்யப்பட வேண்டும்.
விதி : 5
எவரையும் சித்திரவதைக்கு ஆளாக்கக்கூடாது. குரூரமான, மனிதத் தன்மையற்ற மற்றும் இழிவான முறைகளில் ஒருவரை நடத்தவோ, தண்டிக்கவோ கூடாது.
விதி : 6
எல்லா இடங்களிலும் சட்டத்தின் முன்னால் ஒரு தனி மனிதர் என்ற மதிப்பைப் பெற  ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 7
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். சட்டத்தின் சமமான பாதுகாப்பை எவ்வித வேறுபாடும் இன்றிப் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
இந்தப் பிரகடனத்தை மீறும் எந்த ஒரு பாகுபாட்டிற்கோ அல்லது அத்தகைய பாகுபாட்டைத் தோற்றுவிக்கும் எந்த ஒரு தூண்டுதலுக்கோ எதிராகச் சமமான பாதுகாப்பைப் பெறவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.
விதி : 8
அரசியலமைப்பின் மூலமோ, சட்டத்தின் மூலமோ வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் எந்தச் செயலுக்கும் எதிராக, உரிய தேசிய நீதிமன்றங்களில் நியாயம் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 9
விசாரணையின்றி எந்த நபரையும் கைதுசெய்வதோ, சிறையில் வைப்பதோ, நாடு கடத்துவதோ கூடாது.
விதி : 10
ஒருவரது உரிமைகள் பற்றித் தீர்மானிக்கவும், அவரது கடமைகள் பற்றித் தீர்மானிக்கவும் அல்லது தமக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டிற்காகவும் அவர் ஒரு சுதந்திர நீதிமன்றத்தின்முன் நியாயமான பொது விசாரணைக்கு முறையிடலாம். அவர் அதற்கு முழுமையான சமத்துவ உரிமை உடையவராவார்.
விதி : 11
1) ஒரு சட்டபூர்வமான குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும், தனக்கு  தேவையான பாதுகாப்பை அளிக்கிற முழுஉறுதி தருகின்ற பொது விசாரணை, சட்டபூர்வமாக நடந்து முடியும் வரை, தாம் நிரபராதிதான் என்று கூறிக் கொள்ள உரிமை உண்டு.
2) ஒரு செயலைச் செய்வதற்காகவோ அல்லது செய்ய மறுத்ததற்காகவோ அந்தக் காலத்திய தேசிய அல்லது சர்வதேச சட்டத்தின்கீழ் வராத ஒன்றில் ஈடுபட்டதாக எவர் ஒருவரையும் குற்றவாளி ஆக்கக் கூடாது.
விதி : 12
ஒருவரது அந்தரங்கம், குடும்பம், கடிதப் போக்குவரத்து, இவற்றின்மீது எவரும் தன்னிச்சையாகத் தலையிடக்கூடாது. அவரது கௌரவம் மற்றும் மதிப்பின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது.
அத்தகைய தலையீடு மற்றும் தாக்குதல்கள் ஏற்பட்டால், சட்டபூர்வமான பாதுகாப்பைப் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
விதி : 13
1) ஒவ்வொருவருக்கும் தமது நாட்டின் எல்லைகளுக்குள் பயணம் செய்யும் சுதந்திரமும் வசிக்கும் உரிமையும் உண்டு.
2) ஒவ்வொருவருக்கும் தம் நாடு உள்பட எந்த நாட்டையும் விட்டு வெளியேறவும் தன் நாட்டிற்குத் திரும்பி வரவும் உரிமை உண்டு.
விதி : 14
1) தமக்கு நேரிடம் கொடுமைளில் இருந்து மீளப் புகலிடம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்லவும், அங்கு தங்கியிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
2) அரசியல் சார்பற்ற குற்றங்களில் ஈடுபடுவோரோ, ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் விரோதமான செயலில் ஈடுபடுவோரோ இந்த உரிமையைக் கோர முடியாது.
விதி : 15
1) ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2) ஒருவரது குடியுரிமையை எவரும் தன்னிச்சையாகப் பறிக்கக்கூடாது. தமது குடியுரிமையை வேறொரு நாட்டிற்கு அவர் மாற்ற விரும்பினால் அந்தச் சுதந்திரத்தை மறுப்பதும் கூடாது.
விதி : 16
1) மதம், ஒரு நாட்டின் குடியுரிமை, இனம் போன்ற எந்த வரையறையுமின்றி வயது வந்த ஆண்களும், பெண்களும் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை அமைக்கும் உரிமை உள்ளவர்கள்.
2) திருமணம் முடிவு செய்யும்போதும், திருமணத்தின் போதும், மணமுறிவின் போதும் அவர்களுக்குச் சம உரிமை உண்டு.
3) விரும்புகின்ற ஜோடியினரின் சுதந்திரமான முழு சம்மதத்தின் பேரில் மட்டும்தான் திருமணம் நடக்கலாம்.
4) குடும்பம்தான் சமுதாயத்தின் இயற்கையான அடிப்படைக் குழு அலகு. எனவே, சமுதாயம் மற்றும் அரசாங்கம் இரண்டிலிருந்தும் பாதுகாப்பு பெறும் உரிமை அதற்கு உண்டு.
விதி : 17
1) ஒவ்வொருவருக்கும் தனியாகவோ, பிறருடன் சேர்ந்தோ சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு.
2) தன்னிச்சையாக ஒருவரது சொத்துக்களை எவரும் பறிக்கக் கூடாது.
விதி : 18
ஒவ்வொருவருக்கும் சிந்தனைச் சுதந்திரத்தோடு மனச்சாட்சி, மற்று மதச் சுதந்திரமும் உண்டு.
இந்த உரிமையில் ஒருவர் தம் மதத்தையோ, நம்பிக்கையையோ மாற்றிக்கொள்ளும் அம்சமும் அடங்கும்.
ஒருவருக்குத் தனியாகவும், பிறரோடு ஒன்றுசேர்ந்தும் பகீரங்கமாகவோ, அந்தரங்கமாகவோ தன் மதத்தைப் பரப்பவும், ஒரு போதனைகயில் நம்பிக்கை காட்டவும், ஒன்றை அனுசரிக்கவும், தொழவும் கடைப்பிடிக்கவும் சுதந்திரம் உண்டு.
விதி : 19
ஒரு கருத்தை மேற்கொள்ளவும், அதை வெளியிடவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எந்தக் குறுக்கீடும் இன்றி தன் கருத்தை ஒருவர் கடைப்பிடிக்கலாம். பிரதேச எல்லைப் பாகுபாடின்றிச் செய்திகளையும் எண்ணங்களையும் அவர் தேடிச் செல்லவும், பெறவும், வெளியிடவும் உரிமை உண்டு.
விதி : 20
1) சமாதான முறையில் ஒன்று கூடவும், சங்கம் அமைக்கவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான உரிமை உண்டு.
2) ஒரு சங்கத்திலோ, கூட்டத்திலோ சேரவேண்டும் என்று எவரும் எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
விதி : 21
1) ஒவ்வொருவருக்கும் தானே நேரடியாகவும் அல்லது சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவும், தன் நாடடின் அரசாங்கத்தில் பங்கேற்கும் உரிமை உண்டு.
2) தன் நாட்டின் பொதுச் சேவையில் பங்கேற்கவும் ஒருவருக்கும் உரிமை உண்டு.
3) மக்களின் தீர்மானம்தான் அரசாங்கத்தின் அடிப்டை அதிகாரமாகும். இந்தத் தீர்மானம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் உண்மையான தேர்தலின் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும்.
நடக்கும் தேர்தலில் பொதுவாகவும், சமமான வாக்குரிமைக்கு வாக்குறுதி அளிப்பதாகவும், ரகசிய வாக்களிப்பு முறையிலோ அல்லது அதற்கு இணையான, சுதந்திரமான வாக்களிப்பு முறைகளை அனுசரித்தோ நடைபெற வேண்டும்.
விதி : 22
ஒவ்வொருவருக்கும் சமுதாயத்தில் ஓர் உறுப்பினர் என்ற வகையில் சமூகப் பாதுகாப்புக்கு உரிமை உண்டு.
ஒவ்வொருவருக்கும் நமது கௌரவத்திறகும், தம் ஆளுமையின் சுதந்திரமான வளர்ச்சிக்கும் தேவையான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் உண்டு.
அவை அந்தந்த நாட்டின் அமைப்பு மற்றும் வளங்களுக்கு ஏற்புடையதாகவும், தேசிய முயற்சி மற்றும் சர்வதேசக் கூட்டுறவின் மூலம் பெறத்தக்கதாகவும் அமையும்.
விதி : 23
1) ஒவ்வொருவருக்கும் வேலைசெய்யும் உரிமை உண்டு. அவ்வாறே வேலையைத் தேர்ந்து எடுக்கும் சுதந்திரமும் உண்டு. நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான சூழல்களில் வேலைசெய்யும், வேலையின்மைக்கு எதிரான பாதுகாப்பைப் பெறவும் சுதந்திரம் உண்டு.
2) எந்த வேறுபாடும் இன்றி, செய்யும் சமமான வேலைக்கேற்ற, சமமான சம்பளம் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
3) வேலைசெய்யும் ஒவ்வொருவருக்கும், நியாயமான ஏற்கத்தக்க ஊதியம் பெறும் உரிமையுண்டு. எந்த ஊதியம் அவரையும் அவரது குடும்பத்தையும் காப்பதுடன், அவரது மனித கௌவரத்திற்கு மதிப்பளிப்பதாகவும் தேவைப்பட்டால் சமூகப் பாதுகாப்பினால் அது உறுதிசெய்யக் கூடியதாகவும் அமையவேண்டும்.
4) தனது நலன்களுக்காகத் தொழிற் சங்கங்களை அமைக்கவும், அதில் சேரவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி : 24
ஒவ்வொருவருக்கும் ஓய்வெடுக்கவும் விடுமுறை பெறவும் உரிமை உண்டு. இதில் நியாயமான அளவிலான வேலை நேரம், சம்பளத்துடன் கூடிய காலாந்தர விடுமுறை இவை அடங்கும்.[தொடரும்]

