Friday, 21 December 2012

லியோ டால்ஸ்டாய்

     லியோ டால்ஸ்டாய்
உலக நாவல் இலக்கியத்தின் தரத்தை ஆதி மகா கவிகளின் உன்னதப் படைப்புகளுக்கு ஏற்ப உயர்த்தியவர் லியோ  டால்ஸ்டாய். போரும் அமைதியும், அன்னா கரீனினா, புத்துயிர் என்ற காலத்தினால் அழிக்க முடியாத மூன்று நாவல்களில் தமது மேதைமையையும், மனோ விசாலத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
அவற்றுள் ‘போரும் அமைதியும்’ நாவல் அளவு, பாத்திரப் படைப்பு, செய்திகள் இவற்றுள் பிரம்மாண்டமானது.
ஹோமரின் இலியதுக்கும், கம்பரின் இராமாயணத்துக்கும், வியாசரின் மகாபாரதத்துக்கும் உள்ள காவியச் சிறப்பை உரைநடையில் அவர் கிட்டத்தட்ட எட்டியிருக்கிறார்என்று துணிவாகக் கூறலாம்.. இந்த மூன்று கவிச்சக்கரவர்த்திகளிடமிருந்தும் அவர் வேறுபட்டு நிற்பது ஒரே ஓர் அம்சத்தில்தான். அதுதான் அவருக்குப் பெரிய பலமாக அமைந்தது.
‘யதார்த்தம்’ எனப்படுகிற உண்மை நடப்புதான் அந்த பலம்.
அவர் கற்பனை செய்வதில்லை.
கற்பனை என்ற சொல்லுக்கு எந்த வழக்கமான பொருள் உண்டோ அதைச் சொல்கிறேன்.
சுவிசேஷத்தைப் படிக்கும்பொழுது எப்படி எந்தக் கற்பனையுமின்றி, உள்ளது உள்ளபடி படித்தாரோ, அதே விதமாக மனித உயிர்களைப் படித்தறியும்போது அதே நேர்மையைக் கடைப்பிடித்தார்.
அவரது சமகால நாவலாசிரியரான டாஸ்டாயெவ்ஸ்கி மனித உள்ளத்தைப் படித்த விதம் வேறு. வெளியிட்ட விதம் வேறு. அவரது சிக்கலான பார்வையின் மூலம், மனிதர்களின் உள்ளத்தினுள் சென்று அவர்களின் புறச்செயல்களை வெளியிட்டார்.
டால்ஸ்டாய் மனிதர்களின் புறத்தோற்றத்தின் மூலம் அவர்களது உள்ளத்துக்குள் சென்று பார்த்தார். பொதுவாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் இப்படி நடந்து கொள்வதை வைத்துத்தான், புரிந்து கொள்ள முயலுகிறோம்.
இந்தக் கடினமான பணியை நிறைவேற்றுகையில், அதாவது ஒரு மனித பாத்திரத்தை உருவாக்குகையில், பரிபூரணமான திடநம்பிக்கையோடு டால்ஸ்டாய் செயல்பட்டார்.
அவர் படைத்த மனிதர்கள் ஒருவர்கூட கற்பனைப் பாத்திரங்கள் இல்லை, அவர் படைத்த அளவில் முழுமையோடு இல்லையெனினும், நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் அவர்கள் எங்கோ ரத்தமும் சதையுமாக உயிர் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர் பார்த்த மனிதர்கள் அப்படியே அச்சு அசலாக அவரது நாவல்களின் பக்கங்களில் வந்திருக்கிறார்கள்.
அந்தக் கதாபாத்திரங்கள் ஆத்ம பரிசீலனை செய்வது போல் சில சமயம் நினைவோட்டத்தில் லயிப்பது உண்டு. சுய பரிசோதனை, மனசாட்சி, கவலை, நம்பிக்கை ஆகிய வாய்ப்புகளில் ஒரு பாத்திரம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள டால்ஸ்டாய் தாமே விரும்பித் தந்த ஒரு வாய்ப்புதான் அது. ஓர் எளிய மனிதர் எவ்வாறு இருப்பாரோ அவ்வளவு தெளிவு, அவ்வளவு யதார்த்தம் இவற்றுடன் ஒரு மகத்தான எழுத்தாளன் அவரைப் படைப்பது சிரமம் அதில் டால்ஸ்டாய் பெரு வெற்றி பெற்றார்.
அதனால்தான் ‘போரும் சமாதானமும்’ நாவலில் வெளிப்படும் பல கதாபாத்திரங்கள் நமக்கு நெருங்கிய பரிச்சயமுள்ள, எவரோ ஒருவரை நினைவூட்டுகின்றன. டால்ஸ்டாய் தமது காவிய கம்பீரம் உள்ள அந்த நாவலை எழுத மேற்கொண்ட தயாரிப்புகள் பிரம்மாண்டமானவை. கடின உழைப்புடன் எவ்வளவு தகவல்கள் அந்த எழுதிய நாவலின் காலத்திற்கும், களத்திற்கும் தேவையோ, எவ்வளவு அவருக்குக் கிடைத்ததோ, அத்தனையையும் அவர் திரட்டிச் சேகரித்தார். பொறுப்புணர்ச்சியோடு அவற்றைத் தொகுத்து, மகத்தான நேர்மையோடு அவற்றைச் சித்தரித்துக் காட்டினார். தனது கலை தொடர்பாக டால்ஸ்டாய் தமக்குத்தாமே விதித்துக் கொண்ட முதலாவது நிபந்தனை ஒன்றுதான்.
“எதையும் கற்பனை செய்து கண்டுபிடிப்பதில்லை”
மகத்தான எழுத்துக் கலைஞர்களிடம் மட்டுமின்றி சாதாரண எழுத்தாளரிடமும் கூட அவர் இதையே எதிர்பார்த்தார்.
தன் அதிநுட்பமான சொந்தப் பார்வையின் மூலம் அவர் கொண்ட முடிவு, கற்பனையில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்பதே.
ஒரு பூஞ்சை மனத்தால் உருவாக்கப்படும் ஒரு பாத்திரம் அல்லது கதையைவிட, அதிக சக்தி வாய்ந்ததும் அற்புதமானதுமாக, உண்மை வாழ்க்கை அமைந்திருப்பதை அவர் உணர்ந்தார்.
அந்த வாழ்க்கையின் அதிசயத்தை ஆராயவோ, அதைப் புரிந்து கொள்ளவோ ஒரு கதாசிரியருக்கு வாய்ப்பு உண்டு என்பதை அவர் மறுக்கவில்லை.
கலைச் சுதந்திரம் என்ற விஷயத்தில் அவர் தமக்குத் தாமே அளித்துக் கொண்ட சுதந்திரம் அதுதான்.