சுதந்திரக் கொள்கை,சோஷலிச சிந்தனை,மூன்றாவது உலகச் சிந்தனை


சுதந்திரக் கொள்கை,சோஷலிச சிந்தனை,மூன்றாவது உலகச் சிந்தனை
சுதந்திரக் கொள்கை
சுதந்திரக் கொள்கை உருவானது மேற்கித்திய நாடுகளில்தான். அது படிப்படியாகப் பல கட்ட வளர்ச்சி பெற்றது.
பண்டைய ஐரோப்பாவிலும், இடைக்கால ஐரோப்பாவிலும் நீதியும் உரிமைகளும் சில விசேஷப் பிரிவினருக்கு மட்டுமே என்று ஒதுக்கப்பட்டிருந்தன.
நிலப் பிரபுக்கள்,  குறுநில மன்னர்கள், அடிமைகளை வைத்திருந்த சுதந்திரக் குடிமக்கள் இவர்கள்தான் நீதியும் உரிமைகளும் கோரக் தகுதி உள்ளவர்கள் என்று மதிக்கப்பட்டனர்.
சாதாரணப் பொதுமக்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. அவர்கள் தங்கள் எஜமானர்களின் விருப்பு வெறுப்பிற்கு அடிபணிந்து, சார்ந்து வாழ்பவர்களாகவே இருந்தனர்.
தனி நபர் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட முதலாவது சட்ட விதிகள் லியான் அரசின் மன்னன் ஒன்பதாவது அல்போன்ஸாவின் காலத்தில்தான் தோன்றியது.
பிரபுக்கள் சபையில் இளவரசர்களுக்கும் நிலப் பிரபுக்களுக்கும் இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தம்தான் அது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒழுங்கான நீதி விசாரணை நடத்தவேண்டும். ஒருவரது உயிர், மானம், வீடு, சொத்து இவற்றைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இவை உள்ளிட்ட வரிசையான உரிமைகள் சட்ட விதிகளாயின.
இத்தகைய ஒப்பந்தங்களில் மிகவும் புகழ் வாய்ந்தது, `மாக்ன கார்டா' என்று அழைக்கப்பட்ட `மகா சாசனம்'தான்.
இது 1215இல் இங்கிலாந்தில் மன்னர் ஜான், தம் நிலப் பிரபுக்களின் நிர்ப்பந்தத்தால் வழங்கிய ஒப்பந்த உரிமை.
உரிமைகள், சுதந்திரங்கள் இப்படி எல்லாவற்றையும் உறுதிசெய்யும் நோக்கத்தினால் அது தோன்றவில்லை. என்றாலும் தனி நபர் சுதந்திரம் என்ற கருத்திற்கு அதுவே முதல் வடிவம் தந்தது. அடுத்த பல நூற்றாண்டுகளுக்குத் தனி நபர் சுதந்திரத்தின் சின்னமாக அதுவே விளங்கியது.
மகா சாசனத்தின் 39வது பிரிவு, எந்தச் சுதந்திர மனிதனும் அவனது சமகால மக்களின் சட்டபூர்வமான தீர்ப்பு மற்றும் நாட்டின் சட்டத்தினால் தவிர, வேறு எவராலும் சிறையில் அடைக்கப்படவோ, நாடு கடத்தப்படவோ, எந்த வகையிலும் அழிக்கப்படவோ கூடாது என்று அறிவிக்கிறது.
மனித உரிமைகளின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம் 17வது நூற்றாண்டில்தான் தொடங்கிற்று. தாமஸ் ஹாப்பென், ஜான் லாக், ழீன் ழக்கே ரூஸ்ஸோ முதலிய தத்துவ அறிஞர்களும் அரசியல்வாதிகளும்தான் அதைத் தோற்றுவித்தனர்.
எல்லா வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று அவர்கள் நிலைநாட்டினர்.
அதன் பின்தான் தனி நபருக்கும், மனித உரிமைகளுக்கும் இடையே ஒரு புதிய பார்வை எழுந்தது.
சுதந்திரத்திற்கான உரிமை, மனச்சாட்சி சுதந்திரம். பேச்சுரிமை முதலிய உரிமைகள் வெள்ளோட்டம் விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில்தான் முக்கிய விளைவுகள் குறித்த பல பிரகடனங்கள் தோன்றின.
1689இல் ஆங்கிலேய உரிமை மசோதா அமலுக்கு வந்தது. இது சுதந்திரமானதும் அடிக்கடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டியதுமான பாராளுமன்றத்தின் சட்ட ஆட்சியை வலிபுறுத்தியது.
  1776இல் சுதந்திரத்திற்கான அமெரிக்கப் பிரகடனம் மனிதனின் அடிப்படை உரிமைகளை வகுத்தது. இதில் சுயாட்சியும் அடங்கும்.
மாறுபட முடியாத சில உண்மைகள்
எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டவர்கள்
இறைவனால் அவர்களுக்குச் சில நீக்கமுடியாத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியன அடங்கும்.
இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே ஆளப்படுவோரின் இசைவின் பேரில் நியாயமான அதிகாரம் பெற்று அரசாங்கங்கள் அமைகின்றன.
1789இல் மனிதனின் உரிமைகள் குறித்து பிரான்ஸில் வெளியான பிரகடனம் மனிதனின் இயற்கையான, பிரிக்க முடியாத புனித உரிமைகள் எனச் சிலவற்றை வகுத்தது.
அவை சுதந்திரம், சொத்துரிமை, பாதுகாப்பு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்பனவாகும்.
 சோஷலிச சிந்தனை
இந்தச் சிந்தனை மரபு, சோஷலிச நாடுகளில்தான் முக்கியமாக உருவாகியது. இது தனி மனிதன் மற்றும் சமுதாயத்தின் சுதந்திரப் பார்வைக்கும் சவால் விட்டது.
இதனால் மனித உரிமைகளைப் புரிந்துகொள்வதில் ஒரு மாபெரும் மாற்றம் தோன்றியது.
சுதந்திரச் சிந்தனை என்பது தனி மனிதர்களையே மையமாகக்கொண்டது. அது அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை வலியுறுத்தியது.
ஆனால், சோஷலிச சிந்தனை தனி நபரின் சுதந்திரத்திற்குப் பதில் எல்லோருடைய சமத்துவத்திலும் கவனம் திருப்பியது.
மக்களின் சமுதாய உரிமைகளோ, பொருளாதார உரிமைகளோ பாதிக்கப்படுமேயானால், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் நிலைநிற்க முடியாது என்ற சோஷலிச சிந்தனை வாதாடியது.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிகளுக்குத் தனி நபர் சுதந்திரம் பங்கம் விளைவிக்கக்கூடாது, பசித்த வயிறுகளோடு மக்கள் தெரு ஓரங்களில் வசிக்கும்போது தனிநபர் சுதந்திரத்தைப் பற்றிப் பேசி என்ன பயன்?
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, செய்ய ஒரு வேலை, சுகாதாரத் தேவை, கல்வி முதலிய அடிப்படை யதார்த்தங்களோடு ஒப்பிடுகையில், அந்தச் சுதந்திரம் ஓர் ஆடம்பரம்போல் காணப்படுகிறது.
இவற்றைச் சாதிக்க சமத்துவ சிந்தனைக்கே கவனம் திரும்பவேண்டும். எந்த அரசும் தன் மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கைமீது மேலும் அதிகமாக ஆக்கபூர்வமான பங்கு ஏற்கவேண்டும்.
 இதையே சோஷலிச சிந்தனை வலியுறுத்துகிறது.
 மூன்றாவது உலகச் சிந்தனை
சோஷலிச அணி, முதலாளித்துவ அணி என்ற இரு பிரிவுகளிலும் சேராத இந்தியா போன்ற கோஷ்டி சேராத நாடுகளை மூன்றாவது உலகம் என்று அழைக்கிறோம்.
இவை சோஷலிச சிந்தனை வலியுறுத்தும் சமூகப் பொருளாதார உரிமைகளோடு, கலாச்சார உரிமைகளுக்கே முதலிடம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அந்நிய ஆதிக்கத்தின் பிடியில்  சிக்கியிருந்து விடுபட்ட இவை, இப்படிக் கோருவதற்கு ஒரு மூலக் காரணம் உண்டு.
ஆட்சி உரிமை மட்டுமே அந்நியர் கையிலிருந்து மாறியது. ஆனால் சமூகப் போக்கிலும், பொருளாதாரத் துறையிலும் அவர்கள் மறைமுகமாகவும் தந்திரமாகவும் தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.
இந்த மூன்றாம் உலக நாடுகள் சுய வளர்ச்சி, சுய தீர்மானம் இவற்றை மேற்கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஆற்றல் வழங்கவேண்டும் என்று வாதிடுகின்றன.
எந்த ஒரு நாட்டு மக்களின் மீதும் அந்நிய கலாச்சாரமோ, அதன் வாழ்க்கை முறையோ சுமத்தப்படுவது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இவ்வாறே அவை கணக்கிடப்பட வேண்டும். இதுவே மூன்றாம் உலகின் வாதமாகும்.
7.21. ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம்
1948இல் ஐ.நா. சபை வெளியிட்ட பிரகடனம் இது. நவீன உலக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையை இது அறிவிக்கிறது.
இது மனித உரிமைகளைப் பற்றி முதலாளித்துவ நாடுகள், சோஷலிச நாடுகள், மூன்றாம்  உலக நாடுகள் ஆகிய யாவும் கூறும் கருத்துக்களையும் இணைக்கும் சமரச முயற்சிதான்.
இருந்தாலும் இது ஒரு புதிய மனித சமுதாயத்திற்கான பார்வையை அளிக்கிறது. எனவே, எல்லாக் காலத்திற்குமான மனித உரிமைச் சாசனம் என இதை அழைக்கலாம்.
இதற்கு முன்பாக 1945இல் ஐ.நா. வெளியிட்ட சாசனம் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் பாதுகாத்து வளர்ப்பதையே ஜ.நா.வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என அறிவித்தது.
அது அடிப்படை மனித உரிமைகளில் நம்பிக்கை., தனி நபரின் கௌரவம் மற்றும் தகுதியில் நம்பிக்கைகளை வெளியிட்டது.
ஆண்களும் பெண்களும் சமம்; நாடுகள் பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் சமம் என்று ஏற்றுக்கொண்டது
அதன்பின் 1948 டிசம்பர் 10ஆம் தேதி ஐ.நா.வின் பொதுக்குழுவில் மனித உரிமைகள் பற்றிய பிரகடனம் வெளியிடப்பட்டது. அதற்கு இன்றைய அளவும் உலகம் முழுவதும் விரிவான செல்வாக்கு உள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அரசியல் அமைப்புகள், சட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட பலவகை உரிமைகள் குறித்த சம்பிரதாயங்கள் இவற்றில் எல்லாம் மனித உரிமைப் பிரகடனம் வெளியிட்ட கருத்துக்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
ஒரு புதிய உலகை அமைக்க விரும்புவோர் ஒவ்வொருவருக்கும் இது பயன்படும். இந்த நம்பிக்கையில் அவற்றின் முழு வடிவத்தையும் தொடரந்து தருகிறோம்.

அன்பும் நீதியும்


அன்பும் நீதியும்

அன்பு நீதிக்கு உயிரூட்டுகிறது. நீதியைத் தூண்டுவதாக இருக்கிறது. நீதியைக் கண்டுபிடிக்கிறது, சீர்படுத்துகிறது, எளிமையை உயர்த்துகிறது. அதைக் கடந்து நிற்கிறது.அன்பு நீதியைத் தவிர்ப்பதில்லை. அதை உறிஞ்சிக் கொள்வதில்லை. அவ்வாறே அன்பு நீதியை வேறொன்றால் இட்டு நிரப்புவதில்லை. மாறாக அதற்கு முதலிடம் தருகிறது. நீதிக்கு அன்பு குரல் கொடுக்கிறது.ஏனெனில், அன்பு, உண்மை, தர்ம சிந்தனை என்பவை நீதியின்றி நிலைத்திருக்காது.
- இரண்டாவது போப் ஜான்பால்

ஒவ்வொரு சமூக அமைப்பின் நாடியாகவும் நீதியே இருக்கவேண்டும் என்று கண்டோம். அதற்கும் மேலே சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒருவரோடு ஒருவரை நாம் அன்பினால் பிணைக்க வேண்டும். அப்போதுதான் உலகம் ஓர் உண்மையான மனிதகுடும்பமாக மாறும்.
எல்லா மனித உறவுகளையும் மிக ஆழமாக ஊடுருவி இருக்கும் சக்தி அன்பே.
இதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அன்புதான் எல்லா ஒழுக்கத்திற்கும் முழுமையான அஸ்திவாரம். அதுவே நீதியின் அடிப்படைக் கொள்கை.
கிரேக்கர்கள் மாபெரும் அறிவாளிகளாக இருந்தும் அதை உணரவில்லை. அவர்கள் எல்லா நற்பண்புகளுக்கும் நீதியே அரசி என்று கருதினார். மனிதனின் உணர்வுகளில் அன்பும் ஒன்று என்று கணக்கிட்டனர்.
அன்பு, நீதி இரண்டுமே மனித உறவுகளோடு தொடர்புள்ளவை. ஆனால் அன்புதான் உண்மையிலேயே நெருக்கமானது.
தனி நபர்களும், சமுதாயங்களும் வைத்திருக்கும் உடமைகளையும் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் என்றும் நீதி பேசுகிறது.
ஆனால் அன்புதான் நெருக்கமான முறையில் உறவுகளைப் பற்றிப் பேசுகிறது. மனங்களும் இதயங்களும் ஒன்றுசேர்வதைப் பற்றி அது குறிப்பிடுகிறது.
தனி நபர்களிடையே உள்ள உறவு அன்பினால்தான் முதலில் மிகவும் ஆழமாகத் தொடப்படுகிறது. அதற்கு அப்புறம்தான் நீதி வருகிறது.
நீதியும் அன்பும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. அதில் சந்தேகமில்லை. நீதி நியாயமான அன்பு காட்டுவது என்பது முடியாது.
நீதி என்பது அன்பின் விதியை அமலாக்கத் தேவையான குறைந்தபட்ச அளவைச் சுட்டிக்காட்டுகிறது. நீதியின் கோரிக்கை ஒருவர் செய்கிற தர்மத்தின் அளவினால் நிறைந்துவிடாது.
எது ஒருவருக்கு நியாயமாக உரியது என்று நீதி கருதுகிறதோ, அதை ஒருவர் அன்பினால் மற்றவருக்கு மனமுவந்து அளிப்பதற்கு இணையாக்க முடியாது.
எங்கே நீதி இல்லையே, அங்கே உண்மை அன்பும் இருக்கமுடியாது. ஆனால் அன்பு நீதியையும் கடந்து செல்கிறது. அன்பினால்தான் நீதி தன் உள்ளார்ந்த முழுமையை அடைகிறது.
அன்பு இல்லாத நீதி வறண்டது, மாமூலானது. அது விலகி நின்றுவிடும். எனவே, அன்பும் நீதியும் ஒருங்கிணைந்து செல்லவேண்டும்.
அன்பு நீதிக்குத் தூண்டுகோலாக வேண்டும். நீதி அன்புக்கு வழிகாட்ட வேண்டும்.
அன்பும் நீதியும்
*மனிதர்களுக்கு நீதியைவிட அடிப்படைத் தேவையானது அன்புதான்.
*நீதி நிறைவேறியுள்ளது என்று அன்புதான் முழு உத்தரவாதம் அளிக்கிறது. அவ்வாறே நீதியின் தோல்வி, அன்பின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
*நீதியின் குறிக்கோள்கள், அன்பு என்ற உள்ளுணர்வால்தான் எட்டக் கூடியவை.
*அன்பே நீதிக்குத் தெளிவான பார்வை அளிக்கிறது. முழு விரிவாக்கம் தருகிறது.
*அன்போடு செயலாற்றும் ஒருவன், நீதியின் குறைந்தபட்சத் தேவைகளை முதன்மையாகக் கொள்ளாமல், சமுதாயத்தில் தம்முடன் வாழ்பவரின் உண்மைத் தேவைகளையே முதன்மையாகக் கொள்கிறான்.
*மற்றொருவரின் நலனுக்காகத் தன் சொந்த உரிமைகளை விட்டுக் கொடுக்க அன்பு எப்போதும் தயாராக இருக்கிறது. அவை சமுதாயத்திற்கோ, ஒரு தனி நபருக்கோ எந்தப் பாதகமுமின்றி விட்டுக் கொடுக்க வேண்டியவை என்றே அன்பு கருதுகிறது.