பைபிளிலே தமிழ் உரைநடை

.
  பைபிளிலே தமிழ் உரைநடை
தமிழில் உரைநடை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், சேனாவரையர், இளம்பூரணர் ஆகிய பெரும்புலவர்களிலிருந்து இப்பணி தொடங்கி யிருக்கிறது.
அதற்கு முன்பும் உரைநடைத் தமிழ் இருந்திருக்கலாம். சங்க காலச் செய்யுட்கள் பல, அக்காலத்திய உரைநடைக்கு வெகு நெருக்கமாகவும் இருந்திருக்கலாம். அக்காலத்தில் அச்சு யந்திரமோ, அதுபோன்ற பிற வசதிகளோ இல்லாததால், நமக்குத் திட்டவட்டமான சான்று, இது பற்றிக் கிடைக்கவில்லை.
அச்சு யந்திரம், தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு மிகப் பெரிய தொண்டாற்றி யிருக்கிறது. அதே போல் அச்சு யந்திரத்தை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்த ஆங்கிலேயர்களும் ஒரு மறைமுக உதவியைச் செய்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்ப வந்த பாதிரிமார்கள் பல இந்திய மொழிகளைப் போலவே, தமிழிலும் பல மொழி வளப் பணிகளுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
அகராதி தொகுத்தல், இலக்கண ஆய்வு, புதிய படைப்புகளைத் தோற்றுவித்தல், இவற்றோடு தமிழ் உரைநடை வளத்துக்கும் அவர்கள் பேருதவி செய்திருக்கிறார்கள்.
பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட போது அது ஓர் அந்நிய நாட்டினரின் அந்நிய பாவமான மொழிபெயர்ப்பாக அமையவில்லை. தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த அக்கிறிஸ்தவச் சான்றோர்கள், கருத்து வேகத்துக்கும், உணர்ச்சி வெள்ளத்துக்கும் வழிவிடும் அகன்ற கரைகளும் உயிர்த்துடிப்பும் உள்ள தமிழின் வசதியைப் புரிந்து கொண்டார்கள். புரிந்து கொண்டதோடு நில்லாமல், தங்கச் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்த தங்கத்தைக் கொண்டு, தாமே உருக்கி, புதிய ஆபரணங்களைத் தாமே செய்து, தமிழுக்கு வழங்கினார்கள். பைபிளின் உரைநடைத் தமிழ் தனிப்பெரும் அழகுடையது. அது கம்பீரம், சொல்லாட்சி, நெஞ்சை அள்ளும் லாகவம், உணர்ச்சி ததும்பும் வெளிப்பாடு கொண்டது.
எடுத்துக்காட்டாக பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் சில துளிகள்:
* “அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து ஆபிரகாமே ஆபிரகாமே” என்ற கூப்பிட்டார். அவன் “இதோ, அடியேன்” என்றான் (ஆதியாகமம் 23:11)
அப்பொழுது அவர் “பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும் உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்றார் (ஆதியாகமம் 22:12)
* அதற்கு தேவன் “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக” என்கிறார் (யாத்திராகமம் 3:14)
* அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி “தடவிக் கொண்டிருக்கத் தக்கதான இருள் எகிப்து தேசத்தின் மேல் உண்டாகும்படிக்கு உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு”! என்கிறார் (யாத்திராகமம் 11:20)
* வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும், முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக் கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக் கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது (உபாகமம் 22:6).
* நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன், கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான் (யோபு 2:21)
* என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன், இஸ்ரவேலா, நீ எனக்குச் செவி கொடுத்தால் நலமாயிருக்கும் (சங்கீதம் 81:8)
* அடைக்கலான் குருவி அலைந்து போவது போலும், தகைவிலான் குருவி பறந்து போவது போலும் காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது (நீதிமொழிகள் 26:2)
* வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்ணின் காட்சிகளிலும் நட; அனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும், தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி (பிரவங்கி 12:9)
* பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகின்றன. குருவிகள் பாடுங்காலம் வந்தது. காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்திலே கேட்கப்படுகிறது. (உன்னதப்பாட்டு 2:12)
* வாரும் என் நேசரே! வயல் வெளிகளிலே போய் கிராமங்களில் தங்குவோம். அதிகாலையிலே திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக் கொடி துளிர்த்து அதில் பூ மலர்ந்ததோ என்றும் மாதுளஞ்செடி பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம், அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உனக்குத் தருவேன் (உன்னதப்பாட்டு 7:1,22).
* பிரவாகம் போல் புரண்டு வருகிற இவள் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள் போல் எழும்பி வருகிற இவள் யார்? (எரேமியா 46:7)
* கர்த்தாவே எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும். அப்பொழுது திரும்புவோம், பூர்வ காலத்திலிருந்தது போல் எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும் (எசேக்கியேல் 1:21)
* பின்னும், அவர் என்னை நோக்கி இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்க தரிசன வசனங்களை முத்திரை போட வேண்டாம். காலம் சமீபமாயிருக்கிறது (வெளியாகமம் 22:10).
பைபிள் முழுவதிலும் மாணிக்கக் கற்கள் போல் ஒளி வீசும் உரைநடையின் பெருமையைக் குறிக்க இடச்சுருக்கம் கருதி இவ்வளவு மட்டுமே தரமுடிகிறது. எனினும் அந்த உரையின் நெஞ்சை அள்ளும் மாண்பிற்கு ஒருசுருக்கமான அறிமுகமாக இவை அமையக்கூடும்.





















எழுத்து என்பது ஆத்ம சம்பந்தம்.

(தொடர்ச்சி)
அதற்கும்.... எழுத்துக்கும் ... ...52 ஆண்டுகளாக எழுதி  அப்படியா ...வையவனா அப்படி ஒரு எழுத்தாளரா என்று இன்னும் கூட அப் பெயரையே கேட்டறியாதது போன்று  ... கேள்விப்படாத பாவனையில் பார்க்கும் பலருக்கு இடையில் நிற்கும் எனக்கும்... என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும்.
எழுத்து என்பது ஆத்ம சம்பந்தம்.
 எழுத வந்தவர்கள் எல்லோருமே  அந்த ஆத்ம சம்பந்தத்தோடு எங்கோ ஏதோ ஒரு வகையில் சங்கிலிக் கரணையாகத் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் அமரத்துவம் பெற்றவர்கள்.
சினிமா நாடகம் இசை நடனம் ஓவியம் என்று மனசை மயக்கி இழுத்து எத்தனையோ கலைகள் இன்புறுத்தலாம்.
கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு கோடானுகோடிமக்களைப் பித்துப் பிடிக்கச் செய்யலாம்.
ஆயின் அவை யாவும் புலன்கள் என்ற ஒரு எல்லைக்குள் நின்றுவிடுகின்றன. கிளர்ச்சி அடையச் செய்து பின்பு மறைந்து போகின்றன. அதற்கு அப்பால் செல்ல அவைகளுக்கு அனுமதி இல்லை.  நோ அட்மிஷன் தான்.
ஆனால் எழுத்து அப்படியல்ல. அது வெறும் கலையல்ல.  கலைக்கும் மேலே.. எல்லாவற்றுக்கும் அப்பால் .
சரஸ்வதி நம ஸுப்யம்  வரதே காமரூபிணி. வித்யாரம்பம் கரிஷ்யாம் சித்திர் பவது மே ஸதா என்று தொடங்கி ஞானானந்த மயம் தேவம் நிர்மலா ஸ்படிகம் என்று வளர்வது அது .ஆத்ம விளக்கத்திற்கான ஞான சம்பந்தம்.
மகாகவி சொன்னார்.
எழுதுகோல் தெய்வம் . இந்த எழுத்தும் தெய்வம்.’இதை எழுதி எழுதி விளங்கிக் கொள்வதற்கு எனக்கு 50 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. திரும்பிப் பார்க்கிறேன். 
 இந்தச் சமுதாயம் எனக்கு விதித்த எந்தப் பணியிலும் நான் எழுதிய எந்த எழுத்திலும் அந்தரங்க சுத்தியோடு என்னால் முடிந்த அளவு எனக்குக் கைவந்த அளவு கலைத்திறனோடு ,நான் உண்மையாக உழைத்திருக்கிறேன் என்று புலப்படுகிறது. 
வேலையை முடித்துக் கொண்டு கை கழுவுகிற உத்தியும் எனக்கு அந்த ஆத்ம சம்பந்தத்தால்  லபித்தது. இந்தப் புலப்பாடு  தான் நான் தேடிக் கொண்டிருக்கிற  ஆத்ம கௌரவ புரஸ்கார் விருது  
அலைகள் வரும் போகும். ஆனால் சமுத்திரம் என்றென்றும் இருக்கும்.அடுத்த காற்றோட்டத்தை, அடுத்த அலை வீச்சை எதிர்நோக்கியபடியே..

தான் தேடும் பொருள் தானே தான்

 (தொடர்ச்சி)
சரி நம் உத்தேசம் பலன் பெற்றது என்று எண்ணினேன்.
இப்படி ஒவ்வொரு கதைக்கும் ஒரு மனச்சிலிர்ப்புள்ள
எதிரொலிகள் வந்திருக்கின்றன.
நல்லது.
மகிழ்ச்சி.
சரி.
இவ்வளவோடு நிற்காமல் நானே உணரும்  என் குறைகள் என்னென்ன என்று தேடித் தேடிக் களைவதல்லவா என் கவலை என்று கருதி அதைக்  களையும் முயற்சி நடந்தபடி இருக்கும். இன்று வரை என்  குறைகள் மட்டுமே எனக்குப் புலப்பட்டு வருகின்றன.
மனிதன் ஒரு முழுமையற்ற படைப்பு. மனிதனாகப் பிறந்த இந்த வாய்ப்பு முழுமையைத் தேடி நடக்கும் யாத்திரை என்ற அசைக்க முடியாத உள்ளுணர்விலே வளர்ந்து வருபவன் நான், எனவே என் கதைகளில் மட்டுமல்ல ... நான் வாழ்ந்து வரும் சொந்த வாழ்விலும் கூட என் குறைகள் மட்டுமே மனசில் அடிக்கடி நினைத்து நினைத்துக் குன்றிப்போகும் அளவில் எனக்குள் சுட்டப்பட்டு வருகிறேன். அது ஒரு வகையில் என் வளர்ச்சிக்கு ஆதார பலமாக இருந்து வருகிறது.
இனி மற்றொரு விஷயம்,,உங்கள் கதைகள் பிறந்த கதையைச் சொல்வது உகந்தது என்று அகாடமி நிர்வாகிகள் அறிவுறுத்தினார்கள்.
என் ஆசிரியப் பணி ஜவ்வாது மலைக் காடுகளில் பஸ் போக்குவரத்து கூட இன்று வரை கூட இல்லாத புலியூர் என்ற ஆதிவாசி ஊரின் வனத்துறைப் பள்ளியில் ஓராசிரியப் பள்ளியில் தான் தொடங்கியது. என்னைச் சென்னைக்குப் போகச் சொன்னவர்கள் நான் வனவாசம் போனதைப் பார்த்து வருத்தப் பட்டார்கள்.
அங்கு வாழ்ந்த ஓராண்டில் அந்த கானக வாசம் தந்த அனுபவக் கற்பனை தான் இன்று புதிதாய்ப் பறந்தோம் என்ற தமிழக அரசின் இரு ஆண்டுகளுக்குமான நாவல்பரிசினைப் பெற்றது. 1967ல் மலேசியா தமிழ் நேசன் இதழில் வெளியான அந்த நாவலுக்கு வருடா வருடம் ஒரு வாசகர் கடிதமாவது வந்து கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரிலே என் ஆப்த நண்பர் ஒருவர் நடத்திய ஹோட்டலில் அடிக்கடி சென்று அவரோடு காலம் கழித்த நாட்கள் ஏராளம்.
அந்த ஹோட்டல் ஒரு குடும்பமாக விளங்கியதையும் அந்தக் காலத்தில் மனித மதிப்பீடுகளுக்கு இருந்த மரியாதையும் ஆனந்த விகடனில் தொடராக வந்த என் ஜமுனா நாவலில் வடிவம் பெற்றன.
என்னை வளர்த்த திருப்பத்தூருக்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் ஜோலார் பேட்டை ஜங்ஷன். இந்தப் பரந்த பாரத நாட்டின் வடக்கையும் தெற்கையும் கிழக்கையும் மேற்கையும்  இணைக்கிற அந்தத் தண்டவாளங்களில் ஓடுகிற ரயில்களின் கவிதை என்னை வாரத்துக்கு ஒரு முறையாவது ஒரு காரணமுமின்றி ஏதோ ஒரு காரணம் கற்பத்துக் கொண்டு வந்து பார்க்க வைக்கும்.
அங்கே ஒரு மேம்பாலம். அது எனக்குள் சொன்ன கதை தான் கல்கியில் தொடர்கதையாக வந்த ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம் நாவல்
எட்டு ஆண்டுகள் பள்ளிகொண்டா என்ற பெரிய கிராமம் ஒன்றில் பணியாற்றியபோது சுற்றியிருந்த ஊர்களின் தோல் ஷாப்புகளால் ஆற்றங்கரையும் விவசாயமும் அழிந்து கொண்டு வரும் காட்சியைக் கண்டு மனம் நொந்த அனுபவம் 'கன்னியராகி நிலவினிலாடி' என்ற நாவலாக வெளிப்பட்டது. அங்கு சந்திக்க நேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் மணல்வெளி மான்கள் நாவலில் கதாபாத்திரமானார்.  பி.எஸ்ஸி .பி.எட். படித்து விட்டு கணித ஆசிரியர் வேலை கிடைக்காததால் கிணறுகளில் இறங்கி பம்ப் ஷெட் ரிப்பேர் செய்த ஓர் இளைஞர் கதாபாத்திரமானார்.
மைசூர் சென்ட்ரல் இன்ஸ்ட்யூட் ஆப் இண்டியன் லாங்குவேஜஸுக்கு ஓராண்டு தங்கி மலையாளம் கற்பதற்காக மனைவி மக்களை ஊரில் விட்டுவிட்டுச் சென்றேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று மகாகவி சொன்னதை மொழிகளை அறிந்து கொண்ட பிறகே  சொல்கிற ஆசை தான் ஒரு காரணம்.
என் அதிருஷ்டம் முதலாவது மலையாள மாநாடு அப்போது நடக்கவும் கேரளத்திற்கு 15 நாள் நேர்முகப்பயிற்சி பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய அவசியம் நேரவும் வாய்த்தது. வைக்கம் முகமது பஷீர் தகழி சிவசங்கரப் பள்ளை என்று மலையாள மொழியின் பிதாமகர்களை நேரில்  சந்தித்துக் கை குலுக்கி சச்சிதானந்தனின் கவிதையை கேட்டு மனங்குளிர்ந்து  அன்று கேரள முதல்வராயிருந்த  ஏ.கே.ஆண்டனியின் சொற்பொழிவை ரசிக்கும் வாய்ப்பும் கிட்டியது. மலையாள மொழியின் ஈர்ப்புக்கு நான் வசமாகி பஷீரை வாசித்ததின் விளைவு தான் அவரது 'ஒரு காமுகண்டே டயரி‘ நாவலை நான் தமிழில் ஒரு காதல் டயரி என்று மொழி பெயர்த்த கதை.
இப்படி ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் உள்ள  கதை எனக்கு அடிக்கடி ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டே வந்தது.
புகழ் தேடியோ பணம் தேடியோ எழுதாதே.