. நீதியும் மனித உரிமையும்

சமூக நீதியின் முதலாவது கொள்கையே ஒரு மனிதருக்கு அவர் மனிதர் என்ற முறையில் மதிப்புக் கொடுப்பதுதான்.
அதற்குத் தெளிவான பொருள் - மனித உயிர் என்ற வகையில் ஒருவருக்குரிய வேறுபடுத்த முடியாத உரிமைகளை இனம் காண்பதும், அதைப் பாதுகாப்பதும்தான்.
எனவே, சமூக நீதி என்பதை மனித உயிர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது என்ற கோணத்தில்தான் அணுகவேண்டும்.
மனித உரிமைகள் என்பவை இன்று பெரிதும் அலசப்படும் விஷயம் ஆகிவிட்டது. சமூக வாழ்வில் மனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் மதிப்புதான் மையமாக இருக்கவேண்டும். இப்படி இன்று வாழ்வின் எல்லாத் துறை மக்களிடமிருந்தும் முழக்கங்கள் எழத் தொடங்கிவிட்டன.
ஆனால், என்றும் உலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன, மீறப்படுகின்றன.
மனித உரிமைகள் மீறப்படுவதை எவ்வாறு தடுப்பது?
தங்களுடைய அடிப்படை உரிமைகள் என்னவென்று மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல், அவர்களுக்கு அதைக் கற்பிக்காமல் அது எப்படிச் சாத்தியம்? முதலில் செய்யவேண்டிய கடமை அதுவே.
அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது எதிர்த்துப் போராடும் வலிமையை அவர்களிடையே உருவாக்கவேண்டும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதுதான் இன்றைய முக்கியமான சமூகப் பிரச்சனை.
மனித உரிமைகள் என்ற கருத்து எவ்வகையிலும் எளிமையான ஒன்றோ, நேரடியாகச் சொல்லக்கூடிய ஒன்றோ அல்ல. மனித உரிமைகள் என்னவென்று புரிந்துகொள்ளும் உணர்வு படிப்படியாக மாறி வந்திருக்கிறது, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. இன்றும்கூட அது, சமுதாயத்திற்குச் சமுதாயம், குழுவுக்குக் குழு வேறுபடுகிறது.
சில நேரங்களில் மனித உரிமைகள் என்ற கருத்தே சுதந்திரமாகத் திரித்துக் கூறப்படுகிறது. சர்வாதிகாரிகள் தாங்களே தொடர்ந்து பதவியில் இருக்கவேண்டும் என்பதற்காக அதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சில அரசாங்கங்கள் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை, மனித உரிமைகளின் பேரால் ஒழித்துக் கட்டியுள்ளன, சித்திரவதை செய்திருக்கின்றன.
பண பலம் படைத்தவர்கள் தங்கள் சுயநலங்களைப் பாதுகாக்கவும், ஏழைகளைச் சுரண்டவும் மனித உரிமைகளை வஞ்சித்து இருக்கிறார்கள்.வஞ்சித்தும் வருகிறார்கள்.