புழுதியோடு புழுதியாக அடையாளமின்றிக் கரைந்து போவாய் என்பதே அது
அது சத்தியமான வாக்கு என்று வர வர உணர்கிறேன்.
புகழ் பொருளற்றுப் போகிறது. போட்டி பொறாமையை வளர்த்து மாய பம்பங்களை வித்தூன்ற வைத்துப் பொல்லாங்குகளையே அறுவடை யாக்குகிறது. நான் கண்ட அனுபவம் இது.
பணம் அர்த்தமிழக்கிறது. மதிப்பை இழக்கிறது. அழிக்கிறது. மனித மதிப்பீடுகளை மண்ணுக்குள் வீழ்த்தித் தேய்த்து  மாய்த்து விடுகிறது.
இதுவும் கண்ணார நான் கண்ட அனுபவம். இதையெல்லாம் வெளியே வாய்விட்டுச் சொன்னால் பைத்தியக்காரன் என்றோ போலிப் பாசாங்குக் காரன் என்றோ கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது. எல்லா அர்த்தங்களும் சமாதியாகி மிஞ்சியவை  சுடுகாட்டுத் தீயிலே வெந்து கொண்டிருக்கிற காலம் இது.
கருத்துக்களுக்கும் மனித மதிப்பீடுகளுக்கும் மரியாதையே இல்லாமல் ஆக்கி விட்ட நவீனக் கருவிகளும் தேவையே அற்ற நுகர் பொருள்களின் மீது பொய்த் தேவைகளை உருவாக்கி மனித உழைப்பை வீணாக்கும் போக்கும் வளர்ந்து வரும் காலம் இது.
நீங்கள் வேண்டுமானால் எதையாவது போற்றிக் கொண்டு ,பேத்திப் புலம்பிக் கொண்டு இருங்கள். சரும அழ கிற்கும் முடி அழகிற்கும் புதியபுதிய ஐட்டங்களை நாங்கள் தேடிக் கொண்டு போகிறோம் என்று ஒரு புதிய தலைமுறை உருவாகிவருகிறது.
ஆனால் என்ன  இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு  மெய்ப் பொருள் என்னவென்று தேடும் சில பைத்தியக்காரர்கள் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். ஏதோ வயசான பின்பு வயசாகி விட்டதால் தேடுகிறவர்கள் அல்ல அவர்கள். அவர்களுக்கு வயசாவதே இல்லை.
அவர்கள் பிறந்ததே மெய்ப் பொருளைத் தேடத்தான். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இருக்கிற காலத்தில் உனக்குத் தோன்றுவதை வெளியிட்டு மன ஈடுபாட்டோடு உழைத்து விட்டுப் போ.
இது தான் உனக்கு விதிக்கப்பட்ட பணி. நெடிய அனுபவங்களுக்குப் பின் அவர்களிடமிருந்து எனக்கு விளங்கியது இது தான் .
வேதனைகளை வெளியேற்று.
பரவசங்களைப் பகிர்ந்து கொள்.
வெளிச்சத்தைச் சுட்டிக்காட்டு
மௌனமாக வேலையைப் பார்த்துக் கொண்டு போ.
இவை தான் உனக்கு வகுத்துத் தரும் சாலைத் திருப்பங்கள்.
ஆத்ம கௌரவம் என்ற இலக்கை நோக்கியதே  உன் பயணம்.
இப்படி விவேகானந்தரும் அவர் உள்ளுக்குள் மிகவும் போற்றிய கௌதம புத்தரும் என்னுள் கட்டளையிட்டுக் கொண்டே வருகிறார்கள்.
ஆத்மகௌரவம் என்பது மனித மதிப்பீட்டின் உச்சிப் படிக்கட்டு.
அதுவே பதினெட்டாம் படி.
சபரிமலைக்குச் சென்று அந்த பதினெட்டாம் படியைக் கடந்து ஏறியவர்கள் காண்பது ஒரு திருவாசகம். தத்வமஸி. உங்களில் பலர் அதை அறிந்திருப்பீர்கள்
நீ தான் அது.
இது தான் அதன் பொருள் .வாழ்க்கைக்கு அதாவது உயிர்வாழ்வுக்கு ...அர்த்தம் தேடி மனித மனம் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து முயன்று கொண்டே வருகிறது. பணம் புகழ் பதவி என்று அலையோ அலை என்று அலைந்தாலும் அந்த முயற்சி நிற்க வில்லை.
எல்லா மேல் நாடுகளிலும் இன்றும் யோகா என்றும் தியானம் என்றும் மனித மனம் அர்த்தம் தேடி அலைந்து கொண்டேதான் இருக்கிறது.
விரக்தி யடைந்து வெறுப்புற்றுச் சலிப்படைந்தவர்கள் அப்படி ஒரு அர்த்தமும் இல்லை என்று அடித்துச் சொல்லி வேறெதையோ நிலை நாட்ட முயன்றாலும் பறகும் எதுவோ மிஞ்சி நிற்கிற சூன்யத்தைச் சந்திக்கிறார்கள். தோற்கிறார்கள். இருக்கட்டும்.
தெய்வ நிலை எய்தல் என்பது வாழ்க்கையின் முடிவாக மகான்கள் ஏற்றுக் கொண்ட அர்த்தத்தின் இறுதி . அது காளிகட்டம் போன்ற யாத்திரைக் கட்டமாகும் ஒரு சிந்தனைப் போக்கு.
அந்தச் சிந்தனைப் போக்கு தன்னைத் தன்னுள் கண்டுபடிக்கச் செய்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படும் என்று சூசகமாகச் சொன்னார் வள்ளுவப் பெருமான்.
 அதன் ஒரு வெளிப்பாடு தான் தத்வமஸி என்ற மகா வாக்கியம்.
தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் தானே தான் , என்று அது உறுதி செய்ய முயல்கிறது.  அது தான் முடிந்த வாக்கியம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று நாம் முடிவு கட்டிவிடுவதற்கில்லை. 
அதுவும் மனித சிந்தனையிலே உதித்த வாக்கு தான். அதற்கு மேல் தேடுதல் இல்லை என்று பொருளல்ல.
மனிதன் தெய்வ நிலையை நோக்கிய இடை விடாப் பயணத்தில் ஈடுபட்டிருப்பவனாகவே  நம் இந்திய சிந்தனைப் போக்கு நமக்குக் கற்பித்திருக்கிறது. எவ்வளவு சீர்கேடுகளும் அவநம்பிக்கைகளும் நம்மைச் சூழ்ந்து வந்தாலும் நமது பயணம் நின்று விடவில்லை. அந்த ஆத்ம கௌரவத்தை உணர்த்துவதற்கு அந்த வாக்கியம் உரைகல். (தொடரும்)

வாசகர் மனசில் சிறிது வெளிச்சம்

 (தொடர்ச்சி)
எழுதவும் வேண்டும். அப்படி ஒரு வேலை எது ? ஒரு தேடலும் இல்லாமல் தான் முடிவு கிட்டியது.
சுதந்திரமாகச் சிந்திக்கிற வாய்ப்பும் உள்ளபடியே நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் வாய்ப்பும் எழுதவும் படிக்கவும் நேரமும் இருக்கிற வாய்ப்பும் உள்ள ஒரு பணி எதுவென யோசித்துத் தான் நான் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தேன். வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்று இளக்காரம் செய்யும் காலம் அது. காரணம் சம்பளம் கம்மி.
அப்போதும் செகண்டரி கிரேடு என்று யாரும் மதிப்பாக ஏற்க முடியாத ஒரு வேலை தான்.  ஏசுபெருமானின் மலைப்பிரசங்கம் ஆசிரியர் பயிற்சிக்குப் பாடப்பகுதியாக வைக்கப் பட்டிருந்தது. வாசித்ததுமே சட்டென்று தீப்பற்றியது போல் என்னை அது பற்றிக் கொண்டது.
நான் பைபிள் வாசிக்கத் தொடங்கினேன். அந்த பைபிள் வாசிப்பும் ஏசுநாதரின் வாழ்க்கையும்  என்னை மற்றோர் முறை மாற்றியமைத்தது. யாருக்காகவும் நான் வாழவில்லை. நான் பிறந்து மறைந்து போகிற வரை உள்ள வரலாற்றில் என் பாத்திரம் என்னவென்று நான் தீர்மானிக்கிற வாழ்க்கை தான் எனக்குச் சரி என்று உணர்த்தியது.
அதில் ஒரு மன உறுதி தோன்றி ஒரு கிராமத்திலே அதே செகண்டரி கிரேடு ஆசிரியராகப் பணியாற்றியபடியே படிக்கவும் எழுதவும் தொடங்கினேன்.
 வாங்கிய அரசாங்கச் சம்பளத்துக்கோ என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கோ எந்த விதமான துரோகமும் செய்யாதவாறு பணியாற்றியவாறு ஓய்வின்றி இரவும் பகலும் படித்தேன்.  எழுதினேன். நிறையப் படித்தால் மூளை கலங்கிவிடும் என்று சொன்ன உறவினர் மத்தியில்.இதன் விளைவுகளை, நான் பெற்ற படிப்பினைகளை, எட்டிய ரசனையை என் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்வேன்.இன்று நான் பணியாற்றிய கிராமங்களுக்குச்சென்றால் நான் அங்கு ஆற்றிய ஆசிரியப் பணிக்காக மட்டும் தான் அவர்கள் என்னை மதிக்கிறார்கள். பலருக்கு நான் எழுத்தாளன் என்பதே தெரியாது.
தெரிவிக்கிற வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் நான் அதை வெற்றிகரமாக விலக்கி இருக்கிறேன். திருப்தியாக இருக்கிறது. ஒரு போர்வையில் ஒளிந்து கொண்டு வேறு சுய லாபங்களுக்கு அந்தப் போர்வையைப் பயன் படுத்திக் குற்ற உணர்விலிருந்து நிம்மதியான விடுதலை கிடைக்கிறது. இதை ஒரு வாக்குமூலம் போலவே கூறுகிறேன்
எழுதி எழுதியும் படித்துப் படித்தும் மொழிகள் மொழிகளாகப் பயின்று பயின்றும் தேர்வு தேர்வுகளாக எழுதப் பல்கலைக் கழகங்கள் பல்கலைக் கழங்களாக நடந்து நடந்தும் காலம் போயிற்று.
நகரத்திலிருந்த பத்திரிகைகள் என் கதைகளைக் கேட்டு வாங்கிப் பரசுரித்தன. குறுநாவல் எழுதச் சொல்லி நாவல் எழுதச் சொல்லி கவிதை  எழுதச் சொல்லி கட்டுரைகள் எழுதச் சொல்லி அழைப்புக்கள் வந்த பன் தான் எதையுமே நான் எழுதினேன். வெறும் பணத்திற்காகவோ பணத்தாசையை மூட்டும் பரிசுப் போட்டிகளுக்காகவோ நான் எழுதியதே இல்லை. டி.கே. சி .நூற்றாண்டுக்காக கல்கி நடத்திய கட்டுரைப்போட்டி பாரதி நூற்றாண்டிற்காக தினமணி கதிர் நடத்திய கட்டுரைப் போட்டி தவிர வேறு போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற முன்னுணர்வு ஏனோ என்னுள் ஏற்பட்டிருந்தது.
ஆயிரம்  ஐந்தாயிரம் பத்தாயிரம் லட்சம் என்று கவர்ச்சி காட்டிய எந்த இலக்கியப் போட்டியிலும் நான் ஈடுபாடு காட்டியதே இல்லை.
எனக்குக் கிடைத்த பரிசுகள் வாய்ப்புக்கள் என எல்லாமே நான் ஒன்றுக்கு இரண்டு முறை மறுத்து மறுத்து ஒதுக்கிய பன் தான் என்னைப் பலவந்தமாக ஏற்க வைத்தன. காரணம் ஆத்ம கௌரவம் என்பது எல்லாவற்றையும் மேல் என்று ஓர் ஒளி என்னுள் சுடர் விட்டபடி இருந்தது. . சோழா கிரியேஷன் என்ற திரைப்படக் கம்பெனியிலிருந்து பஞ்சாயத்துத் தலைமையில் பெண் தலைமைத்துவம் தொனிக்க வைக்க வேண்டிய ஒரு குறும்படத்திற்கு வந்த ஒரு கதை வசன வாய்ப்பையே கூட இரு முறை மறுத்து தொடர்பானவர்கள் வீடு தேடி வந்து வலியுறுத்த மனைவி ஒரு பக்கம் வற்புறுத்த ஏற்றேன்.