நடைமுறை வாதமும் நியாய உணர்வும்


நடைமுறை வாதமும்  நியாய உணர்வும்

சென்ற பதிவில்  கண்ட கருத்தோட்டங்களுடன்  புதிய சில கருத்தோட்டங்களைக் காண்போம் .அவற்றில் முக்கியமானது நடைமுறைவாதம்.
நடைமுறை வாதம்
`ஒழுக்கம் என்பதை எங்கும் எப்போதும் எல்லோருக்கும் ஒரே விதமாகப் பொருந்துவது என்று பார்க்கக்கூடாது' என்று நடைமுறைவாதிகள் கூறுகின்றனர்.
அது காலத்திற்கேற்ப வளரும், மாறும். எந்தக் காலத்திற்கு எது பொருந்துதோ அதுதான் சரியான ஒழுக்கம்.
சௌகரியமானது, காலத்திற்கு ஏற்றது இவைதான் நீதியின் அஸ்திவாரம் என்கிறார்கள் இவர்கள்.
ஒரு தனி நபரோ, நாடோ செய்யும் செயல்கள் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்றனவா? அதனால் மனித உயிர்களின் துன்பம் குறைகின்றதா? ஆம் என்றால்  அவைதான் நியாயமானவை.
நீதி, அநீதி என்பது எல்லாம் ஒரு சமுதாயம் தீர்மானிப்பதுதான். ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்திற்கு நியாயமாகத் தோன்றுகிறது  அதே சமுதாயத்திற்கு மற்றொரு சமயம் நியாயமற்றதாக மாறுகிறது .
நீதியின் அர்த்தங்கள் இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மாறும். பழைய ஆடைகள் போலவும் கிழிந்தவை போலவும் அவை அகற்றப்படும்.
எனவே, நீதி என்பதே முழுமைபெற்ற லட்சியம் அல்ல. தெளிவான நிர்ணயம் ஆகாது. மிக உயர்ந்த பண்பும் ஆகிவிடாது.
நடைமுறை வாதம் இப்படி வளர்கிறது. இந்த வகையான சிந்தனை நீதியை மிகவும் கொச்சைப்படுத்துவதாகும் . நீதி என்பது பச்சோந்தித் தன்மை கொண்டது அல்ல.அது தொடர்ந்து நிறம் மாற்றிக் கொள்வதில்லை. நீதி என்பது உலகில் என்றென்றும் நின்று நிலவி வரும் ஒரு நிலையான ஒழுங்கைக் குறிப்பிடுகிறது.
உலக மதிப்பீடு என்ற ஒன்று உண்டு. அந்த மதிப்பீடு எந்த அளவு காரிய சாத்தியமானது, எவ்வளவு உபயோகமானது என்ற எல்லைக்கும் அப்பால் தன்னளவில் அது அர்த்தமுடையது.
மனித ஜீவன்கள் என்ற முறையில் எது சௌகரியமானதோ, அதை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு மற்றதை வேலைக்கு உதவாது என்று தள்ளி வைத்து விடு வதில்லை.
ஒரு போக்கினால்  எவ்வளவு பாதகம் நேர்ந்தாலும் நீதிக்காக நாம் எதிர்நீச்சல் போடுகிறோம்.அதுவே மனித சுபாவத்தின் அடிப்படையாகும். அதைக்கொண்டே எல்லா மதிப்பீடுகளும் உருவாகின்றன.
அவை முற்றிலும் மாறாதவை. உலகு தழுவியதுமான மதிப்பீடுகள் . நிச்சயம் அவற்றுள் நீதியும் ஒன்று.
 நியாய உணர்வே நீதி
ஜான் ரால்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கருத்து இது. எல்லா மனித உயிர்களும் சமம் என்ற கொள்கைகளோடு இது தொடங்குகிறது.
எல்லோருக்கும் பேச்சுரிமை உண்டு. ஒழுக்கமும் பகுத்தறிவும் உள்ள ஜீவன்கள் என்ற அடிப்படையில் எது நல்லது, எது நீதி என்று தீர்மானிக்கும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு.
ஆனால் அதே சமயம் சமூகத்தில் நிச்சயம் சில ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. சிலருக்கு அதிகத் திறமைகள் உள்ளன. சிலருக்கு அவை இல்லை.
சிலர் அதிகப் பணம், சொத்துக்கள், அந்தஸ்து, ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவற்றுக்கு ஒரே காரணம் அந்தச் சலுகைகளோடு அவர்கள் பிறந்துள்ளனர்.
இந்த ஏற்றத்தாழ்வுகள் இயற்கையான உண்மைகள். எந்தச் சமுதாயத்திலும் எப்போதும் அவை இருந்து வரும். அவற்றை அகற்றவேண்டியது அவசியமில்லை.
இந்த ஏற்றத்தாழ்வுகளை எல்லோருக்கும் உகந்த விதத்தில், குறிப்பாக வசதியற்றவர்களுக்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்துவதே நீதியாகும்.
வாய்ப்புகளில்கூட சமத்துவம் தேவை. சமூகத்தில் உள்ள அலுவலகங்களில் நுழையும் அந்தஸ்துகள் அனைவருக்கும் திறந்துவிடப்படவேண்டும். தகுதி ஒன்றை மட்டுமே அதற்காகக் கணக்கில் எடுக்கவேண்டும். இதுவே ஜா ரால்ஸின் கருத்து.
இந்தக் கண்ணோட்டம் கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் இது மக்களின் இயற்கை உரிமைகளை ஒதுக்கிவிட்டு சட்டம் இயற்றுவோரின் சட்டமுறைக்கு ஏற்ப நீதி அமைய வேண்டும் என்கிறது.
நீதி என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கான சட்டத்தின் பொறுப்பாகிறது. சட்டம் இயற்றுவோரின் திறமையில்தான் நீதி அடங்கியுள்ளது.
ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் சரிப்படுத்தக் கூடியவை. ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ஏன் ஒருவர் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும்? இந்தக் கேள்விகளையே இவர் பொருட்படுத்த வில்லை.
 மனித மதிப்பீடு
இன்று பெரும்பாலான மக்கள் முழுமனதோடு ஏற்கும் நீதியின் மற்றொரு அஸ்திவாரத்தை இனி காணலாம்.
எல்லா மனிதர்களையும் நாம் நியாயமாக நடத்தவேண்டியது அவசியம். காரணம் ஒவ்வொரு மனித ஜீவனும் ஒரு தனி நபர்.
ஒரு மனிதர் என்ற முறையில் அவருக்கு அழிக்கமுடியாத ஒரு பெருமை உண்டு. எனவே அவர் மரியாதைக்குரியவர். நீதி என்பது ஒவ்வொருவரது பிறப்புரிமை.
மனித மதிப்பீடு என்பதில் தனித்துவம், சுயேச்சை இவை இரண்டும் அடங்கம். எனவே அந்த அடிப்படையில் ஒரு மனிதருக்குரிய மரியாதை என்பது அவருக்குரிய சுதந்திரத்தை மதிப்பதாகும்.
தன் வாழ்வை எப்படி உருவாக்கிக் கொள்வது? எப்படித் தன் மகிழ்ச்சியைத் தேடிச் செல்வது என்று தீர்மானிக்கும் ஆற்றலே சுதந்திரம் என்படும்.
அது சுய தீர்மானத்துக்கு ஒருவர் வரும் ஆற்றலைக் குறிக்கிறது. ஆனால் மனித சுதந்திரம் என்பது முழுமையானதல்ல. அது பிறரைச் சார்ந்தது. அது பொதுநலத்தால் வரையறுக்கப்படுவது.
இந்த மதிப்பீட்டில் தனி நபருக்குரிய சுதந்திரம் முற்றிலும் ஒதுக்கிவிடப்படுவதில்லை. அத்தியாவசியமாகத் தேவையென்றால் ஒழிய முடிவெடுக்கும் உரிமையைச் சிலரிடமே விட்டுவிடக்கூடாது.
தங்கள் சொந்த வாழ்க்கைக்கு முடிந்த அளவு மக்களையே பொறுப்பேற்க அனுமதிக்க வேண்டும்.
பிறரையே மையமாகக்கொள்வது இதன் இரண்டாவது குறிக்கோள். இயற்கையிலேயே நாம் சமூக ஜீவிகள்.
பிறருக்காகவும் பிறரோடும் வாழவே நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். தனி நபர் என்ற முறையில் ஒருவர் பெற்றுள்ள அழிக்கமுடியாத மதிப்பு பிறர் ஏற்பவை. எனவே பிறரால் வரையறுக்கப்படுபவை.
எனவே, தனி நபர் வாதம் என்பது ஒழுக்க ரீதியாகப் பார்த்தால் பொறுப்பு வாய்ந்தது. அதாவது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் பெருமையானது, நான் பிறருடைய பெருமைகளை மதிக்கிறேனா, அதில் அக்கறை காட்டுகிறனா என்ற கேள்விக்கான பதிலைச் சார்ந்தது.
இது எல்லா மக்களும் அடிப்படையில் சமம் என்ற கொள்கையை நிறுவுகிறது.
தனி நபர்கள் என்ற முறையில் இங்கு எஜமானர்களும் இல்லை; அடிமைகளும் இல்லை;. ஏழைகளும் இல்லை; பணக்காரர்களும் இல்லை; உயர்ந்த சாதியும் இல்லை; தாழ்ந்த சாதியும் இல்லை.
அதே சமயம் சமத்துவம் என்றால் அனைவரும் ஒரே தன்மை உடையவர்கள் என்று பொருளல்ல. இது முற்றிலும் இயலாதது.
நாம் அனைவரும் தனி நபர்கள். நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள்.
சமத்துவம் தனிப்பட்ட வேற்றுமைகளை மதிக்கிறது. அவை பிறப்பினால் தோன்றும் இயற்கையான வேறுபாடுகள். தொழில் மற்றும் ஆர்வங்களால் தோன்றும் சமூக வேறுபாடுகள்; இடம், காலம் ஆகியவற்றில் தோன்றும் கலாச்சார வேறுபாடுகள்; மதிப்புகள், விருப்பங்களினால் தோன்றும் மனவியல் வேறுபாடுகள்என்று வேறுபடும்.
ஆனால், அவை ஒருவரது செயல்பாடுகளில் வெளிப்படுபவை, இரண்டாம் பட்சமானவை. பிறப்பினால் நாம் அனைவரும் சமமானவர்களே.
எல்லா மக்களும் அடிப்படையில் சமம் என்ற கொள்கைக்குப் பல அர்த்தங்கள் உண்டு.
முதலாவதாக, மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களானாலும், எம்மொழியைப் பேசினாலும், எந்தக் கருத்தை வெளியிட்டாலும், எந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் அவர்கள் எந்த இடத்திலும் எப்போதும் சமமானவர்களே.
மக்கள் பிறரோடு கொள்ளும் உறவுகளில் இதை உணர்ந்து மதித்து நடக்கவேண்டும்.
இரண்டாவதாக, வாய்ப்புகளில் சமத்துவம் கொடுக்கவேண்டும். ஒருவருக்கு ஒருவர் இடையே உள்ள வேறுபாடுகளை இது மறக்கவில்லை. ஆனால் மக்கள் தங்களை வாழ்வித்துக் கொள்வதற்கான உரிமையை இது வலியுறுத்துகிறது.
சமுதாய அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களில் தங்கள் திறமைக்கேற்ற அளவு பணியாற்றவும், அவற்றில் பங்கேற்கவும் மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும்.
மூன்றாவதாக, சமுதாயத்தில் பங்கீட்டுச் சமத்துவம் வேண்டும். சமூகத்தின் செல்வ வளங்களிலும், கிடைக்கும் சேவைகளிலும் எல்லோருக்கும் சமமான பங்கீடு இருக்கவேண்டும்.
ஊனமுற்றோர், வசதி குறைவானோர் இவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
குறிப்பாக ஏழை, பணக்காரர் இடையே உள்ள வேற்றுமை ஏற்கமுடியாத அளவு அதிகரித்திருந்தால் அப்போது இதற்குச் சிறப்புக் கவனம் வேண்டும்.
இறுதியாக சமத்துவம் என்பது சலுகைகள் மட்டுமல்ல, பொறுப்புகளும் கூட. ஒவ்வொருவரும் தமது திறமைக்கு ஏற்ற விதத்தில் பொது நன்மைக்குப் பாடுபடுவது அவரது தார்மீகக் கடமையாகிறது.