’வாசற்படி கடந்து வாராத பிச்சைக்கு ஆசைப்படுவதில்லை அண்ணலே !’ என்ற பட்டினத்துப் பிள்ளையின் மனப் பக்குவமும் ஈடின் மானிகளாய் இளைத்தவர் தம் மனக் கருத்தறிந்து உளம் இளைத்த வடலூர் வள்ளலின் அருளுணர்வும் எனக்குப் போதித்துக் கொண்டே வந்தன. எழுதினேன்.
எந்தக் கதையும் எந்த ஒரு படைப்பும் ஒரு தீக்குச்சி கிழிக்கிற அளவு வெளிச்சமேனும் தராவிடில் எழுதாமல் இருப்பது மேல் என்ற கொள்கை வகுத்துக் கொண்டு எழுதினேன். வாசகர் ஒருவர் மனசில் ஒரு சிறு ஒளி கிடைத்த பரவச வெளியீட்டின் முன்பு  உங்கள் படைப்பு என் வாழ்க்கையை மாற்றியது என்று யாரோ முகம் தெரியாத ஒருவர் சொன்னாலோ எழுதினாலோ அதில் ஒரு திருப்தி கிடைத்தது.
பெருமை அல்ல.
திருப்தி.
எங்கோ உருப்படியாக சமுதாயத்திற்கு சிறிதளவேனும் இந்த மகா யந்திரத்தின் இயக்கத்திற்கு ஒரு சின்ன நட்டையோ  போல்ட்டையோ போன்ற அளவிலாவது எந்த விதமான விலையுமின்றி பயன்பட்டதால் கிடைக்கிற அந்த திருப்தி விலை மதிக்க முடியாதது.
அப்படி அடிக்கடி அனேகமாக ஆண்டிற்கு ஓரிருமுறை என் எழுத்திற்கு எதிரொலிகள் வருவது காலம் கடந்து கூட வருவது நான் பெற்ற அனுபவம்.
கோவை மதுரை பாண்டிச்சேரி சென்னை என்று முகமறியாத மனிதர்கள் நேரிலும் கடிதத்திலும் பாராட்டியிருக்கிறார்கள். ஒரு சிறு புன்முறுவலுடன் நாணத்தோடு அவற்றைக் கடந்து விடுவேன்.
ஒரு பக்கம் மேலை நாட்டு இலக்கிய வார்ப்புக்களுக்கு
நகல் போல எழுதியும் விமர்சித்தும் வரும் விமர்சகப் பெரும்புலவர்கள் பலர் என் படைப்புக்களில் கலா பரிபக்குவம் இல்லை. பாத்திரப்படைப்பு இல்லை அது இது எல்லாம் இல்லை. அதுவும் இதெல்லாம் வியாபாரப் பத்திரிகை எழுத்து ..மீடியாக்ரிடி என்று தீண்டாமை அனுஷ்டித்தபடி வாய் சப்புவதைப் பல முறை கேட்டிருக்கிறேன. பாதிக்கப் பட்டதில்லை.
கேரளத்திலே தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தவர்கள்  ஈழவர்கள். அவர்களுக்காக அவர்கள் தொழுவதற்காகவென்று ஈழவ சமுதாயத்தின் மகானான நாராயண குரு ஒரு சிவன் கோயில் கட்டினார். உடனே உயர் ஜாதியாரிடையே பெரும் ஆட்சேபமும் கொந்தளிப்பும் கிளம்பன. நாராயண குரு அமைதியாக சிரித்து விட்டு அடடா நீங்கள் ஏன் அவஸ்தைப் படுகிறீர்கள் ? உங்கள் சிவனுக்கு இல்லை மக்களே! ஒரு ஈழவ சிவனுக்குத் தானே நான் கோயில் கட்டினேன் ? என்றார்.
அதைப் போலவே நான் விமர்சகப் பெருமக்களுக்காகவோ இலக்கிய உத்தாரணத்திற்காகவே வடிவ உத்தியில் சித்திபெற்று ஜீவன் முக்தியடையவோ எழுத முயற்சிக்கவில்லை.வாசிக்கிறவர் மனசில் சிறிது வெளிச்சத்தையும் சிறு நெகிழ்ச்சியையும் வரவழைக்க அல்லவா எழுதுகிறேன் என்று திருப்தி அடைந்தேன்.
வந்த பாராட்டுகள் ஒரே ஒரு ஞானத்தை ஏற்படுத்தின. மெச்சிமெச்சிப் புகழ்ந்தால் புகழக் கேட்டால் மமதையே மிஞ்சுகிறது என்ற ஞானம் அது.
இதில் மாட்டிக்கொள்ளாமல் விடுபட எப்போதும் முயன்று வரும் நான் தமிழக அரசு பரிசுபெற்றதற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பரிசு பெற்றதற்குக் கூறிய அதே வாக்கியத்தை 1984ல் 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரிலே  எனக்குத் தமிழக அரசு பரிசு கிடைத்ததற்காக நண்பர்கள் நடந்திய விழா ஏற்புரையிலே அன்றே கூறினேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
என்ன செய்வது? எதைச் சொன்னாலும் ஒரு சினிமா மேற்கோள்  தேவையான காலமாகி விட்டது இது.
இதைக் கேட்டுவிட்டு எந்தக் கிரீடம் தலையில் ஏறினாலும் கழற்றி வைத்து விடுகிறீர்கள் என்று அந்த விழாவிலே பாராட்டிப் பேசிய நண்பர் கூறினார். தலை கனத்துவிடும். தலை இருப்பது கனம் சுமப்பதற்காக அல்ல  என்று பதில் சொன்னேன்.
நான் எழுதியானதும் கையெழுத்துப் பிரதியை என் மனைவியிடமும் என் மகளிடமும் வாசித்துக் காட்டும் வழக்கம் இருந்தது. நான் எழுதிய குஷ்கா என்ற சிறுகதையை அவர்களிடம் வாசித்துக் காட்டியபோது நல்ல ரசனையுள்ள அவர்கள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்கள். எனக்கும் கண்ணீர் வந்தது.
பின்னாளில் என் சிறுகதைகளைத் தமது எம்.பில் ஆய்வு செய்த ஒரு பெண்மணி தமக்கு அந்தக் கதையால் கண்ணீர் வந்தது என்று கடிதம் எழுதினார். (தொடரும்)