சட்டம்,நாடு, உபயோகத்துவம்


சட்டம்,நாடு, உபயோகத்துவம்
சென்ற பதிவில் நீதியின் அஸ்திவாரம் பற்றி ஒரு பார்வையைக்கண்டோம் 
இனி பிற பார்வைகளைக் காண்போம் 

சட்டம்
சிலர் சட்டம்தான் நீதியின் அஸ்திவாரம் என்கிறார்கள். நீதி என்பதே சட்ட நடவடிக்கைதான் என்று சில சமயம் கூறப்படுகிறது.
சில சமயம் சட்ட நடவடிக்கை இயங்கத் துணையாக நிற்கும் கருவியாக நீதி வர்ணிக்கப்படுகிறது.
உண்மையில் நீதி என்பது சட்டங்களோடு சம்பந்தப்படாதது. அவற்றின் அமலாக்கத்தோடு மட்டுமே சம்பந்தப்படுவது என்றும் கூறப்படுகிறது.
சட்டம் என்பது முடிவான அலகாக மட்டும் இருந்து வருகிறது.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க இயலாது. ஏனெனில், நாம் ஏற்கெனவே அறிந்தபடி நீதி எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. இது சட்டத்தைக் காட்டிலும் அடிப்படையான கருத்து.
நீதி என்பது ஓர் ஒழுக்கக் கட்டுப்பாடு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு.
எல்லா சமூக ஏற்பாடுகளுக்கும் முடிவான நியாயத்தை வழங்குவது ஒழுக்கம்தான்.
ஒழுக்க விதிகளோடு எந்த அளவு தொடர்புள்ளவையாக இருக்கின்றதோ அதுவரைதான் சமூக ஏற்பாடுகள் அல்லது ஒரு நிறுவனம் நீடித்திருக்க முடியும்.
நீதி என்பதுதான் சமுதாயத்தின் உச்சப் பண்பு, மீதி எல்லாப் பண்புகளும் அதைச் சுற்றிச் சூழ்ந்திருப்பவைதான். சட்டம் என்பது நீதியின் சேவகனே!
சட்டத்தின் நோக்கம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதுபோன்ற தெளிவான சூழ்நிலைகள் ஏற்படும்போது நீதியை வடிவமைத்துத் தருவது மட்டுமே!
சட்டங்கள் நியாயமாகவும் இருக்கலாம், அநியாயமாகவும் இருக்கலாம், அது நீதியின் லட்சம் எதுவென்று அவை தீர்மானிக்கும் தீர்மானத்தின் அடிப்படையைச் சார்ந்தது.
நீதியைத்தான் சட்டம் சார்ந்திருக்கிறது. சட்டத்தை நீதி சார்ந்திருக்கவில்லை.
இதனால் சட்டம் நீதியின் அஸ்திவாரமாகச் செயலாற்ற இயலாது என்றே முடிவு செய்யவேண்டியுள்ளது.

நாடு
சில புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், `நாடே ஒழுக்கத்தின் அஸ்திவாரம். அதனால் நீதிக்கும் அதுவே அஸ்திவாரம்' என்று கூறுகின்றனர்.
ஜெர்மன் தத்துவ அறிஞர் ஹெகெல், `சமூக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அரசே முழு அதிகாரம் உடையது' என்று வாதாடுகிறார்.
`ஒழுக்கம், நியாயம், நீதி உள்ளிட்ட பிற பண்புநெறிகள் அனைத்திற்கும் நடே ஒட்டுமொத்தப் பிரதிநிதி' என்கிறார்.
அரசுக்கும் சட்டங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. சட்டங்கள் நாட்டின் உள்ளுணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பது அவர் கருத்து. எனவே, ஒருவன் நியாய உணர்வோடு இருக்கவேண்டுமானால் நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து விடவேண்டும்.
அவ்வாறு கீழ்ப்படிவதின் மூலம் நாம் வேறு யாருக்கோ கீழ்ப்படியவில்லை. நமக்கு நாமேதான் கீழ்ப்படிந்து கொள்கிறோம். ஏனெனில் நமது எண்ணமும், சட்டங்களும் உண்மையில் மாறானவை அல்ல.
இந்தச் சிந்தனைப் போக்கில் நாட்டிற்கு என்று தனியே ஓர் எண்ணம், ஒரு வாழ்க்கை இருப்பதுபோன்ற உருவகப்படுத்தப்படுகிறது.
தேசம்தான் முழுமையானது, அதுவே லட்சியம். தனி நபர்கள் தேச வளர்ச்சிக்கு உதவும் வெறும் கருவிகள். ஒவ்வொன்றையும் தேச நலன் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடவேண்டும்.
மனித உரிமைகள், அவர்களுக்குள்ள பிற சுதந்திரங்கள் எல்லாம் நாட்டின் எண்ணத்திற்கு இசைய, அதற்கு ஒத்துப்போனால் மட்டுமே சாத்தியமானவை.
தேசிய உணர்வோடு செயல்படுவதே நீதி என்று கருதப்படும் நாட்டின் கொள்கைக்கு, நிபந்தனையின்றிக் கீழ்ப்படிகிறவர்கள்தான் நியாயமானவர்கள் ஆவர். எவ்வளவு உயர்ந்தவர்களாயினும் கீழ்ப்படியாதவர்கள் அநியாயக்காரர்கள்.
இந்த வகைக் கண்ணோட்டம் தவறானது என்பது தெளிவு. நீதிதான் நாட்டின் செயல்களை நெறிப்படுத்தவேண்டுமே ஒழிய, நாடு நீதிகளைக் கட்டுப்படுத்தக்கூடாது.
நீதியைப் போற்றுவதும் சமாதானத்தைக் காப்பதும்தான் நாட்டின் முயற்சியாக அமையவேண்டும்.
மேலும், இவ்வகைக் கண்ணோட்டம் அபாயகரமானதும் ஆகும். நாட்டையே பிரதானமாக்கிவிடக்கூடாது.
அந்த மனப்போக்கு வளர்ந்து நாசிசமும், பாசிசமும் ஆகி லட்சக்கணக்கான அப்பாவி மக்களுக்குச் செய்த கொடுமைகளை நாம் மறந்துவிட முடியாது.
லத்தீன், அமெரிக்காவில் உள்ள பல நாடுகளில் தேசிய பாதுகாப்பு என்ற வாதம் பெரும் தீங்கை விளைவித்திருக்கிறது.
ஒவ்வொரு நாடும் தன் மக்களுக்குப் பணியாற்றவே அமைந்துள்ளது. தனி நபர்களின் கண்ணியத்தையும் அவர்களது உரிமைகளையும் அது பாதுகாத்தே தீரவேண்டும்.
மக்களின் சுதந்திரங்கள் அடிப்படையானவை. அவற்றை நாட்டு நலனுக்காகத் தியாகம் செய்துவிட இயலாது.