சாகித்திய அகாடமி இலக்கியச் சந்திப்பில் வையவன்

சாகித்திய அகாடமி இலக்கியச் சந்திப்பில்   வையவன்

ஆந்திரப் பிரதேச அரசு ஆண்டு தோறும் ஆத்ம கௌரவ புரஸ்கார் என்று ஒரு பரிசு அளிப்பதாக அண்மையில் நான் கேள்விப் பட்டேன். எதற்கு அளிக்கப் படுகிறது. யாருக்கு அளிக்கப் படுகிறது என்று தெளிவாக அறிய இயலவில்லை. எனினும் ஆத்ம கௌரவம் என்று ஒரு பரிசுக்கான அந்த அடைமொழி என்னை மிகவும் கவர்ந்தது. -நினைத்துப் பார்த்தால் அதற்காகவே - அந்தப் பரிசை அல்ல-  ஆத்ம கௌரவம் என்ற  அந்தப் பண்பைப் பெறுவதற்காகவே என் வாழ்நாள் முழுதும் செலவழிந் திருப்பதாக எனக்கு அப்போது எண்ணத் தோன்றியது.
13 வயதில் எழுத ஆரம்பித்த நான் வெளிச்சத்திற்கு வந்தது 1959 மே மாதம் 10 தேதியிட்ட  குமுதம் இதழில் வெளிவந்த என்  'வெளிச்சம் விரட்டுகிறது 'என்ற சிறுகதையின் முலம் தான்.
அப்போது எனக்கு 19 வயது. அதற்குள் வாழ்க்கை என்பது என்னவென்று நன்றாகவே விளங்கி விட்டிருந்தது. கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவையார். இனிது இனிது இளமையில் வறுமை என்று நான் கருதுகிறேன் .
வாழ்க்கையின் மதிப்பை வறுமை நன்கு உணர்த்துகிறது. அதைப் பற்றிய விசாலப் பார்வையை வழங்குகிறது.
வியர்வையின் அருமையை ... உழைப்பின் பெருமையை ... போராட்ட உணர்வுகளை மனிதர்களின் மதிப்பை அவர்கள் வகுத்துள்ள மதிப்பீடுகளின்
நன்மையை மற்றும்  அவற்றின் புன்மையையும் விரிவாகப் புலப்படுத்தி வறுமை நேர்முகமாக அனுபவிக்க  வைக்கிறது. அதுவும் உறவினர் நண்பர்கள் என எல்லோராலும் ஏழ்மை காரணமாக இகழ்ச்சியாக ஒதுக்கி வைக்கப் பட்டால் ஒரு தனி பலம் பெற்ற  ஆத்ம கௌரவத்தை நம்முள் ஏற்படுத்துகிறது.
ஒரு வேளை நபருக்கு நபர் அது மாறுபடலாம். எனக்குள் ஏற்படுத்தியதையே நான் குறிப்படுகிறேன்.
வாய்த்த வறுமையைக் கொண்டாடவும் வேண்டாம். அதைக்  குறித்து மனம் சலித்தோ விதியைச் சபித்தோ உழலவும் வேண்டாம். அது வீண் வேலை. ஆழ்ந்து பார்த்தால் அது ஒரு சுய இரக்கத்தின் வெளிப்பாடே. எனினும் நம் வாழ்வில் எங்கிருந்து எல்லாம் தொடங்கின? இதை மறந்துவிடாமல் இருப்பது  அறிவு  வளர வளர வந்த ஞானமாய் முகிழ்க்கும். மாற்றியமைக்கத் தான் வாழ்க்கை. எல்லா உயிர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.    இது என் இளமைப் பருவத்தில் நான் கொண்டிருந்த கருத்து.
எப்படி மாற்றியமைப்பது ? என்னைச் சுற்றிலும் எல்லோரும் அவரவர் மன ஈர்ப்புகளுக்கு ஏற்ப அல்லது சிவசிவசம்போ என்று ஆற்றில் அடித்துச் செல்லும் தன் முனைப்பின்றி  மாறுதலே அற்ற ஒரு போக்கிலும் போய்க்கொண்டிருந்தார்கள். சரி  இது நபருக்கு நபர் வேறுபடும் விஷயம். நான் என்ன செய்வது?
எஸ்.எஸ்.எல்.சியை முடித்து விட்டு என்னென்ன வேலைகள் செய்ய முடியும் என்று பரீட்சார்த்தமாக அலைந்து கொண்டிருந்த ஒரு பருவம் அது.
என் ஏழு வயதிலேயே திராவிட இயக்கப் பற்றுள்ள என் தந்தையார் வாசிப்புப் பழக்கத்தை என்னுள் ஏற்படுத்தி இருந்தார். வாசிக்கும் ஆர்வம் வளர்ந்தோங்கிக்கொழுந்து விட்டெரிந்து கொண்டது.
இன்றைய வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அன்று ஓரிரண்டு வாடகை நூலகங்களும் ஒரு பெரியநூலகமும் இருந்தன. அவற்றில் விவேகானந்தர் முதல் டர்ஜனீவ் டால்ஸ்டாய் டாஸ்டாவ்ஸ்கி கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடல் பகவத் கீதை என  ஏராளமான புத்தகங்கள். பீரோ பீரோவாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்கள்.
பல நாட்கள் அந்த நூலகம் திறக்கப் படும் முன்பே வாசலில் காத்திருந்து நூலகர் பூட்டப் போகிறேன் என்று எச்சரிக்கும் வரை வாசித்த நாட்கள் எத்தனையோ. ஆயினும் என் மனம் ஒரு நூலினை ஒரே ஒரு நூலினை முற்றிலும் என் மனசையும் அறிவையும் உருக்கி வார்த்து மாற்றியமைக்கக் கூடிய ஒரு நூலைத் தேடி அலைந்தது.
புத்தகத்தை மனிதர்கள் தான் உருவாக்குகிறார்கள்.
பிறகு புத்தகம் மனிதனை உருவாக்கித் தொடங்கி விடுகிறது.
இதற்கு ருக்ணவணி வடடிண் டூச்ண்வ புத்தகத்தைப் படித்துவிட்டு உருவான காந்திஜியும் ஈச்ண் இச்ணீடிவச்டூபுத்தகத்தைப் படித்துவிட்டு உருவான லெனினும் என  ஏராளமான சான்றுகளைச் சொல்லலாம். தேடிப்பார்த்தால் உங்களுக்குள்ளே காற்றோட்டமாக நுழைந்து உங்கள் உயிர் மூச்சோடு இணைந்து விட்ட ஒரு புத்தகம் நிச்சயம் இருக்கும். அது கந்தர் சஷ்டிக் கவசமாகவோ பெரிய திருமொழியாகவோ கூட இருக்கலாம். நான் தேடியலைந்த புத்தகம் தானாகவே ஒரு நண்பர்வழியே என்னை வந்தடைந்தது.
விவேகானந்தரின் சம்பாஷணைகள் என்ற புத்தகம்.வாசிக்க வாசிக்க அதன் பரந்த ஞான வெளியாத்திரை என்னை  உயர்த்தி விட்டுக் கொண்டு சென்றது.
இந்த மனித குலம் முழுவதற்கும் நானே ஒரு தந்தை போன்றும் சகோதரன் போன்றும் தாய் போன்றும் மகன் போன்றும் மகள் போன்றும் பால் வேற்றுமை கடந்த ஒரு மனப் பெருமிதத்தை என்னுள் அந்த நூல் தீ மூட்டி வளர்த்தது. அடுத்து வாசிக்கக் கிடைத்தது நமது மகாகவியின் ஒரு மலிவுப் பதிப்புக் கவிதைத் தொகுதி. காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்க நோக்க களியாட்டம் என்று எல்லாத் துன்ப நினைவுகளையும் துச்ச உணர்வுகளையும் விட்டு விடுதலையாக்கி என்னை ஒரு சிட்டுக் குருவியென பாரதி சிறகடித்துப் பறக்க விட்டார்.
எல்லையற்ற விடுதலைஎதுஎன்று எனக்குச் சுட்டிக் காட்டினார்.அந்த இரு நூல்களும்  நீ ஏழையோ கோழையோ அல்ல என்று உணர்த்தின. வாழ்க்கை என்பது பணம் சம்பாதித்துக் குவிப்பது மட்டுமில்லை. ஒரு பதவி அதைவிட்டு மற்றொரு பதவி என்று அலைவதில் இல்லை என்று அவை உணர்த்தின .
ஆத்ம கௌரவத்தின் சம்மட்டி அடிகள் என்னை உருவாக்கின. வாசித்துக் கொண்டே இருந்த நான் சிறுவயசுப் பழக்கத்தைத் தொடர விளையாட்டாகத் தான் எழுத ஆரம்பத்தேன். விளையாட்டாக எழுதி அனுப்பிய கதை பரசுரிக்கப் பட்டு அதற்குச் சன்மானமாகப் பணமும் வந்தது. வெறும் முப்பது ரூபாய் தான். ஆனால் 1959ல் அது ஒரு பெரிய தொகை. குடும்ப கௌரவத்தை நிலை நாட்ட அந்தத் தொகை சற்று உதவியது, குமுதத்தில் வெளிவந்த அந்த சிறுகதையை அண்மையில் காலமான என் நண்பர், இரா.மாணிக்கம் மிகவும் பாராட்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் எனக்குத் தந்த ஊக்குவிப்பு தான் என்னை மென்மேலும் எழுதத்தூண்டியது, என் எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன், கல்கி என்று எல்லாப்பிரபல பத்திரிகைகளிலும் வெளிவந்தன.