 உபயோகத்துவம்
எல்லா ஒழுக்கத்தரத்திற்கும் அதன் பயன்பாடே முடிவான நிர்ணயம் என்று சிலர் கூறுகின்றனர்.
அதிகமான பேருக்கு எது அதிக மகிழ்ச்சி தருமோ அந்தச் செயல் ஒழுக்கமானது என்ற அளவுகோல் கொண்டது.
செய்யும் செயல்களை நியாயம் அல்லது அநியாயம் மதிப்பிடுவதே அது பொது மகிழ்ச்சிக்கு உதவுகிறதா என்பதைக்கொண்டே இங்கு அமையும்.
இவர்கள் வாதம் என்ன?
லட்சியத்தை அடைவதை வைத்து மட்டுமே செய்யும் செயல்கள் நியாயமா, நியாயமில்லையா என்று மதிக்கவேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
லட்சியத்தை அடையும் பாதைகளை தார்மீகக் கண்ணோட்டத்திலோ, சட்டபூர்வக் கண்ணோட்டத்திலோ பார்க்கத் தேவையில்லை.
எவ்வளவு மோசமான பாதையாயினும் பொது மகிழ்ச்சியை வளர்க்குமானால் அது நியாயமானது. அவ்வாறே எவ்வளவு மேன்மையான பாதை எனினும் அது பொது மகிழ்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்குமானால் அது அநீதியானது, ஒழுக்கக் கேடானது.
எனவே, நீதி என்பது சமூகத்திலிருந்தே உருவானது. அது சமூக நன்மையை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. இது இவர்கள் வாதம். இது சரியாகுமா? அல்ல.
நீதியைப் பயன்பாட்டோடு இணைப்பது சரியாகாது. சமூகத்துக்கு எது பயன்படுமோ அதையே உயர்ந்த மதிப்பீடாகக் கொடுப்பது ஒழுக்கபூர்வமாகத் தவறு.
ஒருவர் எவ்வளவு பயன்படுவார் என்பதை வைத்து ஒருவரை மதிப்பிடுவது சரியில்லை.
மக்களிடம் அவர்களுக்கே உரிய மதிப்பீடுகள் உண்டு. அவர்களது சுதந்திரங்களைச் சமூக நன்மைக்குப் பணியச் செய்வது இயலாது.
ஒரு செயலின் ஒழுக்கத்தை முற்றிலும் அது தருகின்ற மகிழ்ச்சியின் அடிப்படையில் தீர்மானிக்க இயலாது.

நீதிக்கான பல்வகைத் தேவைகள்


பொருளாதாரத் தேவைகள் 
(பாதுகாப்பு, உயிர் வாழ்வது தொடர்பானது)
ஒவ்வொரு மனித ஜீவனுக்கும், எவை இல்லாமல் மனித வாழ்க்கை சாத்தியமில்லையோ, அந்த அடிப்படைப் பொருள்களைப் பெறுவதற்கு முழு உரிமையுண்டு. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) உணவு, உடை, வீடு - தனிப்பட்ட பயனுக்குத் தேவையானவை.
2) உடல் நலம் மற்றும் திறன் வளர்ச்சி - சமுதாயத்தினால் சமுதாய உறுப்பினர் அனைவருக்கும் வழங்கப்பட  வேண்டியவை.
3) வேலை செய்வதற்கான உரிமையும் தேவையும் - இது ஆக்கப்பூர்வமான தகுதியுள்ள உழைப்பை சமூகத்திற்கு வழங்கவும்  ஒரு சிறப்பான வாழ்வு வாழவும் அவசியமானது. பிற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வழியாகவும், அடையவேண்டிய லட்சியம் என்ற அளவிலும் இந்த வேலை செய்யும் உரிமை இரு வகையில் தேவைப்படுகிறது.
சமூகத் தேவைகள் 
(சுய மதிப்பு தனிச்சிறப்பு தொடர்பானது)
தங்கள் சுயமதிப்பு, தனிச்சிறப்பு, தமது பண்புகள்இவை மதிக்கப்பட்டு மரியாதைச் செய்யப்பட வேண்டும் என்றும் எல்லா மக்களுக்கும் ஓர் உரிமையுண்டு. 
இது இரு அம்சங்களைக் கொண்டது.
1) எவருமே ஒதுக்கப்படுவதற்கில்லை. உடல் ஊனமுற்றோர், மன ஊனமுற்றோர், சிறையில் இருப்போர், பசியால் வாடுவோர் ஆகிய எல்லோருமே கடவுளின் பார்வையில் சமமானவர்களே. எந்த ஒருவரையும் ஒதுக்கி வைப்பதற்கில்லை.
2) நீதி வழங்குவது என்பது அவர்களுக்கு வெறுமனே எதையோ கொடுப்பது மட்டுமல்ல. அவர்கள் வளர்ச்சியடையும் வழிவகை பெறவும் மனிதக் குடும்பத்திற்கு தமக்கே உரிய சிறப்பான வகையில் தமது பணியைச் செய்யவும் உதவுவதே. அதுதான் நீதியின் கடமை.
இங்கே ஓர் உண்மை அடங்கியிருப்பதைக் காணலாம். ஏழைகள், அவர்கள் வெறும் ஏழைகள் என்பதைவிட மேலானவர்கள் என்பதே அது.
ஏழைகளின் எல்லாச் சிறப்பும் அவர்களுடைய வறுமைக்குள்ளேயே முடங்கிவிடாது. பசித்தவர்களும் காசில்லாதவர்களும் பலவகையில் பெருமை உள்ளவர்களாக இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
ஏழைகளைச் சுய முயற்சியோடு வாழ நாம் அனுமதித்தால் அவர்கள் தம் உணவைத் தாமே தேடி உண்பார்கள். 
அரசியல் தேவைகள் 
(சுய தீர்மானம், தம் வாழ்வின்மீது ஒருவருக்குரிய கட்டுப்பாடு தொடர்பானது)
தமது சொந்தத் தலைவிதியைத் தாமே வடிவமைப்பதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் ஏன் எல்லா மக்களுக்குமே உண்டு.
நமது வாழ்வை வடிவமைக்க அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சக்திகளின் மீது சில அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளை விதிக்க நமக்கு உரிமையுண்டு.
மனித ஜீவன்கள் என்ற முறையில் பிறர் தானம் கொடுப்பதைப் பேசாமல் வாங்கிக் கொண்டிருக்கவோ, முற்றிலும் பிறரையே சார்ந்திருப்பதற்கோ, பிறரால் அதிகாரம் செய்யப்படவோ நாம் பிறக்கவில்லை.
சமூக நீதியைப் பற்றிப் பேச வரும்போது ஒன்றை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
யாரோ ஒருவருடைய தயவினால் கிடைக்கும் வசதிகளைப் பெறுகிறவர்களாக மக்களை மாற்றுவதல்ல அது.
தமது சொந்த வளர்ச்சிக்குத் தாமே பொறுப்பு ஏற்கும் தகுதியை அவர்களுக்கு  அளிப்பதுதான் நீதி.
நம்மை யாராவது பராமரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை.
தானே தன் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்திற்காகத் திட்டமிடுவது, அதைக் கட்டியமைப்பது, அல்லது ஒன்றை உருவாக்குவது.
இதில் கிடைக்கும் திருப்தி, பலனை மட்டும் அனுபவி என்றும் பிறர் தரும் வசதியில் கிடைக்காது.
இன்று பொருள்களின் மறுபங்கீடு என்பது அடிக்கடி நடைபெறுகிறது. காரணம் ஏழைகள் ஒன்றுபடத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் ஆற்றலை உணரத் தொடங்கி விட்டார்கள்.
எனினும், மனித ஆற்றலை மறுபங்கீடு செய்யாமல், பொருள்களை மறுபங்கீடு செய்வது சரியானதல்ல.இதற்கு பித்ருத்வம் என்று பெயர்.
தந்தை நிலையில் நின்று, கொடுக்கிறவன் ஒன்றைக் கொடுப்பது. மீதிபேர் கைகட்டித் தலைகுனிந்து கொடுப்பதை வாங்கிக்கொள்வது, இதுதான் பித்ருத்வம்.
கிராம மக்களிடையே ஓர் இயலாமை உணர்வு காணப்படுகிறது. தாங்கள் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அது நிஜமல்ல. தங்கள் சொந்த பலமும், உரிமைகளும் அவர்களுக்குத் தெரியாது.
அவர்களுக்கு எஜமானர்கள் என்று எவரும் இல்லை. அவர்களே தமது சொந்த எஜமானர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்தால் தங்கள் சொந்தப் பிரச்சனைகளுக்குத் தாமே தீர்வு காணலாம், நினைத்ததைச் சாதிக்கலாம்.
அவர்களே கேள்வி கேட்கத் தொடங்கினால் தேசியப் பிரச்சனைகளில் ஏன் இந்தச் சிக்கல் என்று புரிந்துக்கொள்வார்கள். மறைந்திருக்கும் தமது சக்தியை அவர்கள் உணர்வார்கள்
ஒற்றுமையுணர்வு 
(ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் - பிறரோடு தொடர்புள்ளது)
நம் அனைவருக்கும் உரிமைகளும் உண்டு, கடமைகளும் உண்டு. நாம் இயல்பாகவே சமூக ஜீவிகள்.
நம் உரிமைகiள்ப் பெறுவதில் நமக்கு  உள்ள பொறுப்பைப் போலவே பிறர் உரிமையில் குறுக்கிடாத பொறுப்பும் நமக்கு உண்டு.
மனித ஒற்றுமை ஒன்றையே கோருகிறது. நீதிக்காகப் போராடு. அநீதிக்குப் பலியானோர் பசியோடு இருந்தாலும், வேலையின்றி இருந்தாலும், சிறையில் இருந்தாலும், அவர்கள் தோளோடு தோள் நின்று, பணியாற்று. அதுதான் ஒற்றுமையுணர்வு!
ஒற்றுமையுணர்விற்கு ஒரே நோக்கம்தான் உண்டு. முதலில் அவர்களைப் பலியாடு ஆக்கும் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு அமைப்புக்களையும், நிறுவனங்களையும் மாற்றியமைக்க வேண்டும்.
அதற்காக அனைவரையும்  ஒன்றுசேர்க்க வேண்டும். மனிதக் குடும்பத்தில் நாமும் ஒருவர். இந்த உணர்வு வளருமானால் அநீதிக்குப் பலியாகும் அநேகரோடு நாம் நம்மை இனங்காண முடியும்.
நம்மில் யார் உண்மையில் ஏழை இல்லையோ, அவர்கள் மிகவும் எளிமையான வாழ்விற்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டால், ஏழையின்துயர் என்னவென்று நமக்குப் புரியும்.
இதற்கு அர்த்தம், வெறும் ஏழை போன்று நாம் நடிப்பதில்லை.
ஏழைகளின் வியர்வையால் நமக்குக் கிடைத்துள்ள சலுகைகளில் பலவற்றை உண்மையிலேயே இழக்கச் சித்தமாக இருப்பதே ஆகும்.
இன்னொன்று. ஏழைகளுக்காகப் போராடுவது என்பதற்கு அர்த்தம் அவர்களை ஏழைகளாகவே நீடிக்கச் செய்வதோ, அவர்களுக்குப் பக்கத்தில் தொடர்ந்து நின்று கைதூக்கிக் கொண்டிருப்பதோ அல்ல.
அது அவர்களைச் சிறுமைப்படுத்துவதாகும். தமது வடிவிலேயே நம்மைப் படைத்த கடவுள் வழங்கிய மனிதக் கண்ணியத்திற்கு அது பொருந்தாது.
அறஞ்செய விரும்பு என்கிறார்கள். பலர் அப்படியே ஏராளமாகத் தான தர்மம் செய்கிறார்கள். யோசித்தால் இதுகாறும் நடந்த தர்மப் பணிகள்எத்தகையவை? தேக்கநிலையிலும், வெறும் தற்காப்பாகவும் அவை இருந்து வருகின்றன. அவை நிறுவனங்களோடு மட்டுமே பிணைந்துள்ளன.
ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு நாம் சிகிச்சை அளிக்கிறோம். அதேசமயம் சிகிச்சைக்குப் பிறகு அவர்களை மீண்டும் சுகாதாரமற்றச் சூழ்நிலைக்கே திருப்பி அனுப்புகிறோம். அங்கே தொற்றும் நோய்கள் மீண்டும் அவர்களை அடித்து வீழ்த்துகின்றன. செய்த சிகிச்சையால், போராட்டம் என்ன பயன்? நோய் முற்றிலும் நீங்க ஒரு திட்டமிட்ட போராட்டம் நமக்கு அவசியம் தனிநபர்களுக்கு மட்டும் அல்ல. கிராமங்கள் முழுவதற்குமே நாம் சிகிச்சை அளிக்கவேண்டும்.
நோயின் அறிகுறிகளை மட்டுமல்ல அதன் காரணங்களையும் நாம் எதிர்த்துப் போராடவேண்டும்.