உடனே சென்னைக்கு ஓடி வந்து பத்திரிகை பத்திரிகையாகப் படையெடுத்து ஓயாமல் எழுதிப் பரபரவென்று நாடகம் சினிமா என்று அலைந்து பணம் பணமாகக் குவித்து விடவேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. புகழில் வருகிற போதையின் அபாயமும் நல்வினைப்பயனாக எனது இளமைப் பருவத்திலேயே எனக்குப் புலப்பட்டுவிட்டது
வசதியாக இருப்பது ஒரு வாழ்க்கை முறை என்றால் வசதி இன்றி இருப்பது கூட ஒரு வாழ்க்கை முறை தான். இந்த சிந்தனையை எனது முத்தாத்தா முருகையனின் உழுதுவாழ்ந்த வாழ்க்கைப் போக்கிலிருந்து அவர் மறைந்து நாற்பது ஆண்டுகள் கழித்து நான் பெற்றேன்.ஒன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய பல சுகக் கேடுகள். மற்றொன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய சுகக்கேடுகள். சிக்கல்கள்.
இவை எனக்கு விவேகானந்தரும் பாரதியும் உணர்த்திய மனப் பக்குவம். சிந்திக்கிறவனுக்கு  பெரிய வித்தியாசம் தென்படுவதில்லை. என்ன பெரிய வித்தியாசம் என்ற வேதனைச் சிரிப்பு வரும்.
எழுதினால் பணம் வரும். சினிமா வாய்ப்பு வரும். பெரிய சினிமாடைரக்டர் கூட ஆகலாம். சென்னைக்குப் போ என்று நண்பர்கள் வற்புறுத்தினார்கள். பணம் எனக்கு மயக்கம் தரவில்லை. வறுமையில் ஒரு மெய்ம்மை தெரிந்தது. எனது நண்பர்களும் உறவினர்களும் பணம் சம்பாதிக்கப் பெரும்பாடு படுவதும் பணம் வந்ததும் அதல பாதாளச் சீர்கேடுகளில் வீழ்ந்து சிறுகச் சிறுகச் சிறுக அழிந்து வருவதும் விலகி நின்று பார்க்கும் விவேகத்தை எனக்கு வழங்கி இருந்தன.
1955ல் சென்னையை விட்டுச் சென்ற நான் மீண்டும் 1987ல் தான் சென்னைக்கு வந்தேன் அப்போதும் வாய்ப்பு தேடியோ வசதி  நாடியோ வரவில்லை. என் மகளும் என் மகனும் சென்னைக் கல்லூரிகளில் எனது பொருளாதார வசதிக்கு மேம்பட்ட படிப்புகள் படிக்க விதிக்கப் பட்டதால் பெற்றோருடன் இருந்து பழகிவிட்ட அவர்களின் கல்விக்கு  உறுதுணையாக இருக்கவே நான் மீண்டும் சென்னைக்கு வந்தேன்
புலவர்கள் அதுவும் காலத்தால் என்றென்றும் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்ற படைப்புக்களைச் செய்த திருவள்ளுவர் உள்ளிட்ட பெரும் புலவர்கள் எழுதியோ பாடியோ மட்டும் வாழ்க்கையைக் கழித்து விடாமல்  உடல் பூர்வமாக சமூகத்திற்குஉழைக்க வேண்டுமென்று மௌனமாக உணர்த்தியதாக எனக்குப் பட்டது. முழுநேர எழுத்தாளராகப் பலர் இருக்கிறார்கள். நான் அப்படி ஆகி விடவில்லை. ஆக முயன்றதுமில்லை. எழுதி மட்டுமே வாழ முடியும் என்ற தைரியம் இருந்தது. ஆனால்.....
இந்தச் சமூகத்திற்கும் என்னை வளர்த்து உருவாக்கிய பெற்றோருக்கும் அந்தக் காலத்தில் மொழி என்றும் நாடு என்றும் நெஞ்சில் நிலவிய பற்றுக்களுக்கும் நான் பதில் கூறவும்  பட்ட கடனைத் திருப்பச் செலுத்தவும்  கடமைப்பட்டிருப்பதாகவும் கருதினேன். இதெல்லாம் பித்துக்குளித்தனம் என்று எல்லோரும் சிரித்தார்கள். சரி பித்துக்குளியாக வாழ்ந்தால் தான் என்ன கெட்டுப்போயிற்று ? இப்படி நினைத்தேன். கிடைக்கிற எந்தப் பணியையும் உழைப்பையும் மறுக்கும் வழக்கம் எனக்கு இல்லை.
என் தாய் என்னை அப்படி வளர்த்திருந்தார்கள்.
டிக்னிடி ஆப் லேபர் என்று ஒரு மதிப்பீடு  உண்டு. எந்த உழைப்பும் கௌரவமானது தான். எந்த வேலையைச்செய்யவும் தயாராகு.  ‘த யூனிவர்ஸ் ஈஸ் ட்ரையிங் டு க்ரோ யூ  அப் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ்‘  என்று தோன்றும். அப்படி மலேரியா ஒழிப்புத் திட்டத்தில் சர்வேலன்ஸ் இன்ஸ்பெக்டராக எந்த சிபாரிசுமின்றி தானாய் ஒரு வேலை தேடி வந்தது.
     இதனிடையே மளிகைக்கடை ஊழியன், ஜெனரல் ஸ்டோர்ஸ் ஊழியன், துணிக்கடை ஊழியன், வெல்ல மண்டி ஊழியன், செக்ஷன் ரைட்டர், பத்திரிகை ஏஜெண்ட், சைக்கிளில் பேப்பர் போடும் பணி, மாம்பழ வியாபாரம், பயிற்சி பெறாத ஆசிரியப்பணி என்று நான் செய்திருந்த பல பணிகளில் சுதந்திர மனப்பான்மை தானே எனக்குள் வளர்ந்திருந்தது, எனினும் ஒருவகையில் அந்த மலேரியா ஒழிப்புத்திட்டப்பணி மேலென்று கருதினேன்
கிராமம் கிராமமாக சைக்கிளில் போய் மலேரியாக் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டிய சர்வேலன்ஸ் ஊழியர்களை அவர்கள் சோதித்தார்களா என்று பரிசோதிக்கிற வேலை.அந்த வேலையில் இரண்டு லாபங்கள். கிராமம் கிராமமாக மக்களைச் சந்திப்பது. சைக்கிளில் சாலை சாலையாகச் சுற்றி வரும் ஆனந்தம்.
அப்போது யூனிட் ஆபிஸர் ஆக இருந்த மலையாளி ஒருவர் நான் கதை எழுதுவதைக் கேள்விப்பட்டு இந்த வேலை செய்வதாக இருந்தால் கதை எல்லாம் எழுதக் கூடாது என்றார். சற்று கூட யோசிக்காமல் மடமடவென்று அவரிடமே ஒரு காகிதம் வாங்கி ராஜினாமாக் கடிதத்தை எழுதி அவரிடம் நீட்டினேன்
என்ன இது என்று கேட்டார். ராஜிநாமா. கதை எழுதாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டுத்திரும்பியே பார்க்காமல் வெளியேறினேன்லை செய்ய வேண்டும். படிக்கவும் வேண்டும்.(தொடரும்)











முதல் மரியாதை

நான் வெள்ளக்குட்டையிலே பிறந்தேன்.
அது ஒரு மலையோர கிராமம். வாணியம்பாடி என்ற தோல் தொழில் நகரத்திற்கு(புகழ்பெற்ற இஸ்லாமியா கல்லூரியும் அந்த நகரில் தான் உள்ளது) பதினோரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பெரிய கிராமத்தை மூன்று வயதில் பிரிந்து 27வது வயதில் 1967ம் ஆண்டு மீண்டும் மணமானவனாக ஒருவகையில் வெள்ளக்குட்டையின் மாப்பிள்ளையாக மீண்டும் அந்த கிராமத்திற்குத் திரும்பினேன் .இந்த 24ஆண்டு இடைவெளியில் என்னென்னமோ நடந்து விட்டது . அதைப்பற்றி விளக்க எவ்வளவோ இருக்கின்றது .வாழ்க்கையின் முதல் அத்தியாயம் ஆரம்பித்த இடம் என்றென்றும் முதல் மரியாதைக்கு உரியது.  அந்த மரியாதையை அல்லது வணக்கத்தை அறிவித்துவிட்டுப்பதிவுகளைத் தொடங்குகிறேன்.