மருந்துகளுக்காகச் செலவிடப்பட்ட பணம் ஒரு நோயாளியைச் சிறிது காலம் குணப்படுத்தலாம். பாதுகாப்பான குடிநீருக்காக அதே பணம் செலவிடப்படுமேயானால், சமுதாயம் முழுவதையுமே நோயிலிருந்து பாதுகாக்கலாம்.      - வால்பெர்ட் புல்மான்

 நீதியின் அஸ்திவாரங்கள்
சமூக நீதிக்காகப் போராடுவதில் ஈடுபட்டுள்ள பலர் முன்னே பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
*நான் மட்டும் ஏன் நீதியாக நடந்துகொள்ள வேண்டும்.?
*எல்லோருக்கும் நியாயமான வாய்ப்பு கிட்டக்கூடிய ஒரு சமுதாயத்தை நான் ஏன் தோற்றுவிக்க முயலவேண்டும்?
*வறுமையில் வாடும் ஒருவருக்கு உதவிபுரிய எனக்கு என்ன தலையெழுத்து? மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு நான் எப்படிப் பொறுப்பு?
*பிறர் படுகின்ற பாடுகளைப் பற்றித் துளிகூடக் கவலைப்படாமல் நிம்மதியாக லட்சோபலட்சம் பேர் வாழ்கிறார்களே?
*ஒரு சமுதாயம் எந்த அளவுக்குச் சுயநலமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக வளர்ச்சி பெறுகிறது?
இந்தக் கேள்விகளுக்கு எளிதில் பதில் கூற முடியாது.
எனினும், இவற்றுக்குப் பொதுவான பதில்களை நாம் வரிசைப்படுத்தலாம்.
இவற்றிற்கு பதில் தரும் ஸ்தாபனங்கள் பல. அதில் தலைமைப் பொறுப்பேற்று நிற்பது மதம். மதம் எனும்போது எல்லா மதங்களும் இதில் அடங்கும்.
மதம்
சிலர் தமது கடவுள் நம்பிக்கை, நீதிக்காகத்தான் ஆற்றும் பணி இவற்றிடையே ஒரு நெருக்கமான உறவைக் காண்கின்றனர்.
நீதியாக இருப்பதும் நீதிக்காகப் போராடுவதும் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே என்று அவர்கள் கருதுகின்றனர்.
பொதுப்படையான அளவில் ஒழுக்கத்திற்கும் மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதியானது. நீதிக்கும் மதத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்போ தனிச்சிறப்பானது. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மக்களின் சொந்த நடத்தையிலும், சமூக நடத்தையிலும் மத நம்பிக்கை  களுக்கு  ஒரு செல்வாக்கு உண்டு.
உலகில் நீதி நிலவுவதற்கு மதங்கள்சந்தேகமிலலாமல் தொண்டு புரிந்துள்ளன. 
எனினும், ஒரு கேள்வி எழுகிறது. மத நம்பிக்கை என்பது நீதியின் அஸ்திவார மாகுமா? இதற்கான பதில் தெள்ளத் தெளிவானது.
மதங்களில் நம்பிக்கையே இல்லாதவர்கள் அநேகர். வேறு பலர் மதங்களை கொஞ்சம் கூட லட்சியம் செய்வதில்லை.
சமுதாய நடத்தையின் அடிப்படையில் பார்த்தால் நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்களிடையும் நீதி உள்ளவர்கள், நீதி இல்லாதவர்கள் உண்டு. நம்பாதவர் மத்தியிலும் அப்படியே.
அது மட்டுமன்றி, இன்று முக்கியச் செல்வாக்குள்ள மதங்களைக் கவனித்தால், அவை பழங்கால நம்பிக்கைகளோடும், சடங்குகளோடும் மட்டுமே கட்டுண்டிருக்கின்றன. அவை நீதியின் பொருட்டு உண்மையாகப் போராட முடியாத விதத்தில் தம் சொந்த மத அனுஷ்டானங்களோடு கட்டுண்டிருக்கின்றன.
மதங்களுக்கு இருக்கும் ஆற்றல் மிகப்பெரியது. எனினும், நமது மதச் சார்பற்ற உலகில் மதங்களின் மீதான ஈடுபாடு கவர்ச்சியை தற்போது இழந்துவிட்டது. அதற்கு அவசியமும் குறைந்துவிட்டது